Skip to main content

வெயிலோடு விளையாடி மல்லுக்கட்டியது போதும்! -மழையோடு உறவாட சிவகாசி உருவாக்கும் செயற்கைத் தீவு!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

 

 

‘எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்..’ - வெயில் திரைப்படத்துக்காக நா.முத்துகுமார் எழுதிய இந்தப் பாடல் வரி, கந்தகபூமி என்று சொல்லப்படும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசிக்கு, என்றைக்கும் பொருந்திப் போகிறது.  

 


‘நமது மேகங்கள் எல்லாம் களவு போவதற்கு காரணம் என்ன? சினிமாவில் இத்தனை சீரியஸாகப் பாடப்பட்ட இயற்கையின் வஞ்சனைக்கு, மனிதர்களால் தீர்வு காண முடியாதா?’ என்றெல்லாம் சிந்தித்தனர். ‘கனத்த, கருத்த மேகங்களை குளிர்வித்து மழையாக மாற்றும் சக்திமிக்க அடர்வனங்கள் சிவகாசியில் இல்லை. நம் ஊரில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் மரங்களுக்கு, கடந்து செல்லும் மேகங்களை மழையாக மாற்றும் தெம்பும், திராணியும் இல்லை.’ என, அதற்கான விடை கிடைத்தது. 
‘மேகக்கூட்டங்களின் வயிற்றைக் குத்திக் கிழிக்கும் சக்தி, எதிர்காலத்தில் நாம் அமைக்கவிருக்கும் அடர்வனங்களுக்கு மட்டுமே உண்டு..’ என்பதை உணர்ந்த அவர்கள், மளமளவென்று காரியத்தில் இறங்கினார்கள். 

 


யார் அவர்கள்? என்ன செய்தார்கள்?


பசுமையே நாட்டின் வளமை என்ற உறுதியுடன், இயற்கையை காத்தல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவை தடுத்தல் ஆகிய செயல்பாடுகளில் ஈடுபட்டு வரும், சிவகாசி எக்ஸ்னோரா இன்னோவேட்டர்ஸ் கிளப்பை சேர்ந்தவர்கள்தான் அவர்கள்.  ஒருகாலத்தில் ஊரின் நீராதரமாகத் திகழ்ந்த பெரியகுளம் கண்மாய், தற்போது கிரிக்கெட் மைதானமாகிவிட்டது கண்டு வேதனையுற்றனர்.  அங்கே 15 அடி உயரத்தில், 7500 சதுர அடியில், மியாவாக்கி முறையில் செயற்கைத் தீவு ஒன்றை அமைத்து, அடர்வனங்களை உருவாக்கும் முயற்சியாக, 2000 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் திட்டமிட்டனர்.  

 


திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, அந்த செயற்கைத் தீவில், புங்கன், தான்சி, விலாம், ஸ்பெட் ரோலியா, கருங்காளி, நெட்டிலிங்கம், செண்பகம், மகிழம்பூ, இலவம்பஞ்சு, அசோகா, அரசமரம், நாகலிங்கம் மற்றும் மருத்துவ பயன்மிக்க மருதமரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை ஒரே இடத்தில் நடப்பட்ட நிகழ்ச்சியை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் துவக்கி வைத்தார்.  

 


எக்ஸ்னோரா உறுப்பினரான வெங்கடேசுவரன் நம்மிடம் “டிஜிட்டல் உலகமாகிவிட்டது. இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு மக்கள் பழகிவிட்டனர். சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நம்மில் பலருக்கும் அக்கறையில்லை. இயற்கையை காக்கவும், பசுமையை உருவாக்கவும் மரங்கள் அவசியமாகின்றன. நடப்பட்ட மரக்கன்றுகளை முதல் 6 மாதங்கள் மட்டும் பராமரித்தாலே போதுமானது. எந்த மண்ணிலும், எத்தகைய சீதோஷ்ண நிலையிலும், இவை வளர்ந்து மரமாகி, உறுதியாக பலன் கொடுக்கும்.” என்றார், நம்பிக்கையோடு. 

 


சிவகாசி பகுதியில், சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் உதவியோடு, வருங்காலத்தில் நகர் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதற்கும் திட்டம் வகுத்துள்ளனர். 

 

‘நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை’

-அவ்வையின் இம்மூதுரை, சிவகாசியில் பலிக்கட்டும்! 
 

 

 

 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.