Skip to main content

பயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது... திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் கோபத்தில் எடப்பாடி... அதிர்ச்சியில் ஸ்டாலின்!

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

தமிழக சட்டமன்றத்தில் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தின் தொடர்ச்சியாக துறைரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடந்து வருகின்றன. கடந்த 9-ந் தேதியிலிருந்து நடந்துவரும் இந்த கூட்டத்தொடர் எவ்வித விறுவிறுப்புமின்றி நகர்வதால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் நீண்ட நேரம் இருக்கையில் அமர்வதில்லை. அடிக்கடி வெளியே சென்று பொழுதுபோக்கி வருகின்றனர்.
 

admk



ஓரிரு சம்பவங்கள் தவிர எவ்வித சுவாரஸ்யமும் கடுமையான விவாதங்களும் இல்லாத நிலையில், அடுத்த முறை யார் ஆட்சி அமைப்பது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும் கடந்த 17-ந் தேதி ஏற்பட்ட மோதல் சட்டமன்றத்தை பரபரப்பாக்கியது. இந்த மோதலின் இடையே தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபத்தை காட்டினார் எடப்பாடி.

கடந்த 17-ந் தேதி உள்ளாட்சித்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் பேசிய சட்டமன்ற தி.மு.க. கொறடா சக்கரபாணி, "உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சில்களில் 243 இடங்களையும், ஒன்றிய கவுன்சில்களில் 2,100 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒட்டுமொத்தமாக தேர்தல் நடத்தியிருந்தால் நாங்கள்தான் ஜெயித்திருப்போம். நேரடியாக இருந்த மேயர் தேர்தலை எதற்கு மறைமுக தேர்தலாக மாற்றினீர்கள்? அப்படின்னா, ஜெயிக்கமாட்டோம்ங்கிற பயம்தானே! ஆனா, 2021 சட்டமன்றத்தேர்தலிலும் நீங்களே ஜெயித்து ஆட்சிக்கு வரப்போவதாகச் சொல்லுகிறீர்கள். இந்த ஆட்சி மீது மக்கள் எவ்வளவு கோபமாக இருக்கிறார்கள் என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே காட்டியிருக்கிறது'' என்றார்.

 

dmk



அதற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளிக்க எத்தனித்த போது, தானே பதில் சொல்ல எழுந்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, "பயமெல்லாம் எங்களுக்குக் கிடையாது. எங்களுடைய செல்வாக்கு மக்களிடத்தில் எப்போதும் சரியவில்லை. உங்களால் நிறைவேத்த முடியாத பல கவர்ச்சிக்கரமான வாக்குறுதிகளை நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்தீர்கள். அதில் மயங்கி உங்களுக்கு வாக்களித்தனர். ஆனால், தேர்தலுக்குப் பிறகு உண்மையை உணர்ந்துகொண்டதால் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் உங்களுக்கு தோல்வியை தந்தார்கள். எங்களுக்கு வெற்றி கிடைத்தது. மக்கள் செல்வாக்கு எங்களுக்கு கூடியிருக்கிறதே தவிர, குறையவில்லை'' என்றார்.


எடப்பாடியின் இந்த குற்றச்சாட்டை உடனே எதிர்கொண்ட மு.க.ஸ்டாலின், "விரைவில் வரவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியுடன் ஆட்சிப் பொறுப்புக்கு வருவோம். நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். 2021-ல் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்'' என்று பதிலடி தந்தார். ஆனால், இதற்கு அசராத எடப்பாடி, "சட்டமன்றத் தேர்தலில் (2021) சொல்ல வேண்டியதை நாடாளுமன்ற தேர்தலின்போது எதற்கு சொன்னீர்கள்? ஆட்சியில் இல்லாத நிலையில் எப்படிச் சொன்னீர்கள் ? இடைத்தேர்தலிலேயே மக்கள் எங்களுக்குத்தான் வெற்றியை தந்திருக்கிறார்கள். அதே மனநிலையுடன் சட்டமன்றத் தேர்தலிலும் எங்களைத்தான் ஆதரிப்பார்கள்'' என்றார் ஆவேசமாக.

எடப்பாடி இப்படி பேசிக்கொண்டிருக்கும்போதே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் குறுக்கிட்டு சில வார்த்தைகளைச் சொல்ல... அதனால் கோபமடைந்த எடப்பாடி, ""உங்களுக்கு என்னதான் பிரச்சனை? நான் பேசும்போது எதுக்கு குறுக்கிடுகிறீர்கள்? இதெல்லாம் தவறுங்க...'' என கடுமையாக கோபத்தைக் காட்ட அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்களிடையே ஏகத்துக்கும் அமளி ஏற்பட்டது. எடப்பாடியின் கோபத்தை கண்டு ஸ்டாலினும் துரைமுருகனும் அதிர்ச்சியடைந்தனர். எடப்பாடியின் கோபத்துக்கு தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் ஆவேசம் காட்ட, "ஆட்சி அமைக்கப்போவது நீங்களா? நாங்களா?' என்கிற ரேஞ்சுக்கு சபையில் கூச்சல் அதிகரித்தது.


உடனே இதில் தலையிட்ட சபாநாயகர் தனபால், ""முதல்வர் பேசும்போது உறுப்பினர்கள் அமைதி காப்பது மரபு. இதை நீங்கள் கடைப்பிடிப்பிடிப்பதாக தெரியவில்லை. உங்களுக்கு இது இறுதி எச்சரிக்கை. மீண்டும் இதேமாதிரி நடந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்'' என ஆஸ்டினை கண்டித்தார். அப்போது எழுந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஏற்கனவே 2, 3 முறை அவரை கண்டித்து இறுதி எச்சரிக்கையும் செய்திருக்கிறீர்கள் என நினைவுபடுத்த... "ஆஸ்டினை இன்று ஒரு நாள் சபையிலிருந்து வெளியேற்றுகிறேன்' என்று உத்தரவிட்டார் தனபால்.

இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலினின் பதிலுக்கு பதில் சொல்வதை மீண்டும் தொடர்ந்தார் எடப்பாடி. அப்போது, ஆஸ்டினை சபையிலிருந்து வெளியேற்ற காவலர்கள் உள்ளே நுழைந்தனர். அதனைக்கண்டு எழுந்த துரைமுருகன், ""ஆஸ்டின் நடந்து கொண்டது தவறுதான். அவர் மீதான நடவடிக்கையை கைவிடலாம்'' என சொல்ல, "இனியும் அதேபோல் நடக்காது என எதிர்க் கட்சித்தலைவரும் துணைத்தலைவரும் உத்தரவாதம் தந்தால் பரிசீலிக்கலாம்'' என்றார் ஓ.பி.எஸ். இதனையடுத்து துரைமுருகன் உத்தரவாதம் தர, ஆஸ்டின் மீதான தண்டனையை நிறுத்தி வைப்பதாகச் சொன்னார் சபாநாயகர்.

இந்த நிலையில், டி.என். பி.எஸ்.சி. ஊழல்களைப் பற்றி விவரித்த தி.மு.க. எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், ஊழல்களுக்கு பொறுப்பேற்று துறையின் அமைச்சரும் (ஜெயக்குமார்), முதல்வரும் (எடப்பாடி பழனிச்சாமி) ராஜினாமா செய்யவேண்டும்'' எனச் சொல்ல... அமைச்சர்களும் அ.தி. மு.க. எம்.எல்.ஏ.க்களும் பதிலுக்கு ஆவேசப்பட, மீண்டும் பதட்டமும் பரபரப்புமானது சட்டமன்றம். கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் பரபரப்பின்றி நகர்ந்த சட்டமன்ற கூட்டத்தில் தற்போது கோபம், ஆவேசம், எச்சரிக்கை, விவாதம், அமளி என சூடு பிடித்துள்ளது.


 

 

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.