Skip to main content

தாளமுத்துவும் நடராசனும் உயிர் துறந்தது மொழிக்காக மட்டுமல்ல...

Published on 25/01/2019 | Edited on 25/01/2019
anti hindi


‘பேசுற மொழிதான, சொல்ற விஷயம் எந்த மொழினாலும் சென்றடைஞ்சா சரிதான’ என்ற கேள்வி எழலாம் . மொழி போர் என்பது மொழிக்கானது மட்டுமல்ல மொழியின் வழியாக புகுத்தப்படும் கலாச்சார, பொருளாதார, ஆதிக்கங்களுக்கும் எதிரானது. சமீபத்திய அரசியல் சூழலை பார்க்கும்போது, பலருக்கும் ஒரு பயம் இருக்கிறது. ஹிந்தி திணிப்பு மீண்டும் தலை எடுக்குமோ என்று. அதற்கான சில நடவடிக்கைகள் எடுக்கபட்டு அவை நெடுஞ்சாலை மைல்கல்களோடு கருப்பு மை பூசி அழிக்கவும்பட்டது. தமிழ்நாட்டில் இந்த ஹிந்தி திணிப்பு என்பது பல வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கட்டாய ஹிந்தியை எதிர்த்து, நம் இளைஞர்கள் போராடி அதை தடுத்திருக்கின்றனர்.  
 

முதன் முதலில் ஹிந்திக்கு எதிராக போராட்டம் என்று பார்த்தோம் என்றால் ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்டதுதான்.  1937-1938ஆம் ஆண்டில் மெட்ராஸ் மாகாண முதலமைச்சராக ராஜாஜி இருந்தபோது ஹிந்தி கட்டாயமாக்கப்பட்டது.‘இது சாதாரணமான ஒரு வெறும் மொழி திணிப்பு மட்டுமல்ல, இதை எதிர்த்து போராடாமல் விட்டுவிட்டோம் என்றால் வருங்காலத்தில் பல சிக்கல்களை இது கொண்டுவரும்’ என்று பல அரசியல் மற்றும் தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். முதல் ஹிந்தி எதிர்ப்பு மாநாட்டை 1937ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி கி.ஆ.பெ.விசுவநாதன் திருச்சி தேவர் மன்றத்தில் நடத்தினார். நீதிக்கட்சியின் தலைவராகியிருந்த பெரியார் போராட்டக் களத்தில் இறங்கினார்.
 

இந்த ஹிந்தி திணிப்பு எதிராக  11.09.1938-ல் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு தமிழருக்கே என்று பெரியார் முழக்கமிட்டார். போராட்டங்களில் கலந்துகொண்ட பல தலைவர்களும், பல தமிழறிஞர்களும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில் நடராசன் என்பவர் சிறைக்கு சென்று உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மரணமடைந்தார். இவரைப் போன்றே கைது செய்யப்பட்ட தாளமுத்து என்பவரும் உடல்நலம் குன்றி, மரணமடைந்தார். நடராசனின் இறுதி சடங்கின்போது பேரறிஞர் அண்ணா பேசியது. “அதோ அங்கே படுத்திருக்கிறார் நடராசன். அவருடைய இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது. அவருடைய ரத்தம் ஓடுவதை நிறுத்திவிட்டது. அவருடைய கேசம் சிலிர்த்து நிற்கிறது. ஆனால், அவருடைய முகத்தை பாருங்கள். தன்னுடைய கலாச்சாரத்துக்காகவும், விடுதலைக்காகவும் போராடி அப்போரில் தன் இன்னுயிர் ஈந்த ஒரு போராளியின் முகமல்லவா அந்த முகம்? பல்லாயிரக் கணக்கில் கூடிய நீங்கள், ஓர் உறுதிமொழியினைத் தருவீர்களா? நாம் விரும்பாத ஒரு மொழியை எதிர்த்துப் போரிட்டு, ஐயகோ நம்மிடம் இல்லாது மறைந்துபோன நடராசனின் வீரவாழ்வை, நாங்களும் பின்பற்றுவோம் என்று உறுதிகொள்வீர்களா?” என்று உரையாற்றியிருந்தார். இதேபோல தாளமுத்துவின் இறுதிசடங்கில் பேசிய உரையும் பிரசித்துபெற்றது. தொடர் போராட்டத்தினால் முதல் கட்ட கட்டாய ஹிந்தித் திணிப்பு கைவிடப்படுகிறது.
 

இதையடுத்து இரண்டாவது முறையாக ஹிந்தியை கட்டாயம் என்று அப்போதைய தமிழக அரசு ஆணையிட்டது. அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார். அந்த சமயத்திலும் ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் ஓங்கி இருந்ததால், அதுவும் கைவிடப்பட்டது.
 

மூன்றாம் கட்டமாக 1952ல் தொடங்கி 1965ஆம் ஆண்டு வரை ஹிந்தியை கட்டாயமாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு, 1964-65ல் தீவிரமடைந்தது. இதை எதிர்த்து காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளின் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள் போராடினர். முதல் ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு காரணமாக இருந்த ராஜாஜி, போராட்டத்தின் நியாயத்தை கண்டு அவரும் அதில் பங்கேற்றார்.  மாநிலம் முழுக்க முக்கியத் தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, அனல் பறக்கும் பேச்சுக்களால் தமிழ்நாட்டை அதிரச் செய்த்தனர். போராட்டத்தை தடுக்க அப்போது ஆட்சியில் இருந்த அரசு, பல ஆயிரம் போலீஸ்களை, இந்திய இராணுவ வீரர்களையும் களத்தில் இறக்கியது. இருந்தாலும் போராட்டத்தில் உள்ளவர்கள் உணர்வு ரீதியாக போராடியதால், எதற்கும் அஞ்சாமல் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர்.  போராடிய தலைவர்கள் அனைவரையும் கைது செய்யப்பட்டதால், அடுத்து இந்த போராட்டத்தை யார் எடுத்து நடத்துவது என்ற நிலை உருவாகியபோது. மாணவர்கள் அனைவரும் போராட்ட களத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவப் பிரதிநிதிகளை சந்திக்க அப்போதைய முதலமைச்சர் மறுத்ததும், மதுரையில் ஊர்வலமாக சென்ற மாணவர்கள் மீதான தாக்குதலும் மாணவர்களை மேலும் வேகப்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் நாற்பதாயிரம் போலீஸார்கள், ஐந்தாயிரம் ராணுவ வீரர்களை குவித்தது அப்போதைய தமிழக அரசு. நாற்பது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், பலர் உயிரிழந்தனர். ஆனாலும், மாணவர்கள் பின்வாங்கவே இல்லை.
 

anti hindi


1964ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வயலுக்கு போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு, திருச்சி ரயில்வே சந்திப்புக்கு வந்த கீழப்பழுவூர் சின்னச்சாமி, தமிழ் வாழ்க.. ஹிந்தி ஒழிக என்று முழக்கமிட்டபடி தீக்குளித்தார். இதையடுத்து விராலிமலை சண்முகம், கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கீரனூர் முத்து, மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, பீளமேடு தண்டபாணி உள்ளிட்ட பலர் தீக்குளித்தும், விஷமருந்தியும் கட்டாய ஹிந்தித் திணிப்பைக் கைவிடக் கோரி தற்கொலை செய்து கொண்டனர். தங்களின் எதிர்ப்பை, கருத்தை கடிதமாக எழுதி வைத்து விட்டும் சென்றனர். இந்த தியாகிகளின் உயிர்த்தியாகம், மாணவர்களின் போராட்டம், களத்தில் அஞ்சாமல் நின்ற தலைவர்கள் என்று தமிழ்நாடே போர்க்கோலமாகியது. இவற்றால் கட்டாய ஹிந்தி என்கிற முடிவைக் கைவிட்டனர். இந்த போராட்த்தின் விளைவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. முதன் முதலாக ஹிந்தி திணிப்புக்கு எதிராக தொடங்கப்பட்ட போராட்டத்திலிருந்து இந்த இறுதி போராட்டம் வரை பலர் தமிழுக்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இவர்களின் தியாகங்களை நினைவு கூரும் வகையில் ஜனவரி 25ம் தேதி மொழிப் போர் தியாகிகள் வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
 

இந்த போராட்டம் தற்போது பலரால் ஹிந்திக்கு எதிரான ஒன்று என்று சாதாரண போராட்டமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதனால் நம் மாநிலம் இழந்ததும், பெற்றதும் எராளம். தமிழ் மொழி எந்த மொழிக்கும் எதிரி கிடையாது. ஹிந்தி என்ற மொழியை விருப்பம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால்  ‘வேறொரு மொழியை கட்டாயமாக்கி ஒரு மாநிலத்தின் தாய் மொழியை அழிக்க நினைப்பது என்ன மாதிரியான செயலாகும்’என்பதே இம்மாபெரும் வரலாற்று போராட்டத்தின் அடித்தளமாக அமைந்த எண்ணமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

“தமிழில் பேச முயற்சிக்கிறேன்” - வேலூரில் பிரதமர் மோடி பேச்சு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று (10.04.2024) வேலூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது வேலூர், திருவண்ணாமலை, ஆரணி, தருமபுரி, அரக்கோணம், கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே, வணக்கம். தமிழில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நமது புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி தொடங்குகிறது. உங்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது முழு திறமையையும் பயன்படுத்துவேன்.

தமிழகத்தின் பூமியான வேலூர் புதிய சரித்திரம் படைக்கப் போகிறது என்பது டெல்லியில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தமிழகத்தில் பாஜக, பாமகவுக்கு அபரிமிதமான மக்கள் ஆதரவு கிடைத்து வருகிறது. இந்தியா இன்று உலகில் வல்லரசாக வளர்ந்து வருகிறது, இதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளித் துறையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகம் பெரும் பங்காற்றியுள்ளது. உற்பத்தியில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்வதில் தமிழகத்தின் கடின உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் பாதுகாப்பு வழித்தடம், இந்த மாநிலத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்புகிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

தமிழகத்தை பழைய சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கும் திமுக, பழைய அரசியலில், ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாகிவிட்டது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பில்லை. திமுகவில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும், திமுகவில் முன்னேறுவதற்கும் மூன்று முக்கிய அளவுகோல்கள் உள்ளன. அந்த மூன்று முக்கிய அளவுகோல்கள், குடும்ப அரசியல், ஊழல் மற்றும் தமிழர் எதிர்ப்பு ஆகும். போதை மருந்து மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பில் உள்ளனர். என்சிபியால் கைது செய்யப்பட்ட போதை மருந்து மாபியா கும்பல் தலைவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்.

திமுக மாநிலம், மதம், சாதியின் பெயரால் மக்களைச் சண்டையிட வைக்கிறது. பிரித்து ஆட்சி செய்யும் அரசியலை மக்கள் புரிந்து கொள்ளும் போது திமுகவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்காது என்பது திமுகவினருக்கு தெரியும். அதனால்தான் வாக்குக்காக மக்களைத் தங்களுக்குள் சண்டையிட வைக்கிறார்கள், திமுகவின் பல தசாப்த கால ஆபத்தான அரசியலை நான் தொடர்ந்து அம்பலப்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளேன். ஐக்கிய நாடுகள் சபையில், நமது தமிழ் உலகின் பழமையான மொழி என்பதை உலகம் முழுவதும் அறியும் வகையில் தமிழில் பேச முயற்சிக்கிறேன். காசியின் எம்.பி.யாக, காசி தமிழ்ச் சங்கத்தை மேலும் பெருமைப்படுத்த உங்களை அழைக்க வந்துள்ளேன். இரண்டாவதாக, நான் குஜராத்தில் பிறந்தேன், குஜராத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் இங்கு வாழ்கின்றன. குஜராத்தியாக, உங்களை சௌராஷ்டிரா தமிழ்ச் சங்கத்திற்கு அழைக்கிறேன்.

"Trying to speak in Tamil" - PM Modi's speech in Vellore

இன்று நாடு முழுவதும் காங்கிரஸும், திமுகவும் செய்யும் இன்னொரு போலித்தனத்தைப் பற்றி மக்கள் விவாதிக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கினர். எந்த அமைச்சரவையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவு யாருடைய நலனுக்காக எடுக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் மௌனம் காக்கிறது. அந்தத் தீவின் அருகே சென்று மீன் பிடிக்கும்போது தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட மீனவர்களைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து விடுவித்து அழைத்து வருகிறது. இதுமட்டுமின்றி, ஐந்து மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நான் அவர்களை உயிருடன் மீட்டேன். திமுகவும், காங்கிரசும் மீனவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமல்ல, தேசத்தின் குற்றவாளிகள்” எனப் பேசினார்.