Skip to main content

'நேஷன் வான்ட்ஸ் டு நோ'... அர்னாப்பை துளைக்கும் கேள்விக்கணைகள்..!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

arnab goswami whatsapp leak issue

 

ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் (BARC) அமைப்பின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தா ஆகிய இருவரும் பேசிக்கொண்டதாக ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள வாட்சப் உரையாடல் கசிந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

மகாராஷ்ட்ரா அரசு மற்றும் அர்னாப் கோஸ்வாமி இடையே அண்மைக்காலமாக பல்வேறு உரசல்கள் இருந்துவந்தன. உரசல்கள் விரிசல்களாய் மாறிய பின்பு, பழைய வழக்குகளைத் தூசி தட்டிய தாக்கரே அரசு, சில மாதங்களுக்கு முன்பு அர்னாபை கைதுசெய்தது. அதன்பிறகு, விரிசல்கள் அதிகரித்தன. டி.ஆர்.பி. முறைகேடு வழக்கின் நீட்சியாக பார்தோ தாஸ்குப்தாவின் வாட்சப் உரையாடலைக் கவனித்த மகாராஷ்ட்ர அரசுக்குப் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. டி.ஆர்.பி முறைகேட்டை தோண்டச் சென்ற மகாராஷ்ட்ரா அரசுக்கு ராணுவ ரகசியங்கள் எனும் பெரும்பூதம் அகப்பட்டுள்ளது.

 

புல்வாமா தாக்குதல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, சர்ஜிகல் ஸ்ட்ரைக், நீதிபதியை விலைக்கு வாங்குவது, மத்திய அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றங்கள் வரை அத்தனையும் அவர்களால் முன்கூட்டியே பேசப்பட்டிருக்கிறது. 'அர்னாபுக்கு தெரிந்த ரகசியங்கள் இன்னும் யார் யாருக்குத் தெரிந்தது' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை இந்த ரகசியங்கள் அர்னாபுக்கு தெரிந்ததைப் போலவே பாகிஸ்தானுக்கும் தெரிந்திருந்தால் 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' நடத்தச் சென்ற ராணுவ வீரர்களின் கதி என்னவாகியிருக்கும் என எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்வியை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. அதேபோல, அர்னாப் என்ற பெயருக்குப் பதிலாக, இந்த இடத்தில் வேறு ஏதேனும் ஒரு பெயர் இடம்பெற்றிருந்தால், இந்த விவகாரம் மக்கள் மத்தியிலும், அரசாங்க மட்டத்திலும் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதும் தவறாமல் யோசிக்கவேண்டியதாகும்.  

 

arnab goswami whatsapp leak issue

 

புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அந்த உரையாடலில், "இந்த வருடத்தின் மிகப்பெரும் தீவிரவாத சம்பவம் நடந்த அரை மணி நேரத்திற்குள் நமது சேனல்தான் லீடிங். இதன் மூலம் நமக்குப் பெரும் வெற்றி கிடைத்துள்ளது" எனப் பெருமிதப்பட்டுள்ளார் அர்னாப். 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை விட தனது தொலைக்காட்சிக்கு கிடைத்த புகழ் வெளிச்சம், இந்தியாவின் ஒரே தேசப்பற்றாளரான அர்னாபை மகிழச் செய்துள்ளது.

 

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை வெளியான வாட்சப் உரையாடல்கள் அனைத்தும் உண்மை என மும்பை போலீஸ் தெரிவித்ததாக டெல்லியைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அர்னாபும் இந்த விவகாரத்தை மறுக்கவில்லை. 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' புகழ் அர்னாப் கோஸ்வாமியிடம் இந்தத் தேசம் பல கேள்விகளை எழுப்பக் காத்திருக்கிறது. அதற்கெல்லாம் அவரிடம் பதில் இருக்கிறதோ இல்லையோ, 'சத்யமேவ ஜெயதே, பாரத் மாதா கி ஜே, ஜெய்ஹிந்த்' போன்ற தேசப்பற்று கிளிஷேக்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இவ்வளவும் ஆதாரங்களோடு வெளியே தெரிந்த பின்பும், 'அர்னாப் சிறந்த தேசப்பற்றாளர்' என ஒரு கும்பல் நம்புகிறது அல்லது பிறரை நம்பவைக்க முயல்கிறது.

 

இவ்வளவு நெருக்கமாக அர்னாபுடன் இருக்கவேண்டிய அவசியம் பார்க் முன்னாள் அதிகாரிக்கு ஏன் வந்தது என உங்களுக்குத் தோன்றலாம். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை தனது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள பார்க் அதிகாரி நினைத்துள்ளார். அதற்கு அர்னாப் உதவியுள்ளார். அதேபோல, தனது மகளுக்கு சிறந்த வழக்கறிஞரிடம் 'இன்டர்ன்ஷிப்' கிடைப்பதற்கு உதவுமாறு அர்னாபிடம் சிபாரிசு கேட்டுள்ளார் பார்க் அதிகாரி பார்த்தோ. அதற்கு உதவுவதாக அர்னாப் கூறியுள்ளார். இவ்வாறு பல கைமாறுகளுடன் அந்த வாட்சப் உரையாடல் நீள்கிறது. 

 

" 'சிக்னல்' என ஒரு செயலி உள்ளது. அது மிகவும் பாதுகாப்பானது" என இவர்கள் இருவரும் தங்களது வாட்சப் உரையாடல்களில் பேசியுள்ளனர். அதுவும் லீக் ஆகியுள்ளது. இதைப் பிடித்துக்கொண்டு 'அன்றே சொன்னார் அர்னாப்', 'இந்தியாவின் நாஸ்டர்டாமஸ்' என ஒரு கூட்டம் கிளம்பாமல் இருப்பது சாலச் சிறந்தது!

 

Next Story

புல்வாமா தாக்குதல் விவகாரம்; பிரதமர் மோடியை விமர்சித்த முன்னாள் ஆளுநர் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
CBI raids house of ex-governor who criticized PM Modi who Pulwama incident issue

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்தவர் சத்யபால் மாலிக். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். 

முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, “மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள். சாலை மார்க்கமாக அவர்கள் சென்றபோதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை.

அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு, விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால் பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்றும் அமைதியாக இருக்கும்படியும்’ கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படியே கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனக் கூறினார். இவர் பேசியது, அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனிடையே, முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் பதவி வகித்தபோது, அரசு ஊழியர்களுக்கு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் நீர்மின் திட்டம் ஆகியவற்றிற்கான ஒப்பந்தங்கள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ சத்யபால் மாலிக்கிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீடு உள்ளிட்ட 30 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று (22-02-24) காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story

புல்வாமா தாக்குதல் விவகாரம்: அமித்ஷாக்கு சத்யபால் மாலிக் பதிலடி!

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

sathyapal malick versus amithsha related pulvama incident

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2018 முதல் 2019 வரை ஆளுநராக பதவி வகித்து வந்த சத்யபால் மாலிக் அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர்களின் மீதான தாக்குதல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் காரணமாகவே ஏற்பட்டது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். ராணுவ வீரர்களை அழைத்துச் செல்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து விமானம் கேட்கப்பட்டது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சகம் விமானத்தை தர மறுத்து சாலை மார்க்கமாக செல்லும்படி உத்தரவிட்டது. இதன் காரணமாகவே சிஆர்பிஎஃப் வீரர்கள் சாலை மார்க்கமாக சென்றார்கள்.

 

சாலை மார்க்கமாக அவர்கள் சென்ற போதும் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் திறம்படச் செய்யப்படவில்லை. அன்று மாலையே பிரதமரிடம் இது குறித்து கூறினேன். ‘இது நம் தவறு. விமானம் வழங்கப்பட்டு இருந்தால் இது நடந்திருக்காது’ என்று தெரிவித்தேன். ஆனால், பிரதமர் ‘இது குறித்து வெளியில் யாரிடமும் கூற வேண்டாம்’ என்றும், அமைதியாக இருக்கும்படியும் கூறினார். தேசிய பாதுகாப்பு செயலாளரும் அமைதியாக இருக்கும்படி கூறினார். வெடி மருந்துகளுடன் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வந்த வாகனம் 10 முதல் 12 நாட்கள் சுற்றித் திரிந்ததை உளவுத்துறையினர் சரிவர கவனிக்கவில்லை. இது உளவுத்துறையினர் தோல்வி” எனப் பேசியிருந்தார். இவரின் இந்த பேச்சானது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது.

 

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவிக்கையில், "சத்யபால் மாலிக் ஆளுநராக பதவி வகித்த போது இது குறித்து எதுவும் கூறாமல்  தற்போது குற்றம் சாட்டுகிறார்" என்று கூறி இருந்தார். இந்நிலையில் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சத்யபால் மாலிக், "நான் ஆளுநர் பதவியில் இருந்து விலகிய பிறகு தான் இந்த பிரச்சனையை எழுப்புகிறேன் என்று கூறுவது தவறானது. தாக்குதல் நடந்த அன்றே இதைப் பற்றி பேசி இருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.