Skip to main content

பாஜகவின் ஒரே நோக்கம் இதுதான்!!!

Published on 06/07/2019 | Edited on 11/07/2019

கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியமைத்ததிலிருந்தே இந்த மாதிரியான ஒரே நாடு என்பதை வலியுறுத்தும் வகையில் திட்டங்களை மிக தீர்க்கமாக செயல்படுத்தி வருகின்றது. ஒரே நாடு என்பதை வலியுறுத்தும் திட்டங்களின் நோக்கம் என்ன?
 

bjp


ஒரே நாடு, ஒரே வரி...

அதன்படி, ஜூலை 1, 2017 அன்று ஒரே நாடு, ஒரே வரி என்பதை குறிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. கொண்டுவரப்பட்டது. சி.ஜி.எஸ்.டி.(மத்திய வரி), எஸ்.ஜி.எஸ்.டி.(மாநில வரி), ஐ.ஜி.எஸ்.டி. (ஒருங்கிணைக்கப்பட்ட வரி), யூ.டி.ஜி.எஸ்.டி.(யூனியன் பிரதேசங்களுக்கான வரி) என நான்கு வகைகளாக பிரிக்கலாம். இதனால் மாநில வருவாயான மாநில வாட் வரி, பொழுதுபோக்கு வரி, சொகுசு வரி, கொள்முதல் வரி, நுழைவு வரி, விளம்பரங்களின் மேலான வரி, லாட்டரிகள் - சூதாட்டங்கள் மேலான வரிகள் மற்றும் மாநில செஸ்கள், மாநில சர்சார்ஜ்கள் போன்றவை கிடைக்காமல் போனது. மாநிலங்களால் வரிகளை மாற்றியமைக்க முடியும் என்ற உரிமையும் பறிபோனது. 

 

bjp


ஒரே நாடு, ஒரே தேர்தல்...

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தவுடன் நடந்த முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது குறித்து பேசப்பட்டது. அந்த திட்டம் குறித்து பேச ஜூன் 19, 2019 அன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்கும். இதன் மூலம் தேர்தல் செலவைக்குறைக்கலாம் எனக் கூறினர். ஆனால் அதுவும் சரியாக விளக்கப்படவில்லை. மத்தியில் ஆட்சி கலைந்தால், அனைத்து மாநிலங்களிலும் கலைக்கப்படுமா, மாநிலத்தில் ஆட்சி கலைந்தால் மத்தியிலும் கலைக்கப்படுமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இதனால் மாநிலங்களின் தேர்தல் உரிமை பறிபோகும் என்பது மட்டும் ஐயமின்றி வெளிப்பட்டது.



ஒரே நாடு, ஒரே ரேசன்...

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டம் குறித்து ஜூன் மாதம் 28ம் தேதி டெல்லியில் மத்திய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த மாநில உணவுத்துறைச் செயலாளர்கள் கூட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை ஒருங்கிணைத்து, இந்தியா முழுவதிலும் ஒரே குடும்ப அட்டை முறை கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்த திட்டத்தை பொறுத்தவரை மாநில உரிமையின் அடிநாதத்தை அசைத்து பார்க்கும் வேலை. பொதுவிநியோகத்தில் தமிழ்நாடு அடைந்துள்ள முன்னேற்றத்திற்கும், மாநிலங்களின் உணவு பழக்கத்தையும் சிதைக்கவே இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டினர். ஒவ்வொரு மாநிலத்திலும், ஒரு பொருளுக்கான கொள்ளளவு வெவ்வேறாக உள்ளது. இந்த திட்டத்தின்மூலம் அவை ஒழிக்கப்படும். 
 

one nation one ration


உதாரணமாக... தமிழ்நாட்டில் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது, வேறு சில மாநிலங்களில் அரிசி மாநில விலையில் வழங்கப்படுகிறது. சில மாநிலங்களில் அரிசி முக்கிய உணவாக இருப்பதில்லை. தற்போது ஒரே பொதுவிநியோகம் என திட்டம் வகுத்தால், ஒன்று தமிழ்நாட்டிலுள்ள இலவச அரிசி திட்டத்தை ஒழிக்கவேண்டும் அல்லது நாடு முழுவதும் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

வட மாநிலங்களில் அரிசியைவிட, கோதுமையே முக்கிய உணவாக இருக்கிறது, இதனால் அங்கு அரிசியைவிட கோதுமைதான் அதிக கொள்ளளவில் வழங்கப்படும். ஒரே ரேசன் திட்டம் வந்தால் நாடுமுழுவதும் கோதுமை முக்கிய உணவாக நிறுத்தப்படுமா, அரிசி முக்கிய உணவாக நிறுத்தப்படுமா என்ற கேள்வியும் இருக்கிறது. அதேபோல் பொங்கல் பரிசு, இலவச டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் இந்தியா முழுமைக்கும் அறிவிக்கவேண்டும், இல்லையென்றால் அப்படியே விட்டுவிட வேண்டும். இப்படியாக இதுவும் மாநிலத்தின் உரிமையையும், அந்த மக்களின் உணவு மற்றும் அடிப்படை உரிமைகளையும் பறிப்பதாகவே உள்ளது. 


ஒரே நாடு, ஒரே மின்சாரம்...

நேற்று (06.07.2019) நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஒரே நாடு, ஒரே மின்சாரம் திட்டமும் இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், தனித்தனியே மின்சார வாரியம் உள்ளது. இந்த ஒரே மின்சாரம் திட்டத்தால் மாநில அரசின்கீழ் உள்ள பகிர்மான கழகங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு, மத்திய அரசின்கீழ் ஒரே கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்படும். மின்சாரத்தை பொறுத்தவரை சில மாநிலங்கள் தன்னிறைவு அடைந்துள்ளது. இதன்மூலம் உபரி மின்சாரம் அருகிலிலுள்ள மாநிலங்களுக்கு விற்கப்படுகின்றன. அதன்மூலம் மாநில அரசிற்கு வருவாய் வருகிறது.
 

 

one nation one ration


தற்போது இந்த ஒரே நாடு, ஒரே மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்பட்டால் மாநிலங்களுக்கு இடையேயான இந்த வணிகம் கலைக்கப்படும். மேலும், நாடு முழுவதும் ஒரே கட்டணம் அமல்படுத்தப்படுவதால் மின்கட்டணம் குறைந்துள்ள மாநிலங்களில் மின்சார கட்டணம் உயரும் அபாயமும் உள்ளது. தமிழ்நாட்டில் நடைமுறையிலுள்ள 100 யூனிட் மின்சாரம் இலவசம், மின்தறி வைத்துள்ள நெசவாளிகளுக்கான 500 யூனிட் மின்சாரம் இலவசம், விவசாயிகளுக்கான மின் மானியம் இப்படியான பல திட்டங்கள் கலைக்கப்படும். இவையனைத்திற்கும் மேலாக இதிலும் மாநில உரிமை பறிக்கப்படுகிறது. 


ஒரே நாடு, ஒரே மொழி...

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, மாநிலங்கள் அனைத்தும் மொழிகளின் அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை மொழிகளின் அடிப்படையில்தான் கலாச்சாரம், பண்பாடு என அனைத்தும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 22 மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. இணைப்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. இவையனைத்திற்கும் ஒரே அளவு அதிகாரங்கள்தான் உள்ளன. இந்தியாவின் தேசியமொழி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அன்றுமுதல் இன்றுவரை இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்துக்கொண்டே இருக்கிறது. அப்போதிருந்தே இருக்கும் இந்தி திணிப்பு முதல் அண்மையில் கொண்டுவரப்பட்ட மும்மொழிக்கொள்கை வரை அனைத்தும் இதற்கு எடுத்துக்காட்டு. 
 

one nation one ration


இப்படியாக இந்த அரசின் ஒவ்வொரு திட்டமும் மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது. அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்திருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதுதான் மாநில சுயாட்சி, இந்த திட்டங்கள் அனைத்தும் அதை சீர்குலைப்பதாகவே உள்ளது. மேலும்,  இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும் குலைப்பதாகவே உள்ளது. இந்தியா ஒரு துணைக்கண்டம், இந்தியா என்பது நாடு அல்ல அது மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற பாரம்பரியத்தை குலைப்பதாகவே உள்ளது. இந்தியா ஒரு நாடு என்பது ஆர்.எஸ்.எஸ்.ஸின் தத்துவம், அதை செயல்படுத்தவே இந்த பாஜக அரசு முயற்சி செய்கிறது. அதன் காரணமாகத்தான் இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறது. மீண்டும் அதிகாரத்தை மத்தியில் குவிக்க முயற்சி செய்கிறது.

அதைதடுத்து மாநில சுயாட்சியை காக்கவேண்டிய அரசுகளும் அதற்கு தக்க எதிர்வினையாற்றவில்லை. மாநில சுயாட்சியை உயிர் மூச்சாகக்கொண்ட அண்ணாவின் பெயரைக் கொண்டுள்ள கட்சி தமிழ்நாடு அரசாக இருந்தும் போதிய எதிர்வினைகள் முன்னெடுக்கப்படவில்லை. மாநில சுயாட்சியின் மூலம்தான் இந்தியா என்ற துணைகண்டத்தை வலுப்படுத்தமுடியும். இந்தியாவின் பெருமையும் அதில்தான் அடங்கியிருக்கிறது. 

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.