அரசாங்கம் விற்கிறது சாராயம், அதனால் இறந்தவன் ஏராளம்
செல்லாது இனி 500, ஒரு கல்லாய் தமிழா நீ மாறு
எங்கே உன் ஆதாரு, அது இல்லாவிட்டால் நீ யாரு
நீ கட்டும் வரிதான் வேண்டும், நீ சிந்தும் கண்ணீர் வேண்டாம்
நீ என்பது ஓட்டு மட்டுமே, நாடு என்பது ரேட்டு மட்டுமே
என்னா நா உனக்கு ஆண்டி இந்தியன்னா....
என்னா ஓட்டு போட்ட பச்சை தமிழன்னா...
என்னா உன்னை போல நானும் மனிதன்னா..."
இப்போது சுற்றி நடக்கும் எந்தப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்காமல், பெருகி எழும் கூக்குரல் காதில் விழாதது போல் கள்ளமௌனம் சாதிப்பவர்களை தனது 'கள்ளமௌனி' பாடலில் தட்டி, கொட்டி எழுப்புகிறார் அறிவு. இயக்குனர் பா.ரஞ்சித்தின் 'The Casteless Collective' யூ-ட்யூப் சேனலில் வெளியாகியிருக்கிறது இந்தப் பாடல். ஃப்ரெஷ்ஷான இசை வடிவத்தில் ஒவ்வொரு வார்த்தையும் ஆழமான அர்த்தத்தையும் சத்தமான கேள்வியையும் கொண்டிருக்கிறது.
'போரடிக்குது போராடலாம் வாங்க தோழா யாரடுத்தது சூப்பர் ஸ்டாரு பாரு தோழா..' என தொடங்கும் பாடலின் ஒவ்வொரு வரியும் நிகழ்கால கள்ளமௌனிகளின் மனதை கலைக்கிறது, கலாய்க்கிறது.
வாட்ஸ் ஆப்பிலும் ஃபேஸ்புக்கிலும் மீம்ஸ்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்களுக்கு மத்தியில், சாதியையும், இட ஒதுக்கீட்டையும், சமூக ஏற்றத் தாழ்வுகளையும் அந்த இளைஞர் பேசுவதற்கு என்னதான் காரணம்? வாருங்கள் அவரிடமே கேட்போம். ஒரு ராப் கவிதையோட நமது பேட்டியை நாம் ஆரம்பிக்கலாமா? என்று அவரிடம் கேட்டு முடிப்பதற்குள்,
'தமிழன் என்ன சோதனை எலியா,
தமிழன் பேசுவது இந்தி-யா
கருப்பு பணத்தை திருப்பி தந்தியா,
குடிசை எரிந்ததே நீயும் வந்தியா'
என்று பாடி முடித்துவிட்டே நம் முகத்தை பார்க்கிறார் அறிவு.
முதன் முதலில் மேடையேறி பெரிய ஹிட் கொடுத்த 'கோட்டா' (இடஒதுக்கீடு) பாடலை எப்படி எழுதினீங்க, ஒவ்வொரு வரியிலும் சமகால அரசியலை ஏன் இவ்வளவு கடுமையாக சாடி இருக்கீங்க, அதற்கான தேவை இப்போ வந்திருக்குன்னு நினைக்கிறீங்களா? என்று நாம் அமைதியாகக் கேள்வியை முடிப்பதற்குள் சற்று கோபமாக அறிவே பதில் அளிக்கிறார், " தற்போது அல்ல, எப்போதுமே அதற்கான தேவை நமக்கு இருக்கிறது, கோட்டா பாடலும் கூட நான் கண்கூடாக கண்ட ஒரு நிகழ்வின் வெளிப்பாடுதான் அது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை ஒருவன் விதைத்திருப்பான். ஆனால், ஒரு பிடி கூட அவனுக்கு சொந்தமான நிலம் இருக்காது. தான் உழைத்துக் கொட்டுகின்ற ஒரு உயர்சாதி முதலாளி வீட்டுக்கு, முன்வாசல் வழியா போக முடியவில்லை என்றால், அதில் என்ன சமூகநீதி இருக்கிறது? தன்னுடைய முதலாளி அவரை இங்க வாடா... அப்படினு கூப்பிடும் போது அவருக்கு, அந்த அடிமைத்தனத்தை பிரதிபலிக்கும் வார்த்தைகள் எவ்வளவு வலியை கொடுக்கும்? இடஒதுக்கீடு எல்லா சமூகத்துக்குமே இருக்கு, யாரும் அதை சரியா புரிந்து கொள்ளவில்லை. ஏதோ ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு மட்டும்தான் அது கிடைக்கிறதா நினைத்துக் கொள்கிறார்கள். இதுபோன்ற தவறான புரிதல்களை அடித்து உடைக்க பாடப்பட்டதுதான் 'கோட்டா' பாடல். அதுதான் எனக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.
அடுத்ததா 'கள்ளமௌனி' பாடல் வெளிவந்துள்ளது. நாட்டில் பேச வேண்டிய பல பேர் பேசாமல் இருப்பதும், பேசக் கூடாதவர்கள் அதிகம் பேசுவதைத்தான் இந்தப் பாடலில் நாங்கள் அதிகம் பேசி உள்ளோம். எங்களின் முந்தைய பாடல்களில் நாங்கள் சரியா பேசாது விட்ட அனைத்தையும் வெளிப்படையாக பேசி இருக்கோம். எங்களுக்கு முற்றிலும் உறுதுணையாக இருப்பவர் பா.ரஞ்சித் அண்ணன். எந்த ஒரு இயக்குனரும் செய்யாத மகத்தான பணியை அவர் செய்து வருகிறார். அதை சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உங்களை போன்ற ஊடகங்கள்தான் எங்களுக்கு உதவ வேண்டும்" என்று மூச்சிவிடாமல் பேசி முடித்தார் அறிவு.