Skip to main content

தமிழகத்தில் 'பாரத்நெட்' திட்டம் ரத்து! எடப்பாடியின் கனவு 'பணால்'!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020


 

bharat net project cancelled union government cm palanisamy

 

தமிழகத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள் என்கிற பாரத் இணைய சேவை திட்டத்தின் டெண்டரை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. பாரத் நெட் இணைய சேவை மூலம் தமிழ்நாட்டில் 55,000 கி.மீ தொலைவுக்கு ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் அமைப்பதற்கு மத்திய அரசு ரூ.1,950 கோடி நிதி ஒதுக்கியிருந்தது. பாரத் இணைய சேவை திட்டம் மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களுக்கு பிராட்பேண்ட் தொடர்பை உருவாக்குவதே இதன் நோக்கம். இந்தத் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தி மாநகராட்சி, நகராட்சி,  பேரூராட்சிகளில் தரைவழி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் வசதியை 55,000 கி,மீ தொலைவுக்குச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலம் 12,524 கிராம ஊராட்சிகளுக்கு ஒரு வினாடிக்கு ஒரு ஜி.பி. அளவு வேகத்துடன் கூடிய இணைய வசதி கிடைக்கவிருந்தது.

 

இந்த நிலையில், இதற்கான டெண்டரை கடந்த டிசம்பரில் அறிவித்தது எடப்பாடி அரசு. இந்தியாவைச் சேர்ந்த ஒரு முக்கிய நிறுவனத்துக்கும், வெளி நாட்டைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்துக்கும் இந்த டெண்டரை கொடுப்பதற்கான முடிவை எடுத்திருந்தனர். அதற்கேற்ப டெண்டர் விதிகளைத் திருத்தம் செய்ய, தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் தமிழ்நாடு கண்ணாடி இழை கேபிள் கழகத்தின் உயரதிகாரிகளுக்கு அழுத்தம் தந்தனர் ஆட்சியாளர்கள். ஆனால், அதிகாரிகள் ஒப்புக் கொள்ளாததால் அவர்கள் மாற்றப்பட்டனர். இந்த நிலையில், இந்த டெண்டரில் ஊழல் நடப்பதாகக் குற்றம்சாட்டிய 'அறப்போர் இயக்கம்', அது தொடர்பாக, மத்திய வர்த்தக அமைச்சகம், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறை (DPITT), மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றிற்குப் புகார் அனுப்பியியது. அந்தப் புகாரின் மீது விசாரணையை துவக்கியது மத்திய அரசு. மேலும், இது தொடர்பாக, விளக்கம் அளிக்கவும் எடப்பாடி அரசுக்கு உத்தரவிட்டது மத்திய அரசு. 

 

ஆனால், இந்த விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், கடந்த வாரம் டெண்டரை இறுதி செய்து குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு காண்ட்ராக்டை ஒதுக்க திட்டமிட்டு டெண்டரை திறக்க முடிவு செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனை அறிந்த மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் துறையின் அதிகாரிகள், டெண்டரை நிறுத்துமாறு கடைசி நேரத்தில் கடிதம் அனுப்பினர். இதனால் டெண்டர் திறக்கப்படவிருந்த கடைசி அரை மணி நேரத்திற்கு முன்பு சம்மந்தப்பட்ட டெண்டருக்கு தடை விழுந்தது. தடை ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார் முதல்வர் எடப்பாடி! தற்காலிக தடை தான் என நம்பினார் அவர். இந்த நிலையில், இந்தத் திட்டத்தில் நடந்துள்ளவைகளை முழுமையாக விசாரித்த மத்திய வர்த்தகத்துறை, டெண்டரில் விதி முறைகள் முறையாக பின்பற்றவில்லை என்று சொல்லித் திட்டத்தை தற்போது ரத்து செய்திருக்கிறது. 1,950 கோடி ரூபாய் திட்டத்தில் முதல்வர் எடப்பாடி கண்ட கனவு பணால் ஆனதில் அவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் அப்- செட்டாகியிருக்கிறார்கள்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பரபரப்பு கடிதம்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
letter of retired IAS, IPS officers to Election Commissioner
தலைமை தேர்தல் ஆணையர்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இந்நிலையில், தேர்தல் நேரத்தில் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என 87 பேர் சார்பில் கூட்டாக கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், “எதிர்க்கட்சியினர் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசை கண்டு தேர்தல் ஆணையம் மவுனமாக இருக்கக்கூடாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 324 ஆவது பிரிவின்படி வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர் மற்றும் சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். மத்திய அரசை போல மாநில அரசும் தங்கள் விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினால் இத்தககைய செயல் அராஜகத்தில் முடியும். இது தேர்தல் நேரத்தில் பெரும் குழப்பங்களை விளைவிக்கும்.

ஊழலை ஒழிப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியினரை மத்திய அரசு பழிவாங்குவது தவறு. இது குறித்து தேர்தல் ஆணையம் தங்கள் கடமையை மறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி எழுப்பிய சந்தேகங்களை போக்க தேர்தல் ஆணையம் எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டது” எனத் தெரிவித்துள்ளனர். 

Next Story

‘தமிழ்நாடு எதிலும் முதலிடம்’ - மத்திய அரசின் தரவுகளுடன் சுட்டிக்காட்டிய திமுக!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
'Tamil Nadu is number one' - DMK pointed out with central government data

மத்திய அரசின் சார்பில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனைச் சுட்டிகாட்டி திமுக சார்பில், ‘தமிழ்நாடு எதிலும் முதலிடம். ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சி’ என்ற தலைப்பின் கீழ் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணி பெண்கள், சுகாதார நிறுவனங்கள் வழங்கும் பயன்கள். மகப்பேற்றுக்கு பின் கவனிப்பு, கணினி பொருள்கள் ஏற்றுமதி, இந்தியாவில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகிய ஏழு பிரிவுகளின் ஆய்வுகள் குறித்த அறிக்கைகள் ஒன்றிய அரசு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் தமிழ்நாடு மாநிலமே சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கைகளும் வரைபடங்களும் தெளிவுபடுத்துகின்றன.

அதன்படி உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள் குறித்து ஒன்றிய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. மாநில அரசுகள், ஒன்றிய நிர்வாகப் பகுதிகள் அனைத்தையும் குறித்த ஆய்வுகளில் நிதி ஆயோக் நிறுவனம் மாநில வாரியாக நிலைமைகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைகள், வரைபடங்கள் மூலம் 80 முதல் 100 மதிப்பெண்கள் வரை பெற்று தமிழ்நாடே முதலிடம் பெற்றுள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. பொறியியல் சார்ந்த பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு குறித்த 2022 - 2023 ஆம் ஆண்டின் அறிக்கையை ஒன்றிய அரசின் தேசிய நிர்யாத் வெளியிட்டுள்ளது. இறக்குமதி ஏற்றுமதி பதிவுகள் குறித்து 2022 - 2023 ஆம் ஆண்டிற்கான விவரங்களை நிர்யாத் என்ற ஒன்றிய அரசு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய நாடு முழுவதும் செய்துள்ள ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 16.30 சதவீத பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் மராட்டிய மாநிலத்தை அடுத்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.

'Tamil Nadu is number one' - DMK pointed out with central government data

கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரம், தேசிய ஏழ்மைக் குறியீடுகள் குறித்த 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில், கர்ப்பிணிப் பெண்கள் சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் பராமரிப்புடன் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில், குஜராத் 12.72 புள்ளிகளையும், பீகார் 29.75 புள்ளிகளையும், உத்தரப்பிரதேசம் 30.03 புள்ளிகளையும் பெற்று தமிழ்நாடே முதலிடம் என்பதைப் பறைசாற்றுகிறது.

ஆண்டு வாரியாக சுகாதார ஆய்வு மக்கள் தொகை ஆணையர் மற்றும் தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் முக்கியப் புள்ளியியல் பிரிவு ஆய்வுகளின் படி, நாட்டில் நடைபெறும் பிரசவங்களில் மருத்துவமனைகளில் பாதுகாப்புடன் நடைபெறக்கூடியது தமிழ்நாட்டில் தான் அதிகம். அதாவது 99 சதவீதப் பிரசவங்கள் மருத்துவமனைகளில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் தான் நடைபெறுகின்றன என்று தமிழ்நாடு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. குழந்தை பிறந்த பின் சிசு கவனிப்பில் அனைத்து வசதிகளுடனும் குழந்தைகளைப் பராமரித்துக் காப்பதிலும் தமிழ்நாடுதான் முன்னணியில் உள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான சமூக முன்னேற்றக் குறியீடுகள் பற்றிய ஆய்வில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 89.9 சதவீதங்களைப் பெற்று முன்னணி மாநிலமாகத் திகழ்வதாக கூறப்பட்டுள்ளது. 

'Tamil Nadu is number one' - DMK pointed out with central government data

இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் பெரிதும் துணைபுரிவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள். இதில் தமிழ்நாடு மாநிலம்தான் அதிக அளவில் 50 சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பெருக்கி இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை இதைப் புலப்படுத்தியுள்ளது. மோடி ஆட்சி செய்த குஜராத் மாநிலத்தில் 21 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மட்டுமே உள்ளன. இப்படி, தமிழ்நாடு எதிலும் முதலிடமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு சிறப்புகளையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தமிழ்நாடு எய்தியுள்ளதற்கு ஒன்றிய அரசின் ஆவணங்களே சாட்சியாகும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் தத்துவமே இந்தியாவின் எழுச்சிக்கு வழிகாட்டியாக விளங்குகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.