Skip to main content

"ஓபிஎஸ் யூகிக்க முடியாத மர்மமான மனிதர்... அவர் என்ன நினைக்கிறார் என்பதை அவரே.." - ஓபிஎஸ் பற்றி அஸ்பியர் சுவாமிநாதன்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

dfhg


அதிமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு உருவாக்கப்பட்டு அதன் முதல் செயலாளராக அஸ்பயர் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகாலம் அதில் முதன்மையாகப் பணியாற்றிவந்த அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்த அவர், தற்போது அதிமுகவில் நடைபெற்றுவரும் பிரச்சனைகளை பற்றி என்ன நினைக்கிறார் என்று அறிந்துகொள்ளும் பொருட்டு அவரிடம் சில கேள்விகளைக் கேட்டோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

சமீபத்தில் சசிகலா விவகாரம் தொடர்பாக பேசிய ஓ. பன்னீர்செல்வம், "சசிகலாவை இணைப்பது என்பது கட்சி நிர்வாகிகள் இணைந்து எடுக்க வேண்டிய முடிவு, தலைமை அது தொடர்பாக முடிவெடுக்கும்" என்றார். பன்னீர்செல்வத்தின் இந்தப் பேச்சுக்கு கட்சியிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் சற்று கடுமையாகவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இந்த விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள், பன்னீர்செல்வத்தின் மனதில் என்ன இருக்கிறது? 

 

ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு என்ன என்பது அவர் ஒருவருக்கு மட்டும்தான் தெரியும். அவரைக் கணிக்க யாராலும் முடியாது. அவருடன் நெருங்கி பயணித்தவன் என்ற அடிப்படையில் கூறுகிறேன், அவர் என்ன நினைக்கிறார் என்பது அவர் சொல்லும்வரை யாருக்கும் தெரியாது, புரியாது என்பதே என்னுடைய கணிப்பு. அவர் ஒரு யூகிக்க முடியாத, மர்மமான மனிதராகத்தான் இருந்துவருகிறார். சசிகலா பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தக் கேள்வியை அவரிடம் கேட்டபோது கூட அவர் இதே பதிலைத்தான் கூறினார். நான் கூட, “அண்ணே தலைமை என்றால் நீங்கள்தானே” என்று கேட்டேன். அவர், “இல்லை தலைமைக்கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார். அவர் தன்னுடைய முடிவில் மாறுபட்டு பேசுவதில்லை, தொடர்ந்து ஒரே நிலையில் அவர் இருந்துவருகிறார். ஆனால் நமக்கு அவர் எந்த தெளிவான பதிலும் கூறமாட்டார். நாம் இதுவா இருக்குமோ, இல்லை அதுவா இருக்குமோ என்று குழம்பிப்போய் இருக்க வேண்டியதுதான்.

 

அதிமுக, ஜெயலலிதா இருந்தபோது எப்படி இருந்தது, இரட்டை தலைமையில் தற்போது எப்படி செயல்படுகிறது? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

 

ஜெயலலிதா இருந்தபோது மிகவும் கட்டுப்பாட்டோடு, கட்சியினர் பொறுப்புடன் செயல்பட்டுவந்தனர். ஆனால் தற்போது கட்சி அப்படி செயல்படவில்லை. ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன். ஜெயலலிதா இருந்தபோது கட்சித் தலைமை ஒரு கூட்டத்தை அறிவித்தால் சில தினங்களில் மாவட்டச் செயலாளர்கள் சம்பந்தப்பட்ட நபரை தொலைப்பேசியில் அழைத்து, எப்போது வருகிறீர்கள், எதில் வருகிறீர்கள் என அனைத்தையும் குறித்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப செயல்படுவார்கள். ஆனால் தற்போது, இவர்கள் கூட்டத்தை அறிவிக்கிறார்கள். இவர்கள் கூறிய இடத்தில் போராட்டம் நடந்ததா இல்லையா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. எனக்கே அந்த மாதிரியான இக்கட்டான நிகழ்வு நடைபெற்றுள்ளது. மாயவரத்தில் கூட்டம் என்று சென்றுவிட்டேன், ஆனால் என்னை யாரும் தொடர்புகொள்ளவில்லை. நானே கூட்டம் நடைபெறும் இடத்திற்கும் சென்றேன், யாரும் இல்லை. வந்தது வந்துவிட்டோம் என்று வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்றுவிட்டு வந்தேன். தற்போது போராட்டத்தை அறிவித்துவிட்டு அமைதியாகிவிடுகிறார்கள். அதைப்பற்றி இவர்களுக்குக் கவலையில்லை. கட்சியினரும் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. 

 

தற்போது புகழேந்தி என்ற ஒருவரைக் கட்சியைவிட்டு நீக்கியுள்ளீர்கள். அவரை என்ன காரணத்திற்காக நீக்கியுள்ளனர் என்று யாருக்காவது தெரியுமா? பாமகவை பற்றி ஏதோ ஒன்றைக் கூறிவிட்டார் என்ற காரணத்திற்காக அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதிமுகவில் தற்போது யாரும் தலைமைக்கு எதிராகப் பேசவில்லையா? அன்வர் ராஜாவில் ஆரம்பித்து ஆளுக்கொரு கருத்தை தெரிவித்துவருகிறார்கள். அவர்களை எல்லாம் நீக்க வேண்டியதுதானே, ஏன் நீக்கப் பயப்படுகிறீர்கள். பன்னீர்செல்வத்தை பலரும் விமர்சனம் செய்கின்றனர், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்பவர்கள் அடுத்த நொடியே நீக்கப்படுகிறார்கள் என்றால் கட்சியில் எந்த மாதிரியான, யாருக்கு சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்பது புரியவரும். புகழேந்திக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பது எந்த வகையிலும் சரியாக இருக்காது. எனவே காலம் இவர்கள் அனைவருக்கு தகுந்த பாடத்தை எடுக்கும்" என்றார்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.