Skip to main content

நான் ஏற்கனவே நொந்து போயிருக்கிறேன்... சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் அப்செட்டில் இருக்கும் பீலா ராஜேஷ்!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020

 

admk


கரோனா பாதிப்பு உச்சக்கட்ட நிலையில் இருக்கும் தமிழகத்தில் அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி கோடிகள் மதிப்புள்ள ஒரு வீட்டைக் கட்டி கிரகப் பிரவேசம் செய்துள்ளார்.

 

பழைய மகாபலிபுரம் சாலையில் கேளம்பாக்கத்துக்கும் திருப்போரூருக்கும் இடையே அமைந்துள்ள ஊர் தையூர் எனும் பட்டியலின மக்கள் அதிகம் வாழும் கிராமம். இங்கு ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அதற்குப் பின்புறம் கோமான் நகர் என்கிற நகர் உள்ளது. அங்கே சொகுசு வீடுகள் அமைந்துள்ளன. அந்த வீடுகளை ஒட்டிச்செல்லும் கிராமச் சாலையில் சென்றால் வரிசையாக பளபள என மின்னும் குடியிருப்புகள் வருகிறது. அவையெல்லாம் தமிழகத்தைச் சேர்ந்த 56 ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளின் குடியிருப்புகள்.

 

அதில் மிகப் பிரம்மாண்டமாக மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரியாக இருந்து சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட பீலா ராஜேஷ் மற்றும் தமிழ்நாடு மதுவிலக்குத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருக்கும் அவரது கணவர் ராஜேஷ்தாஸ் ஆகியோர் கட்டியிருக்கும் பிரம்மாண்டமான வீடு. ஜெயலலிதாவின் சிறுதாவூர் பண்ணை வீட்டைப் போல பிரிட்டீஷ் அரண்மனை கட்டிடக் கலையுடன் அமைந்த அந்த வீட்டிற்குச் சமீபத்தில்தான் கிரகப் பிரவேசம் நடந்துள்ளது.
 

house


கரோனா ஊழல்கள் அம்பலப்படும் சூழலில், சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், பிரம்மாண்டமான வீடு கட்டியிருக்கிறார் என செய்திகள் வந்ததும் நேரில் சென்று, வீட்டை படம் எடுக்க முயலும்போதே அங்கிருக்கும் போலீஸ்காரர்கள் நம்மை படம் எடுத்தார்கள். நமது அடையாள அட்டையையும் வாங்கிப் பார்த்தார்கள். நாம் இது யாருடைய வீடு எனக் கேட்டோம். கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் உடைய கார் அங்கே நின்றிருந்தது. நம்மை போலீஸ்காரர்கள் விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள். நாம் அங்கிருந்து வெளியேறி மறுநாள் அதிகாலையில் சென்றோம். அருகில் குடியிருக்கும் கிராமவாசிகளிடம் அந்த வீட்டைப் பற்றி விசாரித்தோம்.

 

இதுபோல ஒரு வீட்டை யாராலும் கட்ட முடியாது. இந்தக் கிராமத்துச் சாலைகளில் மிகப்பெரிய லாரிகளைக் கொண்டு வந்து, ஒன்பது ஆண்டுகளாக இந்த வீடு கட்டப்பட்டது. இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த வீட்டில் தனியாக ஒரு பெரிய நீச்சல்குளம், உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம், செயற்கையாக உருவாக்கப்பட்ட குளம், அதில் மீன்கள்- பறவைகள். அந்தக் குளத்தின் நடுவில் அமர்வதற்கு இருக்கைகள், இவற்றோடு கூடுதலாக இன்னொரு வீடு, இதுதவிர பாதுகாவலர்கள் தங்குவதற்குத் தனி அறை, மழை நீர் தேங்கும் தையூர் ஏரிக்கரையில் வீட்டிற்குள் நீர் புகாதபடி கூழாங்கற்களைப் பரப்பி இரண்டரை ஏக்கர் நீளத்தில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை என சகல வசதிகளும் இருக்கிறது.

 

house


பீலா ராஜேஷ், ஜார்க்கண்ட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தபோது அங்கிருந்து கட்டிடப் பணியாளர்கள் கொண்டுவரப்பட்டு வேலை ஆரம் பிக்கப்பட்டது. அதன்பிறகு மெதுவாகத் தமிழகத்தைச் சார்ந்த கட்டிடப் பணியாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். கரோனா காலத்தில் இந்தக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. கிருஸ்தவரான பீலா ராஜேஷ் - ராஜேஷ்தாஸ் தம்பதியினர் இந்து பிராமணர்களைக் கொண்டு பிரம்மாண்டமாக பூஜை நடத்தினர். அதன் பிறகு ராஜேஷ்தாஸ் கரோனா காலம் முடியும்வரை அந்த வீட்டிலேயே தங்கினார். பீலா ராஜேஷ் தனது மகள்களுடன் அவ்வப்போது அங்கு வந்து செல்வார். வெளியாட்கள் அந்தப் பக்கம் போனாலே திருப்பி அனுப்புவார்கள். பணியில் உள்ள ஆர்டர்லிகளுக்குக்கூட கரோனா நேரத்தில் வீட்டு உணவு கிடைக்கவில்லை என விவரித்தனர். இந்த நகரில் உள்ள சாலைகளைத் தார்ச் சாலையாக்குவதற்கு அ.தி.மு.க.-வின் முன்னாள் எம்.பி.-யான மரகதம் குமரவேல் கணவர் கான்ட்ராக்ட் எடுத்திருக்கிறார். அவர் சரளைக்கற்களை நகரம் முழுக்க உள்ள சாலைகளில் கொட்டிவிட்டு வேலையை முடிக்காமல் பையனூரில் சினிமா தொழிலாளர்களுக்காகக் கட்டப்படும் குடியிருப்புச் சாலைகளைப் போட எடுத்திருக்கும் கான்ட்ராக்ட்டை கவனிக்கச் சென்று விட்டார். பீலாராஜேஷ் வீட்டுக்குப் பக்கத்தில் அருப்புக்கோட்டை கல்லூரியின் பேராசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற முதியவர் குடியிருக்கிறார். அவர் ஒருநாள் "நாங்கள் வயதானவர்கள் இங்கே குடியிருக்கிறோம். இங்கிருக்கும் சாலைகளை மேம்படுத்த முடியுமா?'' எனக் கேட்டுள்ளார். அவரிடம், சாலைகளை போட மூன்று லட்ச ரூபாய் கொடுக்குமாறு ராஜேஷ்தாஸ் கேட்கவே, அவர் வாயடைத்துப்போனார். அதேநேரம் காஞ்சிபுரம் கலெக்டர் அவரது வீட்டுக்கு வந்து சென்றார் என்கிறார்கள் கிராம வாசிகள்.

 

அந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் மூன்றரை லட்ச ரூபாய்க்கு விலை போகிறது. ராஜேஷ்தாஸ் பீலா தம்பதியினர் 350 சென்ட் நிலம் வைத்திருக்கிறார்கள். அதில் ஒன்றரை லட்சம் சதுர அடிகள் கொண்ட பண்ணை வீட்டைக் கட்டியிருக்கிறார்கள். எப்படியும் அதன் மதிப்பு 150 கோடி ரூபாயைத் தொடும் என்கிறார்கள் அந்தக் கிராமத்தில் நில வணிகத்தில் ஈடுபடும் வணிகர்கள். இந்த நிலம் தையூர் ஏரியின் பின்புறம் அமைந்துள்ள விவசாய நிலமாகும். பெரும்பாலும் தலித்துகளுக்கே சொந்தமாக இருந்த இந்த நிலத்தை ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் சென்ட்டுக்கு 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து 1990-களில் வாங்கினார். அதன் பிறகு அந்த நிலம் ரியல் எஸ்டேட்டுக்காக சாலைகள் விரித்து மனைகளாக மாற்றப்பட்டது. அந்த மனையில் முதலில் வாங்கியவர் ராஜேஷ்தாஸ் - பீலா தம்பதியினர்.

 

அவர்களைத் தொடர்ந்து சென்னையின் புகழ்பெற்ற காசா கிராண்ட் என்கிற கட்டுமான நிறுவனம் நிலத்தை வாங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மொத்தம் 56 ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் அங்கு நிலங்களை வாங்கினர் எனச் சொல்லும் நில வணிகர்கள் தற்போது டி.ஜி.பி.யாக இருக்கும் ராஜேஷ்தாஸின் சொந்த மாநிலமான ஒடிசாவைச் சேர்ந்த திரிபாதி வாங்கிய நிலத்தையும் நமக்கு காட்டினார்கள்.

 

ராஜேஷ்தாஸ் வீட்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் திரிபாதி, இரண்டரை ஏக்கர் நிலம் வாங்கி அதில் சாதாரணமான ஒரு கெஸ்ட் ஹவுஸ் கட்டியிருந்தார். அந்த வீட்டையும் படம் எடுத்தோம். அப்பொழுது அங்கு பாதுகாவல் வேலையில் இருந்த ஒரு போலீஸ்காரர் நம்மை தடுத்தார். அவர் டி.ஜி.பி. திரிபாதியின் வீட்டு வேலைகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஒரு ஆய்வாளருக்கு போன் செய்து அவரை நம்மிடம் பேச வைத்தார்.

 

ias

 

நாம் இது டி.ஜி.பி. யின் வீடுதானே எனக் கேட்டதற்கு ஆம் எனச் சொன்ன அவர், எதற்காகப் படம் எடுக்கிறீர்கள் என்றார். நமது நோக்கத்தைச் சொன்னோம். அதன் பிறகு அவர்கள் நம்மை விட்டு அகன்றுவிட்டார்கள்.

 

டி.ஜி.பி. திரிபாதியின் கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில் குடியிருக்கும் நாகப்பன் என்பவரிடம் பேசினோம். "டி.ஜி.பி. இங்கு ஓய்வெடுக்க வருவார். கிராமத்து மக்களிடம் எளிமையாகப் பேசுவார். ஆனால், ராஜேஷ்தாஸ் ஸ்டிரிக்ட்டாக இருப்பார்'' என்றார். அந்தக் கிராமத்துச் சாலையில் விலை உயர்ந்த கார்களை நிறுத்தி தண்ணி அடிப்பது போன்ற உற்சாகமான செயல்களில் சிலர் ஈடுபட்டிருந்தனர். அதையும் படமாக்கிக்கொண்டு திரும்பினோம்.

 

இதுபற்றி பீலாராஜேஷின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டோம். அவர், "எனக்கும் என் கணவருக்கும் தையூர் பக்கத்தில் ஒரு பண்ணை வீடு இருக்கிறது. அதை 2000-ஆம் ஆண்டு எனது அப்பா கொடுத்த பணத்தில் நாங்கள் வாங்கினோம். அதைச் சமீபத்தில்தான் கட்டி முடித்தோம். எனக்குக் கொட்டிவாக்கத்தில் ஒரு வீடு இருக்கிறது. அதுதவிர இந்த வீடு என்னுடைய சொத்தாகும். இதை வாங்குவதற்கும் கட்டுவதற்கும் அரசாங்கத்தில் அனுமதியைப் பெற்றுதான் நானும், என் கணவர் ராஜேஸ் தாஸும் கட்டினோம். அதைப் பற்றி எழுதப்போகிறீர்களா? நான் ஏற்கனவே சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதால் நொந்துபோயிருக்கிறேன். இப்பொழுது அதைப் பற்றி எழுதாதீர்கள்'' என்றார்.

 

நாம், "நீங்கள் சுகாதாரத்துறை பதவியில் இருந்து மாற்றப்பட்டாலும், வணிகவரித்துறை செயலாளர் என்கிற உயர்ந்த பதவிக்குத்தான் சென்றுள்ளீர்கள். எனவே இதில் நொந்து போவதற்கு என்ன இருக்கிறது'' எனக் கேட்டோம். அதற்கு அவர், "என்னைப் பற்றி வந்த தவறான விளம்பரங்கள் என்னை பாதித்துள்ளன'' என்றார். அவரது கணவர் ராஜேஷ்தாஸை தொடர்பு கொண்டோம்.
 

http://onelink.to/nknapp


"ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். அதிகாரிகள் வீடுகள் மற்றும் சொத்துகள் வாங்குவது புதிய விஷயம் அல்ல. சென்னைக்கு மிக அருகில் நெற்குன்றத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வீடு கட்டியிருக்கிறார்கள். 1999 ஆம் ஆண்டில் ஒரு ஏக்கர் இரண்டு லட்ச ரூபாய் என இந்தப் பகுதியில் நிலங்கள் விற்கப்பட்டது. அப்பொழுது நான் இந்த நிலத்தை வாங்கினேன். அதன் பிறகு ஏழு வருடமாகக் கட்டிடம் கட்டும் பணியைச் செய்தேன். இதற்காக HDFC வங்கியில் கடன் வாங்கியுள்ளேன். அதற்கான மாதத் தவணையை நான் கட்டி வருகிறேன். இந்தச் சொத்து முழுமையாக நான் வாங்கிய, எனக்கு சொந்தமான சொத்து. இதற்கும் பீலா ராஜேஷ்க்கும் தொடர்பு இல்லை.

 

அந்த வீட்டிற்கு எனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தவிர எந்தப் பெண்ணும் விருந்தினரும் வந்ததில்லை. காஞ்சிபுரம் கலெக்டர் 22 அதிகாரிகளுடன் வந்தார். அவருக்கு கூல்டிரிங்ஸ் தவிர நான் எதையும் தரவில்லை. 'நக்கீரன்' நிருபர் கதிரைதுரை 1992ஆம் ஆண்டு தூத்துக்குடியில் தாக்கப்பட்டபோது அங்கு பயிற்சி எஸ்.பி.யாக இருந்தேன். அன்று கதிரை துரையைத் தாக்கிய ஆறுமுக நயினார், அன்றைய அமைச்சர் கண்ணப்பனின் நெருங்கிய ஆதரவாளராக இருந்தார். ஆறுமுக நயினாரைக் கைது செய்யச் சொன்ன ஆய்வாளர் ஓடிவிட்டார். நான் நேரடியாகப் போய் அவரை கைது செய்தேன். கதிரை துரையின் உயிரைக் காப்பாற்றினேன். ஆகவே என்னைப் பற்றி நல்ல செய்திகளை எழுதுங்கள்'' என அட்வைஸ் செய்தார். 'நக்கீரன்' நிருபரும் புகைப்படக் கலைஞருமான கதிரைதுரை ஆளுங்கட்சியினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட நிலையிலும் காவல்துறை அதிகாரியான ராஜேஸ்தாஸ் துணிச்சலுடன் செயல்பட்டதை 'நக்கீரன்' பலமுறை பதிவு செய்துள்ளது. நாமும் சரியென சொல்லிவிட்டு போனை வைத்தோம். அவர் சொன்னதையும் அப்படியே பதிவிட்டுள்ளோம். செய்திகளை எடைபோடுபவர்கள் மக்கள்தானே!


 

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்பதாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.