Skip to main content

நான் ஏற்கனவே நொந்து போயிருக்கிறேன்... சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அப்செட்டில் இருக்கும் பீலா ராஜேஷ்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

admk


கரோனா பாதிப்பு உச்சக்கட்ட நிலையில் இருக்கும் தமிழகத்தில் அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோடிகள் மதிப்புள்ள ஒரு வீட்டைக் கட்டி கிரகப் பிரவேசம் செய்துள்ளார்.

 

பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கத்துக்கும் திருப்போரூருக்கும் இடையே அமைந்துள்ள ஊர் தையூர் எனும் பட்டியலின மக்கள் அதிகம் வாழும் கிராமம். இங்கு ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அதற்குப் பின்புறம் கோமான் நகர் என்கிற நகர் உள்ளது. அங்கே சொகுசு வீடுகள் அமைந்துள்ளன. அந்த வீடுகளை ஒட்டிச்செல்லும் கிராமச் சாலையில் சென்றால் வரிசையாக பளபள என மின்னும் குடியிருப்புகள் வருகிறது. அவையெல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த 56 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் குடியிருப்புகள்.

 

அதில் மிகப் பிரம்மாண்டமாக மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரியாக இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட பீலா ராஜேஷ் மற்றும் தமிழ்நாடு மதுவிலக்குத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் அவரது கணவர் ராஜேஷ்தாஸ் ஆகியோர் கட்டியிருக்கும் பிரம்மாண்டமான வீடு. ஜெயலலிதாவின் சிறுதாவூர் பண்ணை வீட்டைப் போல பிரிட்டீஷ் அரண்மனை கட்டிடக் கலையுடன் அமைந்த அந்த வீட்டிற்குச் சமீபத்தில்தான் கிரகப் பிரவேசம் நடந்துள்ளது.
 

house


கரோனா ஊழல்கள் அம்பலப்படும் சூழலில், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், பிரம்மாண்டமான வீடு கட்டியிருக்கிறார் என செய்திகள் வந்ததும் நேரில் சென்று, வீட்டை படம் எடுக்க முயலும்போதே அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் நம்மை படம் எடுத்தார்கள். நமது அடையாள அட்டையையும் வாங்கிப் பார்த்தார்கள். நாம் இது யாருடைய வீடு எனக் கேட்டோம். கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் உடைய கார் அங்கே நின்றிருந்தது. நம்மை போலீஸ்காரர்கள் விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள். நாம் அங்கிருந்து வெளியேறி மறுநாள் அதிகாலையில் சென்றோம். அருகில் குடியிருக்கும் கிராமவாசிகளிடம் அந்த வீட்டைப் பற்றி விசாரித்தோம்.

 

இதுபோல ஒரு வீட்டை யாராலும் கட்ட முடியாது. இந்தக் கிராமத்துச் சாலைகளில் மிகப்பெரிய லாரிகளைக் கொண்டு வந்து, ஒன்பது ஆண்டுகளாக இந்த வீடு கட்டப்பட்டது. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீட்டில் தனியாக ஒரு பெரிய நீச்சல்குளம், உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம், செயற்கையாக உருவாக்கப்பட்ட குளம், அதில் மீன்கள்- பறவைகள். அந்தக் குளத்தின் நடுவில் அமர்வதற்கு இருக்கைகள், இவற்றோடு கூடுதலாக இன்னொரு வீடு, இதுதவிர பாதுகாவலர்கள் தங்குவதற்குத் தனி அறை, மழை நீர் தேங்கும் தையூர் ஏரிக்கரையில் வீட்டிற்குள் நீர் புகாதபடி கூழாங்கற்களைப் பரப்பி இரண்டரை ஏக்கர் நீளத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை என சகல வசதிகளும் இருக்கிறது.

 

house


பீலா ராஜேஷ், ஜார்க்கண்ட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தபோது அங்கிருந்து கட்டிடப் பணியாளர்கள் கொண்டுவரப்பட்டு வேலை ஆரம் பிக்கப்பட்டது. அதன்பிறகு மெதுவாகத் தமிழகத்தைச் சார்ந்த கட்டிடப் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். கரோனா காலத்தில் இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. கிருஸ்தவரான பீலா ராஜேஷ் - ராஜேஷ்தாஸ் தம்பதியினர் இந்து பிராமணர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக பூஜை நடத்தினர். அதன் பிறகு ராஜேஷ்தாஸ் கரோனா காலம் முடியும்வரை அந்த வீட்டிலேயே தங்கினார். பீலா ராஜேஷ் தனது மகள்களுடன் அவ்வப்போது அங்கு வந்து செல்வார். வெளியாட்கள் அந்தப் பக்கம் போனாலே திருப்பி அனுப்புவார்கள். பணியில் உள்ள ஆர்டர்லிகளுக்குக்கூட கரோனா நேரத்தில் வீட்டு உணவு கிடைக்கவில்லை என விவரித்தனர். இந்த நகரில் உள்ள சாலைகளைத் தார்ச் சாலையாக்குவதற்கு அ.தி.மு.க.-வின் முன்னாள் எம்.பி.-யான மரகதம் குமரவேல் கணவர் கான்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். அவர் சரளைக்கற்களை நகரம் முழுக்க உள்ள சாலைகளில் கொட்டிவிட்டு வேலையை முடிக்காமல் பையனூரில் சினிமா தொழிலாளர்களுக்காகக் கட்டப்படும் குடியிருப்புச் சாலைகளைப் போட எடுத்திருக்கும் கான்ட்ராக்ட்டை கவனிக்கச் சென்று விட்டார். பீலாராஜேஷ் வீட்டுக்குப் பக்கத்தில் அருப்புக்கோட்டை கல்லூரியின் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற முதியவர் குடியிருக்கிறார். அவர் ஒருநாள் "நாங்கள் வயதானவர்கள் இங்கே குடியிருக்கிறோம். இங்கிருக்கும் சாலைகளை மேம்படுத்த முடியுமா?'' எனக் கேட்டுள்ளார். அவரிடம், சாலைகளை போட மூன்று லட்ச ரூபாய் கொடுக்குமாறு ராஜேஷ்தாஸ் கேட்கவே, அவர் வாயடைத்துப்போனார். அதேநேரம் காஞ்சிபுரம் கலெக்டர் அவரது வீட்டுக்கு வந்து சென்றார் என்கிறார்கள் கிராம வாசிகள்.

 

அந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் மூன்றரை லட்ச ரூபாய்க்கு விலை போகிறது. ராஜேஷ்தாஸ் பீலா தம்பதியினர் 350 சென்ட் நிலம் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றரை லட்சம் சதுர அடிகள் கொண்ட பண்ணை வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். எப்படியும் அதன் மதிப்பு 150 கோடி ரூபாயைத் தொடும் என்கிறார்கள் அந்தக் கிராமத்தில் நில வணிகத்தில் ஈடுபடும் வணிகர்கள். இந்த நிலம் தையூர் ஏரியின் பின்புறம் அமைந்துள்ள விவசாய நிலமாகும். பெரும்பாலும் தலித்துகளுக்கே சொந்தமாக இருந்த இந்த நிலத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் சென்ட்டுக்கு 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து 1990-களில் வாங்கினார். அதன் பிறகு அந்த நிலம் ரியல் எஸ்டேட்டுக்காக சாலைகள் விரித்து மனைகளாக மாற்றப்பட்டது. அந்த மனையில் முதலில் வாங்கியவர் ராஜேஷ்தாஸ் - பீலா தம்பதியினர்.

 

அவர்களைத் தொடர்ந்து சென்னையின் புகழ்பெற்ற காசா கிராண்ட் என்கிற கட்டுமான நிறுவனம் நிலத்தை வாங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மொத்தம் 56 ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் அங்கு நிலங்களை வாங்கினர் எனச் சொல்லும் நில வணிகர்கள் தற்போது டி.ஜி.பி.யாக இருக்கும் ராஜேஷ்தாஸின் சொந்த மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த திரிபாதி வாங்கிய நிலத்தையும் நமக்கு காட்டினார்கள்.

 

ராஜேஷ்தாஸ் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் திரிபாதி, இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி அதில் சாதாரணமான ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருந்தார். அந்த வீட்டையும் படம் எடுத்தோம். அப்பொழுது அங்கு பாதுகாவல் வேலையில் இருந்த ஒரு போலீஸ்காரர் நம்மை தடுத்தார். அவர் டி.ஜி.பி. திரிபாதியின் வீட்டு வேலைகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு ஆய்வாளருக்கு போன் செய்து அவரை நம்மிடம் பேச வைத்தார்.

 

ias

 

நாம் இது டி.ஜி.பி. யின் வீடுதானே எனக் கேட்டதற்கு ஆம் எனச் சொன்ன அவர், எதற்காகப் படம் எடுக்கிறீர்கள் என்றார். நமது நோக்கத்தைச் சொன்னோம். அதன் பிறகு அவர்கள் நம்மை விட்டு அகன்றுவிட்டார்கள்.

 

டி.ஜி.பி. திரிபாதியின் கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில் குடியிருக்கும் நாகப்பன் என்பவரிடம் பேசினோம். "டி.ஜி.பி. இங்கு ஓய்வெடுக்க வருவார். கிராமத்து மக்களிடம் எளிமையாகப் பேசுவார். ஆனால், ராஜேஷ்தாஸ் ஸ்டிரிக்ட்டாக இருப்பார்'' என்றார். அந்தக் கிராமத்துச் சாலையில் விலை உயர்ந்த கார்களை நிறுத்தி தண்ணி அடிப்பது போன்ற உற்சாகமான செயல்களில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அதையும் படமாக்கிக்கொண்டு திரும்பினோம்.

 

இதுபற்றி பீலாராஜேஷின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டோம். அவர், "எனக்கும் என் கணவருக்கும் தையூர் பக்கத்தில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. அதை 2000-ஆம் ஆண்டு எனது அப்பா கொடுத்த பணத்தில் நாங்கள் வாங்கினோம். அதைச் சமீபத்தில்தான் கட்டி முடித்தோம். எனக்குக் கொட்டிவாக்கத்தில் ஒரு வீடு இருக்கிறது. அதுதவிர இந்த வீடு என்னுடைய சொத்தாகும். இதை வாங்குவதற்கும் கட்டுவதற்கும் அரசாங்கத்தில் அனுமதியைப் பெற்றுதான் நானும், என் கணவர் ராஜேஸ் தாஸும் கட்டினோம். அதைப் பற்றி எழுதப்போகிறீர்களா? நான் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் நொந்துபோயிருக்கிறேன். இப்பொழுது அதைப் பற்றி எழுதாதீர்கள்'' என்றார்.

 

நாம், "நீங்கள் சுகாதாரத்துறை பதவியில் இருந்து மாற்றப்பட்டாலும், வணிகவரித்துறை செயலாளர் என்கிற உயர்ந்த பதவிக்குத்தான் சென்றுள்ளீர்கள். எனவே இதில் நொந்து போவதற்கு என்ன இருக்கிறது'' எனக் கேட்டோம். அதற்கு அவர், "என்னைப் பற்றி வந்த தவறான விளம்பரங்கள் என்னை பாதித்துள்ளன'' என்றார். அவரது கணவர் ராஜேஷ்தாஸை தொடர்பு கொண்டோம்.
 

http://onelink.to/nknapp


"ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் வீடுகள் மற்றும் சொத்துகள் வாங்குவது புதிய விஷயம் அல்ல. சென்னைக்கு மிக அருகில் நெற்குன்றத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீடு கட்டியிருக்கிறார்கள். 1999 ஆம் ஆண்டில் ஒரு ஏக்கர் இரண்டு லட்ச ரூபாய் என இந்தப் பகுதியில் நிலங்கள் விற்கப்பட்டது. அப்பொழுது நான் இந்த நிலத்தை வாங்கினேன். அதன் பிறகு ஏழு வருடமாகக் கட்டிடம் கட்டும் பணியைச் செய்தேன். இதற்காக HDFC வங்கியில் கடன் வாங்கியுள்ளேன். அதற்கான மாதத் தவணையை நான் கட்டி வருகிறேன். இந்தச் சொத்து முழுமையாக நான் வாங்கிய, எனக்கு சொந்தமான சொத்து. இதற்கும் பீலா ராஜேஷ்க்கும் தொடர்பு இல்லை.

 

அந்த வீட்டிற்கு எனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தவிர எந்தப் பெண்ணும் விருந்தினரும் வந்ததில்லை. காஞ்சிபுரம் கலெக்டர் 22 அதிகாரிகளுடன் வந்தார். அவருக்கு கூல்டிரிங்ஸ் தவிர நான் எதையும் தரவில்லை. 'நக்கீரன்' நிருபர் கதிரைதுரை 1992ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தாக்கப்பட்டபோது அங்கு பயிற்சி எஸ்.பி.யாக இருந்தேன். அன்று கதிரை துரையைத் தாக்கிய ஆறுமுக நயினார், அன்றைய அமைச்சர் கண்ணப்பனின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார். ஆறுமுக நயினாரைக் கைது செய்யச் சொன்ன ஆய்வாளர் ஓடிவிட்டார். நான் நேரடியாகப் போய் அவரை கைது செய்தேன். கதிரை துரையின் உயிரைக் காப்பாற்றினேன். ஆகவே என்னைப் பற்றி நல்ல செய்திகளை எழுதுங்கள்'' என அட்வைஸ் செய்தார். 'நக்கீரன்' நிருபரும் புகைப்படக் கலைஞருமான கதிரைதுரை ஆளுங்கட்சியினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையிலும் காவல்துறை அதிகாரியான ராஜேஸ்தாஸ் துணிச்சலுடன் செயல்பட்டதை 'நக்கீரன்' பலமுறை பதிவு செய்துள்ளது. நாமும் சரியென சொல்லிவிட்டு போனை வைத்தோம். அவர் சொன்னதையும் அப்படியே பதிவிட்டுள்ளோம். செய்திகளை எடைபோடுபவர்கள் மக்கள்தானே!


 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.