2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே இந்திய ராணுவ அணிவகுப்புக்கு ஊடாக பயங்கரவாதியின் வாகனம் புகுந்து வெடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.

balkot

Advertisment

Advertisment

இந்தத் தாக்குதலை தடுக்க மத்திய அரசுக்கு துப்பில்லையா என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான விமர்சனமாக அடிக்கடி குறிப்பிட்டார். நாடு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதைப் போல அவர் தொடர்ந்து பேசினார்.

2019 ஏப்ரல் 11 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி 300 பயங்கரவாதிகளை கொன்றதாக மத்திய அரசு அறிவித்தது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 300க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மோடி அறிவித்தார்.

ஆனால், வெற்றிடத்தில்தான் இந்திய விமானங்கள் குண்டுவீசியதாகவும், யாரும் பலியாகவில்லை என்றும் பாகிஸ்தான் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்திய விமானங்கள் குண்டுவீசிய பகுதிக்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துப்போய் காட்டினார்கள். அந்த இடத்தில் மிகப்பெரிய பள்ளமே காணப்பட்டது.

narendra modi

இந்தத் தாக்குதலையே மோடி தனது தேர்தல் பிரச்சார வீராவேச உரைகளில் தவறாது குறிப்பிட்டார். கடைசியாக, இந்தத் தாக்குதலுக்கு விமானப்படை அதிகாரிகளுக்கு நேரம் குறித்துக் கொடுத்ததே தான்தான் என்று மோடி ஒரு தகவலை வெளியிட்டார். வானம் மேக மூட்டமாக இருப்பதால், பாகிஸ்தான் ரேடார்களில் இருந்து இந்திய விமானங்கள் எளிதில் தப்பலாம் என்ற யோசனையை விமானப்படை தளபதிகளுக்கு சொன்னதாக கூறினார் மோடி. இது நகைப்புக்குரிய விஷயமாக இருந்தாலும், வட மாநிலங்களில் உள்ள அப்பாவி மக்கள் இதை மோடியின் புத்திகூர்மையாகவே பார்த்தனர். மேகம் இருந்தால் ரேடாரில் விமானம் தப்பலாம் என்று சொல்லுமளவுக்குத்தான் நமது பிரதமரின் அறிவு இருப்பதை கற்றறிந்தோர் மட்டுமே விமர்சனம் செய்தனர். அபிநந்தன் சென்ற விமானத்திற்கு ஏன் மோடி வழிகாட்டவில்லை என்றும் அவர்கள் வினா எழுப்பினார்கள்.

இந்திய விமானப்படை விமானங்கள் எதிரி நாட்டு ரேடார்களிடம் இருந்து தப்பிக்க நேரம் பார்த்து சொன்ன பிரதமர் மோடி, இரண்டாம் முறையாக சர்ச்சைக்குரிய வகையில் பிரதமராக பொறுப்பேற்றார். இந்தத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களை வைத்து எதிர்க்கட்சிகள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன.

missing flight

இந்நிலையில்தான் ஜூன் 3 ஆம் தேதி திங்கள் கிழமை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 வகை சரக்கு விமானம் 13 விமானிகளுடன் அருணாச்சல பிரதேசத்துக்கு புறப்பட்டது. ஆனால் அந்த விமானம் திடீரென காணாமல் போனது.

காணாமல் போய் நான்கு நாட்கள் ஆன நிலையிலும் அந்த விமானத்தை, அதுவும் இந்திய எல்லைக்குள் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க மோடியிடம் ஏதும் சிறப்பு யோசனைகள் இருக்கின்றனவா என்பதை அதிகாரிகள் யாரும் வினவவில்லை போல.

மேகமூட்டமாக இருந்தால், இந்திய ரேடார்களிடம் வெளிநாட்டு விமானங்கள் தப்பிக்கவும் சேர்த்தே யோசனை சொன்னவர் மோடி. ஆனால், நமது நாட்டு விமானங்கள் நமது எல்லைக்குள் காணாமல் போனால் கண்டுபிடிப்பது எப்படி என்பதை அறியாமலா இருப்பார்.

வான் வழியாகவும், தரை வழியாகவும் நான்கு நாட்கள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு மலேசியா பயணிகள் விமானம் ஒன்று தெற்கு சீன கடல்மீது பறந்த நிலையில் திடீரென்று காணாமல் போனது. அந்த விமானம் குறித்த சிறு தடயம்கூட கிடைக்கவில்லை.

அதுபோலவே இப்போது இந்திய விமானப்படை சரக்கு விமானமும் இந்திய ரேடார்களைத் தப்பி மர்மமான முறையில் மாயமாய் மறைந்திருக்கிறது. இன்றைய நிலையில் ரஃபேல் விமானங்கள் வாங்குவதைக் காட்டிலும் காணாமல் போகும் விமானங்களை கண்டுபிடிக்கும் நவீன கருவிகளை வாங்குவதே இந்திய விமானப்படைக்கு உதவியாக இருக்கும்.