Skip to main content

சேலம்: ஊருடன் கூடி தேரிழுத்த நக்கீரன்... தளவாய்ப்பட்டியை தத்தெடுக்கிறது ஆவின்!

Published on 20/10/2019 | Edited on 20/10/2019

சேலம் ஆவினில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீர் மற்றும் அதீதமான நிலத்தடி நீரூற்றால் வா-ழ்வாதாரம் இழந்து தவித்து வரும் தளவாய்ப்பட்டி கிராமத்தையே தத்தெடுக்க முன்வந்திருக்கிறது சேலம் ஆவின் பால்பண்ணை.

சேலம் மாநகராட்சி எல்லையை ஒட்டியுள்ளது தளவாய்ப்பட்டி. இங்கு, 1984ம் ஆண்டு முதல் ஆவின் பால்பண்ணை செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வருகிறது. கொள்முதல் செய்யப்படும் பாலை குளிரூட்டல், பதனிடுதல், பால் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக அதிகளவு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு பயன்படுத்தப்பட்ட பிறகு வீணாகும் கழிவு நீர் பண்ணையின் மற்றொரு பகுதியில் பரந்த வெளியில் திறந்தநிலையில் தேக்கி வைக்கப்படுகிறது.

 

avin Adopting the thalavaipatti


இவ்வாறு நீண்ட காலமாக தேக்கி வைக்கப்படும் கழிவு நீரால் (ஒருமுறை சுத்திகரிக்கப்பட்ட நீர்தான்) பண்ணைக்கு பின்புறம் கிழக்கு, தென்கிழக்கு பகுதியில் உள்ள ரொட்டிக்கார வட்டம் என்ற சிறு கிராமமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதாவது, பால் பண்ணையில் தேக்கி வைக்கப்படும் கழிவு நீரால், ரொட்டிக்கார வட்டம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் தானாகவே ரீசார்ஜ் ஆகி, உயர்ந்து விடுகிறது. இதனால் 3 முதல் 5 அடி தோண்டினாலே நிலத்தடி நீரூற்று வந்து விடுகிறது. நிலவியல் ரீதியாகவே தாழ்வான பகுதி என்பதும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்க மற்றுமொரு காரணம்.

இதனால் மழைக்காலங்களில் ரொட்டிக்கார வட்டத்தில் பலருடைய வீடுகளில் தரைதளத்தை பிளந்து கொண்டு நிலத்தடி நீர் 'குபுகுபு'வென்று ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கிறது. பத்துக்கு பத்து சதுர அடி கொண்ட ஓர் அறை, மூன்று மணி நேரத்தில் ஒரு அடி உயரத்திற்கு நிலத்தடி நீரூற்றால் நிரம்பி விடுகிறது. அந்த தண்ணீரை அவர்கள் மோட்டார் வைத்து வெளியேற்றி வருகின்றனர்.

 

avin Adopting the thalavaipatti


வீட்டில் நீர்ப்பாங்கான தரையிலேயே 24 மணி நேரமும் வெறுங்கால்களுடன் நடப்பதால் அப்பகுதி மக்கள் எல்லோருமே கடுமையான சேற்றுப்புண்ணால் மழைக்காலம் முழுவதும் அவதிப்படுகின்றனர். சிலருக்கு கால் விரல்கள் அழுகிப்போகும் அளவுக்கு புண்களால் அரிக்கப்பட்டு உள்ளன. நிலத்தடி நீரூற்றால் சந்திரன்(72), சண்முகம் (40) ஆகியோருக்குச் சொந்தமான பேக்கரி பொருள்கள் தயாரிக்கும் இரண்டு தொழிற்கூடங்கள் இடிந்து விழுந்துவிட்டன. நீர்ப்பாங்கான இடத்தில் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப்பட்டு வந்த குமார், செல்வம் ஆகியோர் ரொட்டிக்கார வட்டத்தை விட்டு கோயில்மரம் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டனர்.

நிலத்தடி நீரூற்று பெருகி திறந்தவெளியில் தேங்கிக் கிடப்பதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதனால் பலர் டெங்கு, சிக்குன்குன்யா, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக அக். 17ம் தேதி தளவாய்ப்பட்டி மக்கள் நக்கீரனுக்கு விடுத்த அழைப்பின்பேரில் ரொட்டிக்கார வட்டம் கிராமம் முழுவதும் கள ஆய்வு செய்தோம். நம்முடன் ஆவின் பொது மேலாளர் / மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, ஆவின் தலைவர் ஜெயராமன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் களத்தில் இறங்கி  பார்வையிட்டனர். அன்று இரவே ஆவின் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

avin Adopting the thalavaipatti


ஆய்வில் கண்ட காட்சிகளை படங்களுடன், விரிவான 18.10.2019ம் தேதி, நக்கீரன் இணையதளத்தளத்தில் காலை 7.14 மணிக்கு கட்டுரை வெளியிட்டோம். அன்றே ஆவின் பொதுமேலாளர் விஜய்பாபு மற்றும் ஒட்டுமொத்த சேலம மாவட்ட அரசு இயந்திரமும் ரொட்டிக்காரவட்டத்தில் குவிந்துவிட்டனர். முதல்கட்டமாக ஆவின் பால் பண்ணையில் பரந்த வெளியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு நீர், பண்ணையின் மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அனைவரிடமும் நின்று நிதானமாக குறைகளைக் கேட்டு, உள்வாங்கிக் கொண்டார் ஆவின் பொது மேலாளர்.

அதற்கு அடுத்த நாளான இன்று (அக். 19) ரொட்டிக்காரவட்டத்திலும், மல்லமூப்பம்பட்டியிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 

avin Adopting the thalavaipatti


நேற்று முன்தினம் நிலத்தடி நீரூற்றால் பதினோரு குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்கக் கேட்டிருந்தோம். இன்று நாம் சென்றிருந்தபோது மேலும் சிலர் அதுபோன்ற பிரச்னையில் சிக்கித் தவிப்பதாகக் கூறினர். அதாவது, ரொட்டிக்கார வட்டத்தைச் சேர்ந்த சண்முகம், குப்புசாமி, ரதி, சந்திரன், மல்லிகா, சரவணன், பாப்பா, சின்னதுரை, குமார், செல்வம், ராஜேந்திரன், ஆறுமுகம், மணி, சேட்டு, முருகன் ஆகிய 15 குடும்பங்கள் மழைக்காலங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். இதையும் நாம், இன்று (அக். 19) ஆவின் பொது மேலாளரின் கவனத்திற்குக் நேரடியாக கொண்டு சென்றோம்.

ரொட்டிக்கார வட்டம், தளவாய்ப்பட்டி கிராம மக்களின் பிரச்னைகளைக் கேட்டுக்கொண்ட ஆவின் பொது மேலாளர் விஜய்பாபு, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து நம்மிடம் பேசினார்.

 

avin Adopting the thalavaipatti


''ஆவினில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கழிவு நீரை பால் பண்ணையின் மற்றொரு பகுதிக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. குழாய் மூலமாக ஏரிக்குள் கொண்டு செல்வது குறித்தும் ஆராய்து வருகிறோம். ஆனால் அந்தளவுக்கு இங்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. இங்குள்ள தண்ணீரை கால்நடை தீவன வளர்ப்புக்கு பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மழைக்காலங்கள் மட்டுமின்றி குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவமுகாம்கள் நடத்தப்படும். நேற்று உடனடியாக தளவாய்ப்பட்டி, ரொட்டிக்காரவட்டத்தில் கொசு ஒழிப்புப் புகை மருந்து அடிக்கப்பட்டது. சில இடங்களில் 'ஆயில் பால்'கள் போடப்பட்டுள்ளன. நிலத்தடி நீரூற்று பிரச்னை உள்ள பகுதிகளில் பாதை அமைப்பதற்கு வசதியாக முதல்கட்டமாக கிராவல் மண் கொட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நீண்ட காலப் பணிகளின் கீழ், இப்போது பால் பண்ணையில் பத்து லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் பிளாண்ட் பயன்பாட்டில் இருந்தாலும், 5 லட்சம் லிட்டர் வரை மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. அதை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. ஆவின் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்துள்ள 33 குடும்பங்களுக்கு பட்டா கிடைக்கவும், நிலத்தடி நீரூற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பசுமை வீடுகள் கட்டித்தரவும் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்படும். அவர்களுக்கு உரிய தீர்வுகள் கிடைக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

 

avin Adopting the thalavaipatti


ரொட்டிக்காரவட்டத்தில் தளவாய்பட்டியில் உள்ள நூலகம், அரசுப்பள்ளிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டேன். அவற்றை தத்தெடுக்கலாம் என்றிருக்கிறோம். தளவாய்ப்பட்டி கிராமத்தை முழுவதும் தத்தெடுக்கும் யோசனையும் இருக்கிறது,'' என்றார் விஜய்பாபு.

ஆண்டுக்கு கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய் வணிகம் செய்து வரும் சேலம் ஆவின், இதுவரை இல்லாத வகையில் தளவாய்ப்பட்டி கிராமத்தை இப்போதுதான் புதிய கோணத்தில் பார்க்கத் தொடங்கியிருக்கிறது. தளவாய்ப்பட்டி மக்கள், ஆவின் ஆகியோருடன் கரம் கோக்க 'நக்கீரன்' எப்போதும் தயாராக இருக்கிறது. வெளிச்சம் பரவட்டும். 

 


 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

“பா.ஜ.க.வுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது” - மோடிக்கு டி.ஆர். பாலு பதிலடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

பிரதமர் மோடி சேலத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சேலத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரைக்கு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாரம் தோறும் தமிழ்நாட்டுக்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பிரதமர் மோடி. இந்த வாரம் சேலத்தில் முழங்கிவிட்டுப் போயிருக்கிறார். பத்தாண்டு காலம் பிரதமராக இருந்தவர், தனது சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டிருக்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாததால் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி இருக்கிறார். ‘தமிழகத்தில் பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவை பார்த்து திமுகவின் தூக்கம் தொலைந்து விட்டது’ எனப் பேசியிருக்கிறார். மோடி அவர்களே! உங்களுக்குத்தான் தூக்கம் தொலைந்துவிட்டது. அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பிவிட்டுப் போகிறீர்கள்.

கடந்த தேர்தல் காலங்களில் இந்திய பிரதமர்கள் ஓரிரு முறைதான் தமிழ்நாட்டு வந்து பிரச்சாரம் செய்துவிட்டு போனார்கள். ஆனால், உங்களுக்குத் தூக்கம் வராததால் பல்லடம், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, கோவை, சேலம் என அடிக்கடி தமிழகம் வந்து பிரசாரம் செய்கிறீர்கள். உங்கள் பிரதமர் பதவிக்கு நிரந்தர ஓய்வு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் குறித்து பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் மோடி. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தான் சேலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் 2013 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 11 ஆண்டுகள் கழித்து இப்போது நினைவுகூறுவது ஏன்? கோவையில் ரோட் ஷோ நடத்திய போது, 1998இல் நடந்த குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். இத்தனை ஆண்டுகள் கழித்து இப்படியான நாடகத்தை தேர்தலுக்காக பா.ஜ.க. நடத்த ஆரம்பித்திருக்கிறது. ரோட்டில் ஷோ காட்டினாரே தவிர அதைப் பார்க்கத்தான் ஆள் இல்லை.

Disastrous period is about to begin for BJP tR to Modi Balu retaliation

ஜெயலலிதா ஆட்சியில் மட்டும் சேலம் ஆடிட்டர் ரமேஷ், பரமக்குடி முருகன், மதுரை சுரேஷ், வேலூர் அரவிந்தன், வெள்ளையப்பன், சென்னை சுரேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. ஆதரவாளர்கள் பலர் கொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் பழைய பாஜகவினரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும். அந்த ஜெயலலிதாவை தான் சேலம் கூட்டத்தில் புகழ்ந்து பேசி இருக்கிறார் பிரதமர். ‘ஜெயலலிதாவை திமுகவினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்துப் பாருங்கள்’ எனப் பேசியிருக்கிறார் மோடி. அந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் இவர்கள் கொல்லப்பட்டனர் என்பதை மோடி அவர்களே நினைத்துப் பாருங்கள். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் மோடி புகழ்வதைப் பார்த்து அ.தி.மு.க.வினர் மிக ஏளனமாக பேட்டி அளித்தார்கள். எதற்காக இவர்கள் பேரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று கூட வெளிப்படையாக பேட்டி அளித்தார்கள். ஆனாலும் ஜெயலலிதாவை மறக்கவில்லை மோடி.

‘குஜராத் மோடியா? தமிழ்நாட்டு லேடியா?’ என்று ஜெயலலிதா கேட்டதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவில்லை. மோடி வேண்டுமானால் மறந்திருக்கலாம். பதவி ஆசை அவரை பாடாகப் படுத்துகிறது. போகிற போக்கைப் பார்த்தால் ஜெயலலிதாவின் சமாதிக்கே சென்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்து விடுவார் போல!. ‘திமுக, காங்கிரசின் ஊழலைப் பற்றி பேச ஒருநாள் போதாது’ எனச் சொல்லியிருக்கிறார் மோடி. ஊழலைப் பற்றி பேச மோடிக்கு தகுதி இருக்கிறதா? தேர்தல் பத்திரம் திட்டத்தில் பா.ஜ.க. நடத்திய தில்லுமுல்லு நாடு முழுவதும் நாறிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கிடைத்த நிதியில் 50 சதவிகிதத்திற்கு மேல் பாஜகதான் வாங்கியது. சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை போன்ற அதிகார அமைப்புகளை ஏவி, அதன் மூலம் நிறுவனங்களிடம் இருந்து நன்கொடைகளை மிரட்டிப் பறித்த பா.ஜ.க. உத்தமர் வேஷம் போடுகிறது. கொள்ளையை சட்டப்பூர்வமாக ஆக்கிய கட்சி பா.ஜ.க.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த 2 ஜி அலைக்கற்றை பற்றிப் பேசியிருக்கிறார் மோடி. 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் 2017இல் விடுதலை செய்துவிட்டது. அதன் பிறகும் தி.மு.க.வின் பங்கு பற்றி மோடி வலிந்து பேசிக்கொண்டிருக்கிறார். 2022 ஆகஸ்டில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போக வேண்டிய 5ஜி அலைக்கற்றை 1 ½ லட்சம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. மீதி பணம் யார் பாக்கெட்டிற்கு போனது? என மோடி பதில் சொல்வாரா?. பெண் சக்தி பற்றியெல்லாம் பெருமை பொங்கப் பேசியிருக்கிறார் மோடி. ‘பெண்களுக்குச் சேவை செய்ய உறுதி ஏற்று இருக்கிறோம். பெண்கள்தான் பாஜகவின் கவசமாக உள்ளது’ என்றெல்லாம் பொய்களைக் கொட்டியிருக்கிறார் மோடி. மணிப்பூரில் நின்று மோடியால் இப்படிப் பேச முடியுமா?. மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காட்சிகள் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. அந்த மணிப்பூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் சொன்னாரா? அந்த பாவம் எல்லாம் எந்த கங்கையில் குளித்தாலும் போகாது.

‘தமிழகத்தை புண்ணிய பூமியாக மாற்றுவோம்’ என்கிறார் மோடி. திருநெல்வேலியும் தூத்துக்குடியும் சென்னையும் பெரு வெள்ளத்தில் சிக்கி பேரிடர் நிவாரணம் கேட்டு தமிழ்நாடு கையேந்தியபோது ஒரு பைசாவும் தராத மோடிதான், தமிழகத்தைப் புண்ணிய பூமியாக மாற்ற போகிறாராம். ‘ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்திலிருந்துதான் எதிர்க்கட்சிகளுக்கு அழிவு தொடங்கப் போகிறது’ என சொல்லியிருக்கிறார் மோடி. பத்தாண்டு அழிவு ஆட்சியில் இருந்து மக்கள் விடுதலை பெற இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டார்கள். ஏப்ரல் 19 ஆம் தேதிதான் பாஜகவுக்கு பேரழிவுக் காலம் தொடங்கப் போகிறது. ஒரு பிரதமர், அவர் தனது தகுதிக்கு ஏற்ப பேச வேண்டும். பா.ஜ.க.வின் நாலாந்தரப் பேச்சாளரைப் போல பேசக்கூடாது. மீறி மோடி அப்படி பேசுகிறார் என்றால் தோற்கப் போகிறோம் என்பதை அவரே உணர்ந்து விட்டார் என்பது தெரிகிறது. 400 தொகுதிகள் வெற்றி பெறப் போவதாக அவர் சொல்லிக் கொள்கிறார். உண்மையில் 400 தொகுதிகள் வெற்றி பெறப் போகிறவர் இப்படி தரந்தாழ்ந்து பேசமாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.