Skip to main content

நாங்கள் பட்டதுபோதும்... எங்களை கருணை கொலை செய்துவிடுங்கள்: பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கண்ணீர்

Published on 15/06/2018 | Edited on 15/06/2018
arputham ammal


ராஜீவ் கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய கடந்த 4 ஆண்டுகளில் இரண்டு முறை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கைதிகளின் விடுதலை குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

 


உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் கைதிகளின் உடல்நலம் மற்றும் மனநலம் குறித்த விவரங்களை கேட்டு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. ஆனால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியானது.
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், 
 

இந்த விஷயத்தில் மத்திய அரசின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம். இந்த வழக்கில் குடியரசுத் தலைவர் இப்போது வருவது ஏன் என்று எனக்கு புரியவில்லை. இந்த வழக்கில் வாக்குமூலம் வாங்கிய அதிகாரிகளில் இருந்து நீதிபதிகள் வரை எல்லோருமே இவர்களை விடுதலை செய்யலாம் என்று சொன்னார்கள். மாநில அரசும் எங்களது நிலைப்பாடும் அதுதான், மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறது. 

 

 


இவர்கள் இரண்டு பேரின் ஆட்சியில் நாங்கள் பட்டதுபோதும். 27 ஆண்டுகளாக போராடி பார்த்துவிட்டோம். நான் முடிவு பண்ணிவிட்டேன். இந்த இரண்டு அரசுகளுக்கும் மனு கொடுக்கப்போகிறேன். என் மகனுக்கு 47 வயது. என் மகனை கருணை கொலை பண்ணிவிடுங்கள். என்னை சாகடித்துவிடுங்கள். உங்கள் ஆட்சியில் நாங்கள் வாழ்ந்தது போதும் என்று மனு கொடுக்கப்போகிறேன். வேறெதுவும் இல்லை. இதற்கு மேல் போராட முடியவில்லை. எவ்வளவுதான் போராட முடியும். எங்களது வாழ்க்கையே போய்விட்டது. வெளியே நானும், உள்ளே என் மகனும்... வாழ்க்கையையே நாசம் பண்ணிவிட்டார்கள் என கண்ணீரோடு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மறைவு; தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
High Court question to Tamil Nadu Govt for Santhan's disappearance

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (28-02-24) உயிரிழந்தார்.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சாந்தன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 30 வருடம் சிறையில் இருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்திருந்தது. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அகதிகள் முகாமில் சிறப்பு வசதிகள் ஏதுமில்லை, நடைப்பயிற்சி செய்ய முடியவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சாந்தன் தரப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அவர் உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி ஏற்படுத்தியிருந்தது. 

சாந்தன் உயிருடன் இருக்கும் போது, நோய்வாய்ப்பட்டுள்ள தனது தாயை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னர் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், குமரேஷ் பாபு ஆகியோர் அமர்வு முன் வந்தது. அதில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜரானார்.

அப்போது, சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி எப்போது கிடைத்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், ‘கடந்த 22ஆம் தேதி சாந்தனை இலங்கை அனுப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று கூறினார். இதனையடுத்து, ‘சாந்தனை இலங்கைக்கு அனுப்ப 22ஆம் தேதியே மத்திய அரசு அனுமதி அளித்தும் ஏன் அவரை அனுப்பவில்லை’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், ‘சாந்தனை இலங்கைக்கு ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்ப தயாராக இருந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவ ரீதியாக உடல் ஒத்துழைக்கவில்லை’ என்று பதில் அளித்தார். இதனையடுத்து, சாந்தனின் உடல்  இலங்கைக்கு கொண்டு செல்ல அனைத்து உதவிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான நோடல் அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.