Skip to main content

பா.ஜ.க.வுக்கும் சசிகலாவுக்கும் எதிராக இணைந்த கைகள்! அ.தி.மு.க.வின் ரகசிய வியூகம்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

  

ops-eps

                       

அ.தி.மு.க.வில் கட்சி ரீதியான நடவடிக்கைகளில் இ.பி.எஸ்சும் ஓ.பி.எஸ்சும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கின்றனர். ஆட்சியைப் பொறுத்த வரை ’தனி ஒருவராக’ காட்டி வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போது தனது முடிவில் சில மாற்றங்களைச் செய்துகொண்டிருக்கிறார். முதல் கட்டமாக, கட்சியில் ஓ.பி.எஸ்சுடன் இணைந்து எப்படிச் செயல்படுகிறாரோ அதேபோல ஆட்சி நிர்வாகத்திலும் ஓ.பி.எஸ்சுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்திருக்கிறார் என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள். அதன் பிரதிபலிப்பு சமீபத்தில் கோட்டையில் எதிரொலித்தது. 
 


கடந்த 30-ஆம் தேதி கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்சும் கலந்துகொண்டார். அப்போது, தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் தயாரிக்கப்பட்ட, ‘காம்ப்ரஹென்சிவ் ஹைடுலைன்ஸ் கோவிட்-19’ என்கிற புத்தகத்தை எடப்பாடி வெளியிட, அந்தப் புத்தகத்தை ஓ.பி.எஸ். பெற்றுக்கொண்டார். 

இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டபோதே, இதனை எடப்பாடி வெளியிட, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொள்வதாகத்தான் முடிவு செய்யப்பட்டிருந்ததாம். ஆனால், புத்தகம் வெளியிடுவதற்கு இரு நாட்களுக்கு முன்பு, 'நான் வெளியிடும் அந்தப் புத்தகத்தை அண்ணன் ஓ.பி.எஸ். பெற்றுக்கொள்ளட்டும்’ என சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் சொல்லி திருத்தம் செய்திருக்கிறார் எடப்பாடி. மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை முடிந்ததும் ஓ.பி.எஸ்சுடன் தனியாக 30 நிமிடம் எடப்பாடி விவாதித்திருக்கிறார். 
 

 


இது குறித்து விசாரித்தபோது, ‘’சட்டமன்றத் தேர்தலில் நம்முடன் கூட்டணியில் உள்ள கட்சிகள் நம்முடன் இருப்பார்களா? எனத்  தெரியாது. குறிப்பாக பா.ஜ.க. நம்முடன் இருக்குமா? அல்லது பா.ஜ.க.வை நாம் வைத்துக்கொள்வோமா? என்பதற்கு உறுதி கிடையாது. ஆனால், கிடைக்கிற தகவல்கள், நமக்கு எதிராக மத்திய அரசு செயல்படும் என்பதாகவே இருக்கிறது. நம்முடைய பொது எதிரி திமுக. அதனால், தேர்தல் காலத்தில் மத்திய அரசையும் தி.மு.க.வையும் நேரடியாக எதிர்கொள்ள வேண்டி வரலாம். அதனால் அந்த எதிர்ப்புகளை முறியடிக்க, அ.தி.மு.க.வில் கோஷ்டி தகராறுகள் இல்லாமல் கட்சியை வலிமைப்படுத்தியாக வேண்டும். இது தவிர, சசிகலா விடுதலையாகி வெளியே வரும் நிலையில், அவரது செயல்பாடுகள் எப்படி இருக்கும்னு தெரியாது. அவரையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலும் உருவாகலாம். அதனால், அ.தி.மு.க.வில் குழப்பங்கள், கோஷ்டி தகராறுகள் இல்லாமல் இருக்க வேண்டும். நம்முடைய ஒற்றுமைதான் மற்றவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும். அதற்கேற்ப நாம் இணைந்து அரசியல் செய்ய வேண்டும் என இருவரும் பரஸ்பரம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். 

இருவருக்குமிடையே தாமரை இலை தண்ணீர் போல இருந்த உறவு தற்போது இணைந்த கைகளாக மாறியிருக்கிறது. இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இது மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது என்றாலும், இணைந்த கைகள் எத்தனை நாளைக்கு பிரியாமல் இருக்கும் எனத் தெரியவில்லை?’’ என்று தெரிவிக்கின்றனர் நம்மிடம் பேசிய அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.