Skip to main content

"பாஜகவுக்கு கட் அவுட் , காங்கிரஸூக்கு கெட் அவுட்" குஜராத்தில் 32 வருட காங்கிரஸ் சாதனை முறியடிப்பு

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

கத

 

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜகவே இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக வெளியாகி வருகிறது. குஜராத்தில் அதிகபட்சம் 120 இடங்களில் வரை பாஜக கைப்பற்றும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு வரலாற்று வெற்றியை பாஜக பதிவு செய்துள்ளது. இதுவரை ஆறு முறை தொடர்ந்து ஆட்சியிலிருந்தாலும் இதுவரை கண்டிராத வெற்றியை முதல் முறையாக பாஜக பெற்றுள்ளது. 

 

கடந்த தேர்தலில் தலை தப்பியதே தம்பிரான் புண்ணியம் என்று காங்கிரஸிடம் போராடி 99 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை 160 தொகுதிகளில் முன்னணியிலிருந்து வருகிறது. காங்கிரஸ் 77 இடங்களில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றிருந்த நிலையில் மாநிலத்தில் இந்த முறை பாஜகவால் துடைத்தெறியப்பட்டுள்ளது. இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறுவதற்கே அங்கே காங்கிரஸ் போராடி வருகிறது. குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் பாஜகவுக்கு இந்த முறையும் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்றே அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறியிருந்ததே தவிர இத்துணை பிரமாண்ட வெற்றி கிடைக்கும் என்று பாஜக தரப்பே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவுக்கு இந்த வெற்றியைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். 

 

குறிப்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததைப் போல் குஜராத்தில்  நடைபெறாது என்று என்ன நிச்சயம் இருக்கிறது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகையில் வரலாற்று வெற்றியை ஈட்டி பதிலடி கொடுத்துள்ளது பாஜக. குஜராத்தில் பாஜக எப்போது பெறும் வெற்றியை விட இந்த முறை பல்வேறு சாதனையுடன் கூடிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆறு முறை பாஜக தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி செய்திருந்தாலும் இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 150 தொகுதிகளைக் கடந்து பாஜக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இத்தகைய வரலாற்று வெற்றியை இதற்கு முன்பு 1985ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 149 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி இந்த சாதனையைச் செய்திருந்தது. ஆனால் அந்த சாதனையைப் போகிற போக்கில் கடந்து வரலாற்று வெற்றியை இந்த முறை பாஜக செய்துள்ளது. சுமார் 32 ஆண்டுகளாக முறியடிக்க முடியாத சாதனையாக இருந்த காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றியை இந்த முறை பாஜக முறியடித்திருக்கிறது. அதே வேளையில் குஜராத்தில் காங்கிரஸ் சரிவு 1990ம் ஆண்டும் நடைபெற்ற தேர்தலிலிருந்தே ஆரம்பிக்கிறது. யாரும் தொட முடியாத வெற்றியை 5 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற காங்கிரஸ் கட்சி 90ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மூன்றாம் இடத்திற்குச் சென்றது. 

 

ஜனதா தளம் 77 தொகுதிகளில் வெற்றிபெற்று முதல் இடத்திலும், பாஜக 67 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்திலும், 33 இடங்களில் வெற்றிபெற்று கடைசி இடத்திற்கும் சென்றது. இதில் ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வு என்னவென்றால் 38 லட்சம் வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு 33 தொகுதிகளில் மட்டுமே வெற்றி சாத்தியமானது.  34 லட்சம் வாக்குகள் பெற்ற பாஜக 67 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதைப்போலவே 37 லட்சம் வாக்குகள் பெற்று ஜனதா தளம் 77 இடங்களில் வெற்றிபெற்றது. எனவே இன்றைக்கு மட்டும் அல்ல, கடந்த 35 ஆண்டுகளாகக் குஜராத்தின் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு ஆதரவாக என்பதை விடக் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இருந்துள்ளதை நாம் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

 

அதன் நீட்சியாகவே இந்த தேர்தல் முடிவுகள் இருப்பதை உணர முடிகிறது. ஆனாலும் பாஜகவின் இந்த வெற்றி என்பது மற்றொரு முறை வேறு எந்த மாநிலத்திலும் எதிர்காலத்தில் அவ்வளவு எளிதில் பெற முடியாத வெற்றியாகவே இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த வெற்றி மூலம் இந்தியாவில் இதற்கு முன்பு மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமே தொடர்ந்து 7 முறை ஒரு மாநிலத்தில் ஆட்சியிலிருந்து சாதனை புரிந்திருந்தது. அந்த சாதனையை தற்போது பாஜக சமன் செய்துள்ளது. எனவே இந்த வெற்றி என்பது அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பூஸ்ட் ஆக இருக்கும் என்று பாஜகவினர் கூறுவதை நம்மால் கேட்ட முடிகிறது. எனவே குஜராத் வெற்றி அடுத்த ஆண்டு நடைபெறும் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தலுக்கு புதிய உற்சாகத்தை வழங்கும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது. 

 


 

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Mamata says PM Modi should look at himself in the mirror

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, ​​பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத் தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.