Skip to main content

துல்லியத் தாக்குதலும் காணாமல் போன விமானப்படை விமானமும்!

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா அருகே இந்திய ராணுவ அணிவகுப்புக்கு ஊடாக பயங்கரவாதியின் வாகனம் புகுந்து வெடிக்கிறது. இந்த கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
 

balkot

 

 

இந்தத் தாக்குதலை தடுக்க மத்திய அரசுக்கு துப்பில்லையா என்று அரசியல் விமர்சனங்கள் எழுந்த நிலையில், மக்களவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான விமர்சனமாக அடிக்கடி குறிப்பிட்டார். நாடு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் ஆபத்தை எதிர்நோக்கி இருப்பதைப் போல அவர் தொடர்ந்து பேசினார்.
 

2019 ஏப்ரல் 11 ஆம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தி 300 பயங்கரவாதிகளை கொன்றதாக மத்திய அரசு அறிவித்தது. ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் 300க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் மோடி அறிவித்தார்.
 

ஆனால், வெற்றிடத்தில்தான் இந்திய விமானங்கள் குண்டுவீசியதாகவும், யாரும் பலியாகவில்லை என்றும் பாகிஸ்தான் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்திய விமானங்கள் குண்டுவீசிய பகுதிக்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்துப்போய் காட்டினார்கள். அந்த இடத்தில் மிகப்பெரிய பள்ளமே காணப்பட்டது.
 

narendra modi


இந்தத் தாக்குதலையே மோடி தனது தேர்தல் பிரச்சார வீராவேச உரைகளில் தவறாது குறிப்பிட்டார். கடைசியாக, இந்தத் தாக்குதலுக்கு விமானப்படை அதிகாரிகளுக்கு நேரம் குறித்துக் கொடுத்ததே தான்தான் என்று மோடி ஒரு தகவலை வெளியிட்டார். வானம் மேக மூட்டமாக இருப்பதால், பாகிஸ்தான் ரேடார்களில் இருந்து இந்திய விமானங்கள் எளிதில் தப்பலாம் என்ற யோசனையை விமானப்படை தளபதிகளுக்கு சொன்னதாக கூறினார் மோடி. இது நகைப்புக்குரிய விஷயமாக இருந்தாலும், வட மாநிலங்களில் உள்ள அப்பாவி மக்கள் இதை மோடியின் புத்திகூர்மையாகவே பார்த்தனர். மேகம் இருந்தால் ரேடாரில் விமானம் தப்பலாம் என்று சொல்லுமளவுக்குத்தான் நமது பிரதமரின் அறிவு இருப்பதை கற்றறிந்தோர் மட்டுமே விமர்சனம் செய்தனர். அபிநந்தன் சென்ற விமானத்திற்கு ஏன் மோடி வழிகாட்டவில்லை என்றும் அவர்கள் வினா எழுப்பினார்கள்.
 

இந்திய விமானப்படை விமானங்கள் எதிரி நாட்டு ரேடார்களிடம் இருந்து தப்பிக்க நேரம் பார்த்து சொன்ன பிரதமர் மோடி, இரண்டாம் முறையாக சர்ச்சைக்குரிய வகையில் பிரதமராக பொறுப்பேற்றார். இந்தத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்களை வைத்து எதிர்க்கட்சிகள் பல சந்தேகங்களை எழுப்புகின்றன.
 

missing flight

 

 

இந்நிலையில்தான் ஜூன் 3 ஆம் தேதி திங்கள் கிழமை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 வகை சரக்கு விமானம் 13 விமானிகளுடன் அருணாச்சல பிரதேசத்துக்கு புறப்பட்டது. ஆனால் அந்த விமானம் திடீரென காணாமல் போனது.
 

காணாமல் போய் நான்கு நாட்கள் ஆன நிலையிலும் அந்த விமானத்தை, அதுவும் இந்திய எல்லைக்குள் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க மோடியிடம் ஏதும் சிறப்பு யோசனைகள் இருக்கின்றனவா என்பதை அதிகாரிகள் யாரும் வினவவில்லை போல.
 

மேகமூட்டமாக இருந்தால், இந்திய ரேடார்களிடம் வெளிநாட்டு விமானங்கள் தப்பிக்கவும் சேர்த்தே யோசனை சொன்னவர் மோடி. ஆனால், நமது நாட்டு விமானங்கள் நமது எல்லைக்குள் காணாமல் போனால் கண்டுபிடிப்பது எப்படி என்பதை அறியாமலா இருப்பார்.
 

வான் வழியாகவும், தரை வழியாகவும் நான்கு நாட்கள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. 2014 ஆம் ஆண்டு மலேசியா பயணிகள் விமானம் ஒன்று தெற்கு சீன கடல்மீது பறந்த நிலையில் திடீரென்று காணாமல் போனது. அந்த விமானம் குறித்த சிறு தடயம்கூட கிடைக்கவில்லை.
 

அதுபோலவே இப்போது இந்திய விமானப்படை சரக்கு விமானமும் இந்திய ரேடார்களைத் தப்பி மர்மமான முறையில் மாயமாய் மறைந்திருக்கிறது. இன்றைய நிலையில் ரஃபேல் விமானங்கள் வாங்குவதைக் காட்டிலும் காணாமல் போகும் விமானங்களை கண்டுபிடிக்கும் நவீன கருவிகளை வாங்குவதே இந்திய விமானப்படைக்கு உதவியாக இருக்கும்.

 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலச்சரிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sudden landslide in Arunachal Pradesh

அருணாச்சலப் பிரதேசத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டி திபெங் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள திபெங் பள்ளத்தாக்கில் இருந்து இந்தியாவின் பிற பகுதிகளை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை எண் 33 அமைந்துள்ளது. இத்தகைய சூழலில் அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் ரோயிங் - அனினி இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற மாவடடங்களில் இருந்து திபெங் மாவட்டம் தனியாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய இந்திய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலை சீரமைக்கப்படும் வரை அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுசீரமைப்பு பணிகள் நிறைவடைய 3 நாட்கள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், இந்த வழித்தடத்தில் பயணங்களை தவிர்க்கவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.