Skip to main content

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் தொடக்கம்... அமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு...

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

உலக மொழிகளுள் தொன்மையான மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது.  அம்மொழியை தன் உயிருக்கு நிகராக போற்றி, அதன் வழியே பல அரிய கருத்துகளைக்கூறி தமிழர் வாழ்வில் சுடரொளி ஏற்றியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!
 

அமெரிக்காவின் முதல் மாநிலமாம் டெலவரில்,  புரட்சிக் கவிஞரின் 129வது பிறந்தநாள் விழாவில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் 20 ஏப்ரல் 2019 (சித்திரை 7, தி.ஆ. 2050) அன்று இனிதே தொடங்கப்பெற்றது!
 

மன்றத்தின் முதற்கண் தமிழ்த்தாயை வாழ்த்தி நிகழ்ச்சி தொடங்கியது.  விழாவை தொகுத்து வழங்கினார் விழாக்குழுவில் ஒருவரான திருமிகு. இராஜ்குமார் களியபெருமாள். விழாவிற்கு வந்திருந்த சான்றோர்கள், குழுமியிருந்த மக்கள் மற்றும் சிறார்களை திருமிகு. பிரிசில்லா ரேபன் தன் இனிய சொற்களால் வரவேற்றார்.
 

நற்றொடக்கத்தின் அடையாளமாக வடஅமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர். முத்துவேல் செல்லையா, பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் வாசு அரங்கநாதன் மற்றும் நியூயார்க் தமிழ்க்கல்விக் கழகத்தின் தலைவர் முனைவர். பாலா சுவாமிநாதன் அனைவரும் இணைந்து புரட்சிக்கவிஞர் படத்தை திறந்து வைத்து சிறப்பித்தனர். மன்றம் தொடங்கியதன் நோக்கம், அதன் பயன்களை பற்றி விவரித்து விளக்கினார் விழாக்குழுவில் ஒருவரான திருமிகு. துரைக்கண்ணன் சுந்தரக்கண்ணன்.

 

barathidasan


விழாவின் தொடக்கமாக சிறார்களுக்கான ஓவியப்போட்டி இருப்பிரிவுகளாக நடைப்பெற்றது.  7 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும், 8 வயது முதல் 11 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு பிரிவாகவும் கலந்து கொண்டு பாரதிதாசனின் படத்தை வரைந்து வந்திருந்த மக்களை வியப்பிற்குள்ளாக்கினர்.  முதற்பிரிவில் செல்வன். துருவேஷ் முதல் பரிசையும், செல்வன். ஆதித் இராஜ்குமார் இரண்டாம் பரிசையும் , ஜெசிகா ரேபன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.  8 வயது முதல் 12 வயதிற்கு உட்பட்ட 2வது பிரிவில் செல்வன். கெளதம்ராஜ் புவனேஷ் முதல் பரிசையும், செல்வன். அறிவாற்றல் இராஜ்குமார் இரண்டாம் பரிசையும், செல்வி. கனிஅன்பு துரைக்கண்ணன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.


"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்" என்ற கவிஞரின் பாடலுக்கு சிறுவர்கள் நடனமாடி மக்களின் பாராட்டை பெற்றனர். இந்நடனத்துக்கு  சலங்கை நடனப்பள்ளியின் ஆசிரியர் திருமிகு. இந்துமதி கோபாலக்கிருஷ்ணன் வடிவமைத்து,  பயிற்சி அளித்து மேடையேற்றினார்.


பின்னர் பெரியவர்களுக்காக நடந்த பேச்சுப்போட்டியில் பலர் கலந்து கொண்டு பாரதிதாசன் ஒரு புரட்சிக்கவி, பாவேந்தரும் பைந்தமிழும், இந்திய விடுதலையும் பாரதிதாசனும் என்ற தலைப்புகளின் கீழ் பேசினார்கள்.  விழாவில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிக்கு முனைவர். முத்துவேல் செல்லையா,  முனைவர். பாலா சுவாமிநாதன் மற்றும் முனைவர். திரு. வாசு அரங்கநாதன் ஆகிய மூவரும் நடுவர்களாக இருந்து விழாவை சிறப்பித்து கொடுத்தனர்.  இதில் முதல் பரிசு திருமிகு. மெர்லின் தீபன், இரண்டாம் பரிசு திருமிகு. பிரிசில்லா ரேபன், மூன்றாம் பரிசு திருமிகு. விஜயலக்ஷ்மி மற்றும் திருமிகு. நரசிம்மன் ஆகியோருக்குக் கிடைத்தது.

barathidasan



திருமிகு. விஜய் அவர்களின் ஒருங்கிணைப்பில் வாசிங்டன் மரபிசைக்குழு பம்பை, தவில் போன்ற தமிழ் மரபுக்கருவிகளைக் கொண்டு இசை விருந்து அளித்தனர். தொடர்ந்து டெலவர் கலைக் குழுவும், அடவு கலைக் குழுவும் இணைந்து  முழங்கிய பறையிசை நிகழ்ச்சி நடந்தது. இதனை திருமிகு. ஹென்றி மற்றும் திருமிகு ரமா அவர்கள் ஒருங்கினைத்து பயிற்சி அளித்தனர்.


பின்னர் கவிஞர் வாழ்வியல் தொடர்பாக  மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான திரு. பிரசாத் பாண்டியன் பதிலளித்துப் பேசினார்.


விழாவில் சிறப்பு விருந்தினரில் ஒருவரான பென்சிலவேனியா பல்கலைகழகம், தெற்காசியத்துறையின் தமிழ்ப் பேராசிரியர் திரு.வாசு அரங்கநாதன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது.  தமிழியக்கம் என்ற தலைப்பில் திரு. பன்னீர்செல்வம் இராசமாணிக்கம், இயற்கை என்ற தலைப்பில் திரு. தீபக் மோகனகிருஷ்ணன், சமூகம் என்ற தலைப்பில் திரு. கிருஷ்ணன் பழனிச்சாமி, கல்வி என்ற தலைப்பில் திருமிகு. செந்தில்முருகன் வேலுச்சாமி மற்றும் பெண்ணியம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் ம.வீ.கனிமொழி ஆகியோர் சிறப்பாகப் பேசினார்கள்.


பாரதிதாசனின் சிந்தனைகளை பற்றி முனைவர். முத்துவேல் செல்லையா சிறப்புரையாற்றினார்.  அதன்பின் பாரதிதாசனின் தமிழ்ச்சுவையை பற்றி முனைவர். பாலா சுவாமிநாதன் சிறப்புரையாற்றினார்.


பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் டெலவரில் உள்ள "ரஜினி தென்னிந்திய உணவகம்" மதிய உணவை வழங்கி சிறப்பித்தது. விழாக்குழுவில் ஒருவரான  திருமிகு.பிரசாத் பாண்டியன். நன்றியுரை வழங்கிய பின் விழா இனிதே நிறைவடைந்தது.  

 

 

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.