Skip to main content

தாய்ப்பால் கொடுத்தால் தாய்க்கு என்ன ஆகும்...

Published on 03/08/2018 | Edited on 03/08/2018
mother feeding


 

மனிதகுலத்தின் மிகப்பெரிய மாமருந்து, பிறந்த குழந்தைகளுக்கான மிகச்சிறந்த உணவு தாய்ப்பால்தான். அதனால்தான் அதை திரவ தங்கம் என அழைக்கின்றனர். பொதுவாக குழந்தைகளுக்கு ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் அவசியம். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குழந்தைகள் சிறப்பாக செயல்பட தாய்ப்பால் அவசியம் என்பதை பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. தாய்க்கும், குழந்தைக்குமான பாசத்தையும் இது பெருக்குகிறது. சர்வதேச அளவில் தாய்ப்பால் இல்லாமல் வருடத்திற்கு ஒரு கோடி குழந்தைகள் இறக்கின்றன. பசும்பாலில் கொழுப்புச்சத்து அதிகமாக இருப்பதால் அது குழந்தையின் உள்ளுறுப்புகளுக்கு அதிக வேலையை கொடுக்கும். பெண்களால் மட்டுமே செய்யக்கூடிய செயல்களில் இதுவும் ஒன்று. இவையெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் தாய்க்கும் இது பல நன்மைகளை அளிக்கிறது.
 

 

 

தாய்ப்பாலால் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகளுக்கு நிகரான நன்மைகள் தாய்க்கும் ஏற்படுகிறது. மார்பக புற்றுநோய் உள்ள பெண்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெரிதும் குறைகிறது. கருப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் இது குறைக்கிறது. கருவுற்று இருக்கும்போதும், குழந்தை பிறந்தவுடனும் தாயின் எடை கூடும், தாய்ப்பால் கொடுப்பதால் அழகு கெட்டுவிடும் என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் உண்மையில் தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் எடை குறையும், கருவுறுவதற்கு முன்பிருந்த உடல்வாகை திரும்பப்பெறுவார்கள். உண்மையில் தாய்ப்பால் சுரக்கும் அளவிற்கும், மார்பகத்தின் அளவிற்கும் சம்மந்தமே இல்லை. மார்பக திசுக்களின் எண்ணிக்கையும், அது தூண்டப்படும் விதமும்தான் தாய்ப்பாலின் அளவை நிர்ணயிக்கின்றன. அதனால் தாய்மார்கள் பயப்பட தேவையில்லை. மாதவிடாய் ஏற்படும் காலத்தை தாமதப்படுத்துகிறது, இரத்த இழப்பையும் சரிசெய்கிறது.
 

 

 

உளவியல் ரீதியான பல காரணங்களும் உள்ளன. தாய்க்கும், சேய்க்குமான உறவு வலுப்படும், மனநிம்மதி கிடைக்கும். இப்படி தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல தாய்மார்களுக்கும் பல நன்மைகள் உண்டாம். இந்த விஷயத்தில் ஆண்கள் உணர வேண்டியதும் இருக்கிறது. ஒரு பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதென்பது மிக இயல்பான, தேவையான ஒரு செயல். அவள் அதை எந்த இடத்திலும் கொடுப்பதற்கான சங்கடமின்மையை ஆண்கள் ஏற்படுத்தி தர வேண்டும். அரசு, பேருந்து நிலையங்களில் தாய்ப்பால் மையங்களை அமைத்திருக்கிறது. இருந்தாலும் அவை கூட தேவையில்லாத அளவுக்கு மனமாற்றம் வேண்டும். சமீபத்தில் கேரள பத்திரிகை ஒன்றில் ஒரு பெண் தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம் அட்டைப்படமாக வந்தது. அதற்கு எழுந்த எதிர்ப்பும் சர்ச்சைகளும் அந்த மனமாற்றம் ஏற்படவில்லை என்பதை காட்டுகின்றன.  

 

 

 

 

 

Next Story

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழப்பு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
6-year-old boy lost their live in private college bus crash

நாமக்கல்லில் தனியார் கல்லூரி பேருந்து மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஈரோடு சாலையில் உள்ள  தோட்ட வாடி கிராமத்தில் உள்ள பேருந்து நிலைய பகுதியில் கூட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய 6 வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்திற்குப் பின்புறம் வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 6 வயது சிறுவன் தலை நசுங்கி உயிரிழந்தார். தந்தை சதீஷ்குமாரின் கை முறிந்து துண்டானது.

இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்த, உடனடியாக அங்கு வந்த போலீசார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி  பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்தப் பகுதிகளில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், அந்த நேரத்தில் தனியார் பேருந்துகள் மிகுந்த வேகத்துடன் செல்வதால் சாலைத் தடுப்பு, வேகத்தடை ஆகியவற்றை அமைத்துக் கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்செங்கோடு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Tragedy of the child who fell into the borehole

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று கடந்த 12 ஆம் தேதி (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், ‘ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமார் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் 40 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் இரண்டு நாட்களாக தீயணைப்பு துறை, பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இருப்பினும் உயிரிழந்த நிலையில் சிறுவனின் உடல் சடலமாக நேற்று (14.04.2024) மீட்கப்பட்டது.

இது குறித்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விவேக் லால் சிங் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்புப்படையினர், போலீஸ், உள்ளூர் மக்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோர் சிறுவனை மீட்க சுமார் 45 மணிநேரம் கடுமையாக உழைத்தோம். ஆனால் எங்களால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.