Skip to main content

மாட்டைப் பாதுகாக்கவா... சிலர் மீது தாக்குதல் நடத்தவா?

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

cow

 

தற்போது கர்நாடகவை ஆளும் பா.ஜ.க அரசு கால்நடை வதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதில் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. நேற்று இதுகுறித்து கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா பேசுகையில், “இன்னும் ஒன்று இரண்டு நாட்களுக்குள் கால்நடை வதை தடுப்பு அவசரச் சட்டம் கொண்டு வரப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். கடந்த புதன்கிழமை, கர்நாடக மாநில மேலவையில் இந்த மசோதாவைச் சட்டமாக இயற்ற இருந்தார்கள். ஆனால், அந்தச் சபை ஒத்திவைக்கப்பட்டுவிட்டதால் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இந்த மசோதாவில் கால்நடை என்று அவர்கள் வரையறுக்கப்பட்டதில், பசு, காளை, வண்டிமாடுகள், கன்றுகள். இவை மட்டுமல்லாமல், எருமைகளையும் சேர்த்துள்ளனர். இதன் மூலம், இது ‘பொவைன்’ இன வதை தடுப்புச் சட்டமாகிறது.

 

மற்ற மாநிலங்களில் உள்ள சட்டத்தில் ‘போஸ் டாரஸ்’ வகை மாடுகளைக் கொல்லத்தான் தடை இருக்கிறது. மேலும், அதில் பசுக்கள், காளைகள், வண்டிமாடுகள், சேர்க்கப்பட்டன. ஆனால், ‘புபாலஸ் புபாலிஸ்’ வகையைச் சேர்ந்த எருமை மாடுகள் அதில் சேர்க்கப்படவில்லை. விலங்குகள் வகை பிரித்தல்படி ‘கேட்டில்’ என்பது ‘போஸ் டாரஸ்’ வகை. கேட்டில் மற்றும் எருமைகள் என இரண்டையும் சேர்த்துவிட்டோமனால் அது ‘பொவைன்’ இனத்தைக் குறிப்பிடுகிறது. 

 

தற்போதைய கால்நடை வதை சட்டத்தில் கர்நாடகாவிற்கு முன்னோடியாக இருப்பது மஹாராஷ்ட்ரா. கடந்த 2015ஆம் ஆண்டு பா.ஜ.க சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, தேவேந்திர பத்நாவிஸ் முதல்வரானார். அப்போதுதான் இந்தக் கால்நடை வதை தடுப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டது. 2015ல் மஹாராஷ்ட்ரா விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் மேலும், காளைகளும், வண்டிமாடுகளும் சேர்க்கப்பட்டது. மாட்டிறைச்சிக்காக இவை கசாப்புக் கடைகளுக்கு அனுப்பப்படுவது குற்றம் என்றும், மீறினால் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை என்றும் சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு முன்பாக இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவர்களுக்கு ஆறு மாதம் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

 

கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசு, மஹராஷ்ட்ராவை ஆண்ட பத்நாவிஸின் அரசை மிஞ்சிவிடும் வகையில் செயல்பட்டுள்ளது. மாடுகளை இறைச்சிக்காக, கசாப்புக் கடைகளில் விற்பவர்கள் அல்லது அறுப்பவர்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படுவதாக இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பசுக்காவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் உத்திரப் பிரதேசத்தை ஆளும் யோகி ஆதித்யநாத் மற்றும் மத்தியப் பிரதேசத்தை ஆளும் சிவராஜ் சிங் சவுகான் கூட எடியூரப்பாவை போல மசோதா கொண்டுவரவில்லை என்பது ஆச்சரியம்தான்.

 

மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வகை மாடுகளும் 13 வயதான பின்னர் கசாப்பிற்காக அறுக்கலாம் என்ற சலுகை தரப்பட்டுள்ளது. ஆனால், பால் விவசாயிகளின் பார்வையில் பார்த்தால் ‘இது உதவிகரமான ஒன்று இல்லை’ ஏனென்றால், பசுக்கள் இனப் பெருக்கத்திற்குத் தயாராவதற்கு, சுமார் 17-18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றன. சினையான பசுக்கள் 9-10 மாதங்கள் கன்றுக்குட்டி ஈன எடுத்துக்கொள்கிறது. அப்போதிலிருந்து 27 மாதங்கள் முதல் 28 மாதங்கள் வரை பால் தருகிறது. அடுத்தடுத்து கன்று ஈனுவதால், 13 மாதங்கள் பசுக்களுக்கு ஓய்வு தரப்படுகிறது. பசுக்களை ஐந்து முதல் ஆறு வருடங்கள் வரையில்தான் இனப்பெருக்கம் செய்ய வைக்கின்றனர். அதன்பிறகு அதனைக் கவனிக்கும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பதால், எட்டு ஆண்டுகள் வரையில்தான் விவசாயிகள் பசுக்களை வைத்துக் கொள்கின்றனர்.

 

இதே நிலைதான் எருமைகளுக்கும். அதிகப்படியாக விவசாயிகளால் ஒரு எருமையை 9 முதல் 10 ஆண்டுகள் வரையில்தான் பராமரிக்க முடிகிறது. ஆனால், கர்நாடக அரசின் மசோதாவில், 13 வயதிற்கு மேற்பட்ட மாடுகளை மட்டும் கசாப்பிற்கு அனுமதித்துள்ளதைப் பார்க்கும்போது விவசாயிகளைப் பற்றி யோசிக்காமல் வாக்கு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அப்படிக் காத்திருந்து, கசாப்பிற்கு அனுப்பினாலும் அந்த மாட்டிற்கான சரியான தொகை கிடைக்காது என்பதும் விவசாயிகளுக்கு ஒரு சோகமான விஷயம்.

 

cnc

 

2012-2019 ஆண்டு, இந்த இடைப்பட்ட காலத்தில், பா.ஜ.க ஆட்சி செய்த மாநிலங்களான உ.பி., ம.பி., குஜராத், மஹராஷ்ட்ராவில் மாட்டிறைச்சி தொழில் மிகவும் மோசமாகத் தேய்ந்துவிட்டது. எனினும் இந்த மாநிலங்களில்தான் எருமைகள், மாட்டிறைச்சிக்காக கசாப்புக் கடைகளுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. இவை மட்டுமல்லாமல் பஞ்சாப் மற்றும் ஆந்திரா மாநிலங்களிலும் பசுக்களைத் தாண்டி எருமைகளே அதிகமாக மாட்டிறைச்சிக்காக கசாப்புக் கடைகளில் அறுக்கப்படுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டில் மாட்டிறைச்சி தொழிலில் உ.பி-யின் இடத்தை தன்வசமாக்கியது மேற்கு வங்கம். இதில் முரண் என்னவென்றால் மிருகவதை தடைச் சட்டம் மேற்கு வங்கத்திலும் உள்ளது. அதே வேளையில் இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்வதில் கட்டுப்பாடு வேண்டும் என்பதற்கான சட்டமும் உள்ளது. கேட்டில் வகையோ அல்லது எருமை வகையோ கசாப்பிற்குத் தகுதியாக இருந்தால் கால்நடை மருத்துவர்கள் அனுமதி வழங்குகிறார்கள். 

 

இப்படிக் கொண்டுவரப்போகும் சட்டமானது கால்நடைகளைப் பாதுகாக்கும் நோக்கில்தான் என்று கூறப்பட்டாலும், கால்நடைகளை நன்கு பராமரித்துக் கவனித்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு, இது ஒரு சோகமானதே. இந்திய மக்கள் தொகையில், 15 சதவீதம் பேர் மாட்டிறைச்சி சாப்பிடுகின்றனர். ஆட்டிறைச்சி வாங்கும் அளவிற்கு வசதியற்றவர்களுக்கு மாட்டிறைச்சிதான் சிறந்த அசைவ உணவாக விளங்குகிறது. இதுமட்டுமல்லாமல் ஊட்டச்சத்துக் குறைபாடுகளில் போராடிக் கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு, இதுபோன்ற அதிக ஊட்டச்சத்துக் கொண்ட உணவை எடுத்துக்கொள்ளத் தடையாக இதுபோன்ற மசோதா இருக்கும். ‘ரைட் டூ ஃபூட்’ என்னும் ஒருவரின் அடிப்படை உரிமையிலேயே கை வைக்கிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்த பின்னர் பசுக்காவலர்கள் (பசுக்குண்டர்கள்) நடத்திய அவலங்கள்தான் எத்தனை? இந்த மசோதா பசுவைக் காப்பாற்றுவதாகக் கூறி கும்பல் தாக்குதலை நடத்தி, கொலை செய்பவர்களுக்குத் துணைபோகுமே தவிர, மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு இல்லை. 2015 - 2018 ஆண்டுகளுக்கு இடையே 44 பேர் இந்த பசுக்குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில், இதுபோன்ற மசோதா சட்டமானால்? 

 

 

 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.