Skip to main content

வெயிலோடு விளையாடி மல்லுக்கட்டியது போதும்! -மழையோடு உறவாட சிவகாசி உருவாக்கும் செயற்கைத் தீவு!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

 

 

‘எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்..’ - வெயில் திரைப்படத்துக்காக நா.முத்துகுமார் எழுதிய இந்தப் பாடல் வரி, கந்தகபூமி என்று சொல்லப்படும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசிக்கு, என்றைக்கும் பொருந்திப் போகிறது.  

 


‘நமது மேகங்கள் எல்லாம் களவு போவதற்கு காரணம் என்ன? சினிமாவில் இத்தனை சீரியஸாகப் பாடப்பட்ட இயற்கையின் வஞ்சனைக்கு, மனிதர்களால் தீர்வு காண முடியாதா?’ என்றெல்லாம் சிந்தித்தனர். ‘கனத்த, கருத்த மேகங்களை குளிர்வித்து மழையாக மாற்றும் சக்திமிக்க அடர்வனங்கள் சிவகாசியில் இல்லை. நம் ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் மரங்களுக்கு, கடந்து செல்லும் மேகங்களை மழையாக மாற்றும் தெம்பும், திராணியும் இல்லை.’ என, அதற்கான விடை கிடைத்தது. 
‘மேகக்கூட்டங்களின் வயிற்றைக் குத்திக் கிழிக்கும் சக்தி, எதிர்காலத்தில் நாம் அமைக்கவிருக்கும் அடர்வனங்களுக்கு மட்டுமே உண்டு..’ என்பதை உணர்ந்த அவர்கள், மளமளவென்று காரியத்தில் இறங்கினார்கள். 

 


யார் அவர்கள்? என்ன செய்தார்கள்?


பசுமையே நாட்டின் வளமை என்ற உறுதியுடன், இயற்கையை காத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை தடுத்தல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும், சிவகாசி எக்ஸ்னோரா இன்னோவேட்டர்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள்தான் அவர்கள்.  ஒருகாலத்தில் ஊரின் நீராதரமாகத் திகழ்ந்த பெரியகுளம் கண்மாய், தற்போது கிரிக்கெட் மைதானமாகிவிட்டது கண்டு வேதனையுற்றனர்.  அங்கே 15 அடி உயரத்தில், 7500 சதுர அடியில், மியாவாக்கி முறையில் செயற்கைத் தீவு ஒன்றை அமைத்து, அடர்வனங்களை உருவாக்கும் முயற்சியாக, 2000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் திட்டமிட்டனர்.  

 


திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, அந்த செயற்கைத் தீவில், புங்கன், தான்சி, விலாம், ஸ்பெட் ரோலியா, கருங்காளி, நெட்டிலிங்கம், செண்பகம், மகிழம்பூ, இலவம்பஞ்சு, அசோகா, அரசமரம், நாகலிங்கம் மற்றும் மருத்துவ பயன்மிக்க மருதமரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை ஒரே இடத்தில் நடப்பட்ட நிகழ்ச்சியை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.  

 


எக்ஸ்னோரா உறுப்பினரான வெங்கடேசுவரன் நம்மிடம் “டிஜிட்டல் உலகமாகிவிட்டது. இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு மக்கள் பழகிவிட்டனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நம்மில் பலருக்கும் அக்கறையில்லை. இயற்கையை காக்கவும், பசுமையை உருவாக்கவும் மரங்கள் அவசியமாகின்றன. நடப்பட்ட மரக்கன்றுகளை முதல் 6 மாதங்கள் மட்டும் பராமரித்தாலே போதுமானது. எந்த மண்ணிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும், இவை வளர்ந்து மரமாகி, உறுதியாக பலன் கொடுக்கும்.” என்றார், நம்பிக்கையோடு. 

 


சிவகாசி பகுதியில், சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் உதவியோடு, வருங்காலத்தில் நகர் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கும் திட்டம் வகுத்துள்ளனர். 

 

‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை’

-அவ்வையின் இம்மூதுரை, சிவகாசியில் பலிக்கட்டும்! 
 

 

 

 

Next Story

வாக்காளர் அட்டை இங்கே! என் ஓட்டு எங்கே? - வாக்காளர் ஆத்திரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Sivakasi, voter panic due to inability to vote
சாந்தி - சங்கரன்

தமிழ்நாட்டில் உள்ள 6 கோடியே 23 லட்சம் வாக்காளர்களில், ஒரு கோடியே 74லட்சத்து 44 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. மொத்தத்தில், அதி முக்கிய ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாத வாக்காளர்கள் 28 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் யார் யாருக்கு என்னென்ன  கஷ்டமான சூழ்நிலையோ தெரியவில்லை. ஆனாலும், வாக்களிக்கும் முக்கியத்துவத்தை உணராமல், சோம்பேறித்தனமாக வீட்டிலோ, அலட்சியமாக வெளியூர்களிலோ இருந்தவர்கள், அனேகம் பேர்.

சிவகாசியில் வாக்குச்சாவடி ஒன்றிலிருந்து நம்மை அழைத்த சங்கரன், தன்னையும் தன் மனைவி சாந்தியையும் வாக்களிக்க அனுமதிக்காததால், கொதித்துபோய்ப் பேசினார்.  “இத்தனை வருடங்களாக ஓட்டு போட்டுட்டு இருக்கேன். வாக்காளர் அடையாள அட்டை எங்ககிட்ட இருந்தும், இந்தத்தேர்தல்ல உங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொன்னா, இது அக்கிரமம் இல்லியா? இதெல்லாம் எப்படி நடக்குது? ரொம்பக் கொடுமையா இருக்கு. எங்களுக்கு ஓட்டு இல்லைன்னு சொல்லி, அங்கேயிருந்த சிவகாசி மாநகராட்சி அலுவலர்களைப் பார்க்கச் சொன்னாங்க.

 Sivakasi, voter panic due to inability to vote

மூணு மாசத்துக்கு முன்னால லிஸ்ட்லசெக் பண்ணும்போது எங்க பேரு இருந்துச்சுன்னு நான் சொன்னேன். லிஸ்ட்ல உங்க பேரு இல்ல. போன் நம்பர் தப்பா இருக்குன்னாங்க. அப்புறம் இன்டர்நெட்ல EPIC நம்பரை போட்டுப் பார்த்து, எலக்‌ஷன் கமிஷன்ல என் பேரு இருக்கிறத காமிச்சதும், அப்படியான்னு சொல்லி, ஓட்டு போடவிட்டாங்க. ஆனா..என் வீட்டுக்காரம்மா சாந்திக்கு ஓட்டு இல்லைன்னு சாதிச்சிட்டாங்க. அவங்க ரொம்பவும் மனசு வேதனைப்பட்டு, நூறு சதவீதம் வாக்களிப்போம்னு போர்டு வைக்கிறாங்க. ஆனா.. ஓட்டு போட வந்தவங்களுக்கு ஓட்டு இல்லைங்கிறாங்க. அப்படின்னா.. நான் வச்சிருக்கிற வாக்காளர் அடையாள அட்டைக்கு என்ன மதிப்புன்னு மொதல்ல சத்தம் போட்டாங்க. அப்புறம் அழுதுட்டாங்க.” என்றார் ஆதங்கத்துடன்.

 Sivakasi, voter panic due to inability to vote

இதே சிவகாசியில், சிவகாசி மாநகராட்சியின் முதலாவது வார்டு திமுக கவுன்சிலர் செல்வத்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. சென்னை சாலிகிராமத்தில் வாக்களிக்கச் சென்ற நடிகர் சூரியின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. அவராலும் வாக்களிக்க முடியாமல் போனது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும் வாக்களிக்க வராத கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போன சாந்தி, நடிகர்சூரி போன்றோரும் நிறையப்பேர் இருக்கிறார்கள். வாக்களிப்பதில் உள்ள குறைபாடுகளுக்குத் தீர்வுகாண முடியாத நிலையில் உள்ளது டிஜிட்டல் இந்தியா என்று கடுமையாக சாடுகின்றனர் சமூக ஆர்வலர்கள். 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.