Skip to main content

தேர்தலில் முக்கியம் சின்னமும்தான்... அதை எப்படி ஒதுக்குறாங்க?

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

kamal rajni

 

இன்னும் ஒருசில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சுதந்திரத்திற்கு பிறகான தமிழக தேர்தலில் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி வருகிறது. அந்த வகையில், சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த சில கட்சிகள் தங்களுக்கு பொது சின்னம் ஒதுக்கக் கோரி விண்ணப்பம் செய்திருந்தன. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளுக்குச் சின்னங்களை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதில் பலருக்கு எப்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக போன்ற கட்சிகளுக்கு ஏற்கனவே சின்னங்கள் இருக்கின்றன. மற்ற புதிதாகப் போட்டியிடும் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் எவ்வாறு சின்னங்களை ஒதுக்குகிறது என்ற கேள்விகள் இருக்கலாம். 

 

தேர்தல் ஆணையம்  ‘Election Symbols (Reservation and Allocation) Order 1968’ தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு) 1968 ஆணையின் மூலம் அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கின்றது. அதிலிருந்து அரசியல் கட்சிகளுக்காகச் சின்னங்கள் ஒதுக்குவதை தேர்தல் ஆணையம், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைமுறைப்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணையம், ரிஸர்வ்ட் சின்னம் மற்றும் ஃப்ரீ சின்னம் என இரு வகையாக சின்னங்களைக் குறிப்பிடுகிறது. இவற்றில் 'ரிஸர்வ்ட் சிம்பள்' என்று சொல்லப்படுவது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களாகும். 

 

அது என்ன அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்று கேட்கிறீர்களா? தேர்தல் ஆணையம் கட்சிகளை மூன்றாகப் பிரிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள். 

 

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் பதிவு செய்யப்படும் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படும், அதேபோல அவர்கள் கேட்கும் சின்னமும் பொதுப் பட்டியலிலிருந்து ஒதுக்கிவைக்கப்படும்.

 

தேர்தலில் போட்டியிடப் பதிவு செய்யப்பட்ட புது கட்சிகளுக்கும், பல வருடங்களாகப் போட்டியிட்டும் தேர்தல் ஆணையங்களின் விதிமுறைகளை பூர்த்தி செய்யாத கட்சிகளுக்கும் பொது பட்டியலில் இருக்கும் சின்னத்திலிருந்து தேர்தல் ஆணையம் சின்னத்தைத் தருகிறது. பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளைப் பொறுத்தவரை அவை போட்டியிடும் தொகுதிகள் வரையறுக்கப்பட்ட அளவுக்கு மேல் இருந்தால் பொதுச்சின்னப் பட்டியலிலிருந்து அந்த கட்சி கோரும் ஒரு சின்னம் தேர்தலின் போது வழங்கப்படும். குறைவான தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி போட்டியிட்டால் ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் பொது சின்னப் பட்டியலிலிருந்து ஒவ்வொரு சின்னம் வழங்கப்படும்.

 

தேர்தல் ஆணையத்தின் பொது சின்னங்கள் பட்டியலில் ஆட்டோ ரிக்‌ஷா, மட்டை, பேட்டரி டார்ச், வாக்கிங் ஸ்டிக், பலூன், மோதிரம், பெல்ட் உள்ளிட்ட 197 சின்னங்கள் உள்ளன. இதில் கரும்பு விவசாயி நாம் தமிழர் கட்சிக்கும், பிரஷர் குக்கர் சின்னம் அமமுகவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பதியப்பட்டுள்ள மக்கள் சேவை கட்சி-க்கு ஆட்டோ ரிக்‌ஷா ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதான் ரஜினிகாந்தின் பதியப்பட்ட கட்சி என்றும் சொல்லப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்ட கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்தமுறையும் சட்டமன்ற தேர்தலுக்கு பேட்டரி டார்ச் பொது சின்னமாக வேண்டும் எனக் கோரிக்கையை வைத்தது. ஆனால், அந்த சின்னத்தைத் தேர்தல் ஆணையம்  எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது. புதுச்சேரியில் போட்டியிடும் மநீம கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  ‘எப்பாடுபட்டாலும் போராடி பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை மீட்பேன்’ என்று சூளுரைத்துள்ளார் கமல்ஹாசன்.

 

இந்திய அரசியலில் சின்னம் என்பது ஒரு கட்சிக்கு வாக்கு சேகரிப்பதில் மக்களைக் கவர்வதில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு பொருளை விளம்பரம் செய்யும் நிறுவனமானது, தனது பிராண்டை மக்கள் மனதில் பதியவைப்பது எப்படி முக்கியமோ, அதுபோன்றதுதான் அரசியல் கட்சிக்கு சின்னமும். 
 

 

 

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

‘2 நாட்களில் நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன்’ - கமல்ஹாசன்

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
Meet you with good news in 2 days Kamal Haasan

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

அதே சமயம் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 இடங்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என தகவல் வெளியாகி இருந்தது. அதாவது தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தகவல் வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. அதன்படி காங்கிரசின் கை சின்னத்தில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ‘தக் லைப்’ (THUG LIFE) படத்தின் முன்னேற்பாடுகளுக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று (19.02.2024) காலை சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இன்னும் 2 நாட்களில் நல்ல செய்தியுடன் உங்களை (செய்தியாளர்களை) சந்திக்கிறேன். இப்போதைக்கு இது தான் செய்தி. வெளிநாட்டில் இருந்து செய்தியை கொண்டு வரவில்லை. கட்சியினருடன் பேசிவிட்டு 2 நாட்களில் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் நன்றாக நடந்து கொண்டிருக்கின்றது” எனத் தெரிவித்தார்.