Skip to main content

தலைவா பட பாணியில் பிகிலுக்கு சிக்கல்!  -அதிர்ச்சியில் விஜய்

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

 

                          நடிகர் விஜய்யின் தலைவா பட பாணியில் தற்போது அவருடைய பிகில் படத்திற்கும் சிக்கல் முளைத்திருக்கிறது. இதனால், நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் அதிரிச்சியில் இருக்கிறார்கள். 

         ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ’ அரசியல் ‘ செய்து வரும் நடிகர் விஜய், அவ்வப்போது ஆளும் எடப்பாடி அரசை அட்டாக் பண்ணி வருகிறார். அட்லீயின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, சமீபத்தில் நடந்த பிகில் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் ஆளும் கட்சிக்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்து கைத்தட்டல் வாங்கினார் விஜய்.  இதனையடுத்து ஏகத்துக்கும் விஜய் மீது கடுப்பில் இருக்கிறது எடப்பாடி அரசு. 

 

actor vijay

       


அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர் விஜய் ஆளும் கட்சியை பகைத்துக்கொள்வது புதிதல்ல. அவர் நடித்த காவலன் படம் வெளி வரும் நேரத்தில் திமுக ஆட்சியில் இருந்தது. கலைஞரின் மகன் மு.க.அழகிரியின் மகனின் திரைப்பட நிறுவனம் விஜய்க்கு தொல்லைக் கொடுத்தது. இதனால் அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்தது. 

 

         
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை விஜய்யும் அவரது தந்தை சந்திரசேகரும் சந்தித்து உதவும்படி கேட்டனர். ஜெயலலிதாவும் ஆதரவு தந்தார். பட்டம் ரிலீஸானது. இதற்கு பிரதிபலனாக, தேர்தலில் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என ஜெயலலிதா வைத்த கோரிக்கையை விஜய் தரப்பு ஏற்றது. ஆனால், புத்திசாலியான சந்திரசேகர், 2011 சட்டமன்ற தேர்தலில் விஜய்யை தேர்தல் களத்தில் இறக்காமல் விஜய் ரசிகர் மன்றத்தை மட்டும் அதிமுகவுக்காக தேர்தல் பணி செய்ய பணித்தார். ரசிகர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டதோடு அதிமுகவுக்காக வாக்களிக்கவும் செய்தார்கள். 

              2011 தேர்தல் வெற்றிக்குப் பிறகு, விஜய்யின் ரசிகர் மன்றத்தால்தான் அதிமுக ஜெயித்தது என சந்திரசேகர் கொளுத்திப்போட டென்சன் ஆனார் ஜெயலலிதா. விஜய்க்கு எதிராக கம்பு சுழற்றுமாறு அதிமுகவினருக்கு கட்டளையும் போயஸ்கார்டனிலிருந்து கட்டளையும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் நொந்து போனார்கள் விஜய்யும் அவரது தந்தையும். 

          இந்த சூழலில்தான் தலைவா படத்துக்கு கமிட் ஆனார் விஜய். ஜெயலலிதா மீதிருந்த கோபத்தை தலைவா படத்தில் பல காட்சிகள் மூலம் சீண்டியிருந்தார் விஜய். சந்திரசேகரனின் யோசனையின் பேரில் அத்தகைய காட்சிகள் புகுத்தப்பட்டிருந்தன. தலைவா – டைம் டு லீட் என்கிற துணை தலைப்பும் விஜய்யின் ஆலோசனையின் படி இணைக்கப்பட்டது. ( தலைவா படத்தின் நோக்கம், அதன் பின்னணி குறித்து நக்கீரன் தான் முதன் முதலில் அம்பலப்படுத்தியது )   
 

             இதனையடுத்து, தலைவா படம் ரிலீஸ் தேதி குறிக்கப்பட்ட நிலையில், படம் வெளியாகும் முதல்நாள் அப்படத்தை வெளியிட முடியாத சூழலை உருவாக்கி, தலைவா-வுக்கு சிக்கலை ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு. இதனால் ஏகத்துக்கும் அதிர்ச்சியடைந்த விஜய்யும், அவரது தந்தை சந்திரசேகரும் போயஸ்கார்டனுக்கும் கொடநாடுக்கும் சென்று ஜெயலலிதாவை சந்திக்க  தவம் இருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களை சந்தித்தார் ஜெயலலிதா. 

               அவர்களுக்கு ஜெயலிதா கொடுத்த ஓவர் டோஸில் ஆடிப்போனார்கள் தந்தையும் மகனும். அவர்கள் ஜெயலலிதாவிடம் மன்னிப்புக் கேட்க, அதன்பிறகே, குறிப்பிட்ட  பல காட்சிகள் கட் செய்யப்பட்டு படம் ரிலீஸானது.  இப்படி ஆளும் கட்சியோடு மோதி, பல சிக்கல்களை தனது படத்துக்கு எதிர்கொண்டவர் விஜய். அந்த வரிசையில் தற்போது பிகில் !   

  
              தலைவா படத்துக்கு ஏற்பட்ட சிக்கலை அடுத்து கொஞ்ச காலம் அரசியலே வேண்டாம் என அமைதியாக தனது தொழிலை மட்டும் கவனித்து வந்தார் விஜய். இந்த நிலையில், தற்போது கலைஞரும் ஜெயலலிதாவும் இல்லாத சூழலைப் பயன்படுத்தி மீண்டும் அரசியல் செய்ய துணிந்திருக்கிறார் நடிகர் விஜய். அதன் வெளிப்பாடுதான் பிகில் பட ஆடியோ ரிலீஸ் விழாவில் அதிமுக ஆட்சியையும் அதன் தலைவர்களையும் மறைமுக விமர்சித்திருப்பது. 
 

         நடிகர் விஜய்யின் பேச்சு ஆளும் கட்சியை கடுப்பாக்க, ஜெ.பாணியில் பிகில் படத்துக்கு சிக்கலை உருவாக்க அனைத்து செயல்திட்டங்களையும் போட்டுக்கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. பிகில் படத்தின் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மூலம் பிரச்சனை ஏற்படுத்த காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் விநியோகஸ்தர்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் அரசாங்கத்தை எப்படி பகைத்துக்கொள்வது என்கிற எண்ணம் வந்திருக்கிறது. இதனையடுத்து பல கட்ட ஆலோசனைகள் அவர்கள் தரப்பில் நடந்து வருகின்றன. மேலும், சென்சார் போர்டிலும் ஆளும் தரப்பு மூக்கை நுழைத்திருக்கிறது. இதனால் 8.10.2019 வரை சென்சார் செய்வதற்கான பட்டியலில் பிகில் படம் இடம்பெறவில்லை. இதனால் நொந்து போயிருக்கும் நடிகர் விஜய், திட்டமிட்டபடி பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில்தான் தனது கௌரவம் இருப்பதாக சொல்லி வருகிறாராம்.



 

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.    

Next Story

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
lollu sabha actor seshu passed away

சின்னத்திரையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து லொள்ளு சபா சேஷு, எனப் பெயர் பெற்றவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ1, குலு குலு எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும் “அச்சசோ அவரா... பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. மேலும் வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். 

கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சேஷூ உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.