Skip to main content

30 ஆண்டுக்கால புகைச்சல்; வெளியான வன்மம்!

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

Background history of Nanguneri issue

 

+2 மாணவன் சின்னத்துரையும், அவனது சகோதரி சந்தானசெல்வியும் வெட்டப்பட்ட சம்பவத்தில் 30 ஆண்டுக்கால அடக்குமுறை வெளிப்பட்டிருக்கிறது என்று மிரட்சியோடு சொல்லுகிறார்கள் நாங்குநேரிவாசிகள். நாங்குநேரியில் சுமார் 300 ஆண்டுக்கால பாரம்பரியம் கொண்ட மூன்றெழுத்து அமைப்பிற்கு நகரைச் சுற்றிலும் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. மொத்த விவசாய நிலத்தையும் அந்த அமைப்பினரால் விவசாயம் செய்ய முடியாது என்பதால், அவற்றை நகரிலுள்ள பல தரப்பு விவசாயிகளுக்கு குத்தகையாக விட்டிருக்கிறார்கள்.

 

ஆரம்ப காலங்களில் விவசாய குத்தகை, கைமாற்றுவது என அனைத்தும் முறையாக, எதிர்க்கேள்வி இல்லாமல் சொன்னபடி நடந்துள்ளன. காலப்போக்கில் கல்வி அறிவு முன்னேற்றம் காரணமாக 'ஏன்?' என்ற கேள்விகள் கிளம்பவே, விவசாயக் குத்தகைதாரர்களோடு ஏற்பட்ட புகைச்சல், வில்லங்கம் விரிவடையவே, அமைப்பிற்கு பெருந்தலைவலியாகி இருக்கிறது. பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவும், அடைப்புத் தொகை, குத்தகையை சிக்கலின்றி நடத்தவும், தங்களுக்கென்று ஒரு வலுத்த குழுவை அமைக்கும் பொருட்டு, நகரைச் சுற்றியுள்ள மறுகால்குறிச்சி, மஞ்சன்குளம், தென்னிமலை, பட்டபிள்ளைபுதூர், கன்னிமார் பொத்தை, நெடுங்குளம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து சிலரைத் தேர்ந்தெடுத்து, வெளித்தெரியாத ஆறு பங்கு நாட்டார் என்ற அமைப்பை ஏற்படுத்தினர்.

 

அமைப்பின் விளை நிலங்களுக்கு குத்தகை நிர்ணயிப்பது; பணத்தை கறாராக வசூலிப்பது; பிரச்சனை வந்தால் மிரட்டி அடக்குவது உள்ளிட்டவற்றை இந்த ஆறு பங்கு அமைப்பே கவனித்துக் கொள்ளுமாம். இவர்களுக்கான மொத்தச் செலவையும் மூன்றெழுத்து அமைப்பு கவனித்துக் கொள்ளுமாம். நாங்குநேரியின் உள்ளுக்குள்ளேயே வெளித் தெரியாமல் செயல்படுகிற இந்த அமைப்பின் பின்னணி அறிந்த உள்ளூர் காவல் நிலையம், அதன்மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகிறதாம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாய குத்தகைதாரர்களுக்கும் மூன்றெழுத்து அமைப்புக்குமிடையே விவகாரம் கிளம்ப, விவசாய சங்க மாவட்டத் தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலையிட்டு, விவசாயிகளுக்காக பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்.

 

விவகாரம் பெரிதானபோது பங்கு அமைப்பு தலையிட்டு அவரை மிரட்ட, எக்ஸ் எம்.எல்.ஏ.வோ காவல்துறையை நாடியிருக்கிறார். காவல்துறையோ விசாரணையோடு முடித்துக் கொண்டதாம்.

 

தற்போது மாணவன் வெட்டப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இந்த விவகாரம் கிளறப்படுகிறதாம். விவசாயிகளிடம் தங்களின் பராக்கிரமத்தை காட்டி வந்த அந்த அமைப்பு, காலப்போக்கில் நகரின் பல்வேறு தரப்பினரிடமும் கெத்துக் காட்டியிருக்கிறது. பள்ளி மாணவர்களிடமும் தங்களின் ஆதிக்கத்தைக் காட்ட, அதில் ஈர்ப்பான மாணவர்களால், பள்ளிகளிலும் அவர்களின் ஆதரவுக் கூட்டம் பெருகியிருக்கிறது. இந்த மாணவர்கள், மற்ற மாணவர்கள் தங்களின் வார்த்தைக்குக் கட்டுப்பட வேண்டும், மீறக்கூடாது என்று குடைச்சலைக் கொடுத்து வந்திருக்கிறார்கள்.

 

இந்த மாணவர்கள், பெற்றோரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதில்லையாம். அவர்களைத் தட்டிக் கேட்கவே முடியாத நிலையாம். இந்த ஆதிக்கம்தான் சின்னத்துரை மீதான கொலைவெறித் தாக்குதலுக்கும் காரணமாகியுள்ளது.

 

மாணவர்களிடையே இந்த அமைப்பின் தூண்டுதலால் பிரச்சனைகள் எழ, நாங்குநேரி பள்ளி மாணவர்கள் பலரும், மொத்த மொத்தமாக வெளியேறி, சற்று தொலைவிலிருக்கும் மூலக்கரைப்பட்டி, களக்காடு, வள்ளியூர், ஏர்வாடி உள்ளிட்ட ஊர்களிலுள்ள பள்ளிகளில் சேர்ந்து படிப்பைத் தொடரவேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இப்படியாக மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டு, அதிகார தொனியில் மிரட்டல்கள் விடப்பட்டு, அனைத்தும் எல்லைமீறிச் செயல்பட்டதன் விளைவே மாணவன் சின்னத்துரையும், அவரது சகோதரியும் வெட்டப்பட்டதற்கு காரணம் என்கிறார்கள். இச்சம்பவத்தையடுத்து, களக்காடு, ஏர்வாடி, வள்ளியூர், மூலக்கரைப்பட்டி ஆகிய நான்கு ஊர்களும் பதற்றத்தில் இருக்கின்றன.

 

மாணவன் சின்னத்துரை சார்ந்த பகுதி விவசாயியான மரியதாஸ் நம்மிடம், "எங்க பகுதிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு மேற்கேயுள்ள பெருங்குளத்திலிருந்து தான் தண்ணீர் வரும். சரியா மூணு போகம் விளைச்சல் எடுப்போம். சுயமாவும் சுதந்திரமாவும் வாழ்ந்தோம். ஆனா காலப்போக்குல மேற்கே இருந்து எங்களுக்கு வர்ற தண்ணிய அவுக குப்பைகளையும் மணலையும் போட்டு மறிச்சி அந்தப் பக்கம் திருப்பிட்டாங்க. அதனால எங்க விவசாயம் போச்சு. நாங்க இப்போது விவசாயக் கூலியாளா காலம் தள்ளுறோம்யா. ஞாயம் கேட்க முடியல. ரொம்ப வருஷமா இங்க நெலம இப்புடித்தேன்'' என்றார் மிரட்சியோடு.

 

அங்குள்ள பெயர் சொல்ல விரும்பாத வயதான பெண்களோ, "எங்க வயலுக்கு வர்ற தண்ணிய மறிச்சி அவுக பக்கம் கொண்டு போனதால, எங்க வயக்காட்ட சும்மா போட்டுட்டு, வயித்துப் பாட்டுக்காக வேலைக்கு வெளியூர் போயி கொத்தனார், பெயிண்டடிப்பு வேலைகளப் பாக்குறாக எங்காளுக. என்னயப் போல பொம்பளைகளோ வேப்பங்கொட்டயப் பெறக்கி கூலி பாக்க வேண்டிய நெலம. இன்னக்கி நேத்தில்லய்யா, 30 வருஷமா இங்க இதே அடக்குமுறை நெருக்கடி தான்! கொடுமைங்க'' என்றார்கள் வேதனை மண்ட. முப்பது வருட அடக்குமுறை வேரறுக்கப்பட வேண்டிய கட்டாய தருணம் இது.

 

 

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.