Skip to main content

சோசியல் மீடியாவில் எதிரான கருத்துகள்! பா.ஜ.க.வை உதறும் பா.ம.க.?

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

ramadoss

 

பா.ஜ.க.வுடனான தேனிலவு பா.ம.க.வுக்கு கசந்து விட்டதையே பா.ம.க.வின் செயற்குழுவில் பேசிய டாக்டர் ராமதாசின் பேச்சு உணர்த்துகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. கூட்டணி உருவானது. பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க. தலைவர்களின் ஆதரவு பா.ம.க.வுக்கு இருந்தது. ஆனால், கூட்டணி உருவாகி ஒரு வருடம் கடந்து விட்ட நிலையில் அந்த உறவு கசந்திருக்கிறது என்கிறார்கள்.

 

பா.ம.க.வின் 32-ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு இணையவழி மூலமாக கட்சியின் செயற்குழுவை தைலாபுரம் தோட்டத்திலிருந்து நடத்தினார் டாக்டர் ராமதாஸ். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த அந்த செயற்குழுவில் பேசிய ராமதாஸ், "நம்மை அழிக்க வேண்டுமென்பதற்காக சதி செய்து வருகின்றனர். அந்தச் சதிகாரர்கள் வேறு வடிவில் வருகின்றனர். விஷப்பாம்புகளாக வருகிறார்கள். நம்முடன் பழகி, நம்முடைய கொள்கைகளைப் பேசி, நம்மையே அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்களால் அது எந்தக் காலத்திலும் முடியாது'' என அழுத்தமாகப் பேசியிருக்கிறார்.

 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை குறிப்பிடாமல் அரசியல்ரீதியாக அவரை தாக்கிப்பேசியுள்ள டாக்டர் ராமதாஸ், கல்வி -வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 17 சதவீத தனி இடஒதுக்கீடு வேண்டும்; மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்.

 

pmk

 

பா.ம.க.வை அழிக்கப் பார்க்கிறார்கள் என டாக்டர் ராமதாஸ் ஆவேசப்பட்டிருப்பதன் பின்னணிகள் குறித்து ஆராய்ந்து அதனை அம்பலப்படுத்தி வருகிறது அரசியல் கலப்பில்லாத வன்னியர் சத்திரியர் சாம்ராஜ்யம். இந்த அமைப்பின் தலைவர் பொறியாளர் சி.ஆர்.ராஜனிடம் நாம் பேசியபோது, "பா.ம.க. செயற்குழுவில் சதிகாரர்கள், விஷப்பாம்புகள் என்கிற வார்த்தைகளை உதிர்த்துள்ள ராமதாஸ், பா.ம.க.வை அழிக்க சதி நடப்பதாகவும் சுட்டிக்காட்டுகிறார். 32 ஆண்டுளாக உள்ள ஒரு அரசியல் கட்சியை யாரால் அழிக்க முடியும்? ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களால்தான் முடியும்.

 

மாநிலத்தில் அ.தி.மு.க.வும், மத்தியில் பா.ஜ.க.வும் இருக்கிறது. இவர்களின் கூட்டணியில்தான் ராமதாஸ் இருக்கிறார். அ.தி.மு.க.வில் வலிமையற்ற தலைமை இருப்பதால், பா.ம.க.வை அழிக்க அ.தி.மு.க. நினைக்காது. ஆக, வலிமையாக மத்தியிலுள்ள பா.ஜ.க.வால் மட்டுமே பா.ம.க.வை அழிக்க முடியும். அதற்கான அசைண்மெண்டை பா.ஜ.க. ரகசியமாக துவங்கி விட்டதாகவே எங்களுக்குத் தகவல் வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க.வை குறிவைத்துதான் கடுமையாக பேசியிருக்கிறார் ராமதாஸ்.

 

anbumani ramadoss

 

இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என எதிர்பார்த்தார் ராமதாஸ். ஆனால், பா.ஜ.க. தலைமைக்கும் ராமதாசுக்கும் மீடியேட்டராக செயல்பட்ட ஆடிட்டர், அமைச்சர் பதவி கிடைக்காது என சமீபத்தில் ராமதாசிடம் தெரிவித்து விட்டார். அந்த விரக்தியில் இருந்த டாக்டர் ராமதாசால், சந்தனக்காடு வீரப்பனின் மகள் வித்யாராணியை பா.ஜ.க. மகளிரணியின் துணைத்தலைவராக பா.ஜ.க. தலைமை நியமித்ததையும் ஜீரணிக்க முடியவில்லை. மேலும், பா.ம.க.வின் முன்னணி நிர்வாகிகள் பலரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது பா.ஜ.க. இப்படி பல காரணங்களால்தான் கொந்தளித்திருக்கிறார் ராமதாஸ். அதனால், பா.ஜ.க.வுடனான தேனிலவு ராமதாசுக்கு கசந்து விட்டது'' என பல்வேறு பின்னணிகளைச் சுட்டிக்காட்டுகிறார் சி.ஆர்.ராஜன்.

 

இதுகுறித்து பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணனிடம் கேட்டபோது, "பா.ஜ.க.வுடன் பா.ம.க.வுக்கு எந்த நெருடலும் இல்லை. கூட்டணி உறவு ஆரோக்கியமாக இருக்கிறது. பா.ஜ.க.வும் எங்களைப் பற்றி எந்த மாறுபட்ட கருத்தையும் சொல்லவில்லை. அய்யாவின் செயற்குழு பேச்சு, எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்களைப் பற்றியது. அரசியல் சார்ந்ததல்ல. அய்யா ராமதாஸ், சமூகப் போராளி. கொள்கை சார்ந்த அரசியலே அவருடையது. பா.ம.க.வின் வலிமை பா.ஜ.க.வுக்கு தெரியும். பா.ஜ.க.விடம் எந்த எதிர்பார்ப்பும் பா.ம.க.வுக்கு கிடையாது. கூட்டணியில் பிளவு ஏற்படாதா எனத் திட்டமிடுபவர்களின் எதிர்பார்ப்புகள் நடக்காது'' என்கிறார் அழுத்தமாக.

 

http://onelink.to/nknapp

 

ஆனால், பா.ம.க.வின் ஒரு அங்கமான பசுமைத் தாயகம் அமைப்பின் பொதுச்செயலாளர் அருள் ரத்தினத்தின் முகநூல் பதிவு பா.ஜ.க.வை சீண்டுவதாகவே இருக்கிறது. தனது முகநூல் பக்கத்தில், "வன்னியர்களுக்கு 17 சதவீத இடஒதுக்கீடு வேண்டுமென பா.ம.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை எச்.ராஜா, துக்ளக் குருமூர்த்தி ஆகியோர் ஆதரிக்கிறார்களா? எதிர்க்கிறார்களா? என்பதை விளக்க வேண்டும். பகிரங்கமாக ஆதரிக்க மறுத்தால், அடியாள் வேலைக்கு மட்டும் வன்னியர்கள் வேண்டும்; ஆபீசர் வேலைக்கு வன்னியர்கள் வேண்டாம் எனக் கருதுவதாக எடுத்துக்கொள்ள வேண்டும்' எனக் காட்டமாகச் சொல்லியிருக்கிறார்.

 

மேலும், பா.ம.க.வைப் போல வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்து பா.ஜ.க.வும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் அழுத்தமாக பதிவிடுகிறார் அருள்ரத்தினம். இவரது பதிவுகளை, அன்புமணியின் குரலாகவே பா.ம.க.வினர் பார்ப்பதால், பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துகளை சோசியல் மீடியாக்களில் பதிவு செய்து வருகின்றனர் பா.ம.க.வினர். இதனால், தமிழக அரசியலில் ஒருவித பரபரப்பு எதிரொலிக்கத் துவங்கியிருக்கிறது.

 

 

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.