Skip to main content

"தன்னிச்சையாக செயல்பட விரும்புகிறார் அண்ணாமலை; கேசவ விநாயகத்தோடு ஏற்பட்டுள்ள சண்டைக்கு..." - ராம. சுப்பிரமணியன்

Published on 11/12/2022 | Edited on 11/12/2022

 

hk

 

தமிழக பாஜகவில் கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். 

 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வந்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், ஆர்எஸ்எஸ் தலைவர் கேசவ விநாயகத்துக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றது. இந்நிலையில் இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு,

 

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை கட்சி நிர்வாகிகளுக்குக் கட்சியைப் பலப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாகத் தெரிகிறது? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

நல்ல செய்திதான், எல்லா கட்சித் தலைவர்களும் தங்கள் கட்சியை வலுப்படுத்துவதற்கு செய்கின்ற வழிமுறைதான் இது. இதில் தவறில்லை, ஆனால் கட்சியில் யார் யாரையோ சேர்த்து வருகிறார்கள். இது மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். அதையும் தாண்டி தவிர்க்கக் கூடிய விஷமும் கூட. எனவே அதில் கவனம் செலுத்தி குற்றவாளிகள் என அடையாளம் உள்ளவர்களைக் கட்சியில் சேர்ப்பதைத் தவிர்த்தால் கட்சி வளர்ச்சிக்கு மிக நல்லதாக இருக்கும். இதை அவர் முயற்சி செய்து நடைமுறைப்படுத்தினால் கட்சிக்கு நல்லது. 

 

அண்ணாமலை அவர்கள் தன்னிச்சையாக செயல்படுகிறார், ஆர்எஸ்எஸ் முடிவுக்கு மாற்றாக இவர் தனியாக முடிவு எடுத்துச் செயல்படுகிறார் போன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

டெல்லியில் மோடி அமித்ஷா என்ன முடிவு எடுக்கிறார்களோ அதைத்தான் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் முக்கியப் பிரமுகராக பி.எல்.சந்தோஷ் என்பவர் இருக்கிறார். ஆனால் அவர் இவர்கள் இருவரும் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டுத் தலையாட்டிவிட்டுச் செல்வார். அவர்களை மீறி டெல்லியில் எதுவும் நடந்து விடாது என்பது மட்டும் உண்மை.  ஆனால் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஜெனரல் செகரட்டரியை ஓரம் கட்டிவிடலாம் என்ற பேச்சுக்களைப் பல வழிகளில் பேசுகிறார்கள்.தொலைக்காட்சி,யூடியூப் என்று பல வழிகளில் இந்த மாதிரியான பேச்சுக்களை முன்வைக்கிறார்கள். 

 

அண்ணாமலை முன்பு சொன்னதை நினைவுபடுத்த விரும்புகிறேன். பழைய ஆட்கள் எல்லாம் வண்டியை விட்டு இறங்கி புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறியதைப் போல இவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு இவர்களை எந்த விதத்திலும் கேள்வி கேட்கக்கூடாது, நல்லதைக் கூட அவர்கள் ஏன் சொல்கிறார்கள் என்ற கோணத்தில் நினைக்கிறார்கள். தலைவருக்கு மட்டுமே எல்லா அதிகாரங்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கேசவ விநாயகத்துக்கும் அண்ணாமலைக்கும் இடையே உள்ள சண்டையே அதுதான். எனவே தனியாகச் செயல்பட வேண்டும் அவர்கள் நீட்டும் இடத்தில் கையெடுத்து இட வேண்டும் என்பதெல்லாம் கட்சிக்கு நல்லதல்ல.

 

 

Next Story

ஆளுநரின் துப்பறியும் கதை; அப்செட்டில் அமித்ஷா!

Next Story

பிரதமர் மோடியின் ‘5டி’ ; முதல்வர் ஸ்டாலின் எழுப்பும் கேள்விகள் - ராம சுப்ரமணியன் விளக்கம்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

 Ramasubramanian | Cmstalin | Cmstalin speech | Modi |

 

முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பாட்காஸ்ட் மூலம் மக்களிடம் பல்வேறு அரசியல் சார்ந்த விசயங்களைப் பேசி வருகிறார். அதில், பாஜக ஆட்சி பற்றியும் பேசி தனது இரண்டாவது ஆடியோ பாட்காஸ்டை வெளியிட்டார். இது குறித்து தன்னுடைய கருத்துக்களை மூத்த அரசியல் விமர்சகர் முனைவர். ராமசுப்பிரமணியன் எடுத்துரைக்கிறார்.

 

இந்தியா முழுவதும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் கருத்து பேசுபொருளாகியுள்ளது என்பது உண்மை. மேலும், ஆடியோவில் சொல்லப்படும் விசயங்கள் இந்திய மக்களிடையே சேர்கிறது என்ற கவலை பாஜகவிடம் உருவாகியுள்ளது. இதனால், ஏதாவது ஒரு வகையில் தி.மு.க.வை குறிவைக்க முயல்கின்றனர். ஸ்டாலின் பேசிய ஆடியோ ‘நீங்கள் சொன்ன மகளிர் உரிமைத் தொகை வந்துவிட்டது... ஆனால், மோடி அவர்கள் தெரிவித்த 15 லட்சம் வரவில்லை’ என்ற கேள்வியுடன் தொடங்கியுள்ளது. அடுத்து, குஜராத்தை வளமாக மாற்றுவேன் என்று கூறிய பொய் பிம்பங்களை பற்றியும் முதல்வர் பேசியுள்ளார். 

 

இதற்குப் பல ஆண்டுகள் முன்பு மோடி அறிவித்த, 5டி- வளர்ச்சியாக திறமை, பாரம்பரியம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி குறித்தும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் முதல்வர் சொல்கிறார், ‘5டி-க்கு பதில் 5சி, வகுப்புவாதம், ஊழல், கார்ப்பரேட் முதலாளித்துவம், ஏமாற்றுதல் மற்றும் குணநலன் படுகொலை தான் இருக்கிறது’ என விமர்சித்துள்ளார். மேலும், இந்தியா கூட்டணியைக் கண்டு சிலர் அஞ்சியுள்ளனர். தொடர்ந்து, சிஏஜி அறிக்கையின் 7.5 லட்சம் கோடி ஊழல் குறித்து பேசினால் பயம் வந்துவிடும் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.

 

இதன் தொடர்ச்சியாக, அயோத்தி திட்டத்தில் கோவில் கட்ட இடம் வாங்கியதில் குளறுபடி, நடுத்தர வர்க்கத்தினரை விமானத்தில் அழைத்து செல்லும் ‘உடான்’ திட்டத்தின்படி தமிழகத்தில் சேலத்தை தவிர பிற அறிவிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமல்படுத்தப்படவில்லை. சினிமாவில் வரும் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ போலத்தான் ரயில்வேயிலும் செலவுகள் கூடியுள்ளது. தொடர்ந்து, ஓய்வூதிய திட்ட நிதிகளை எடுத்து விளம்பரங்களுக்கு செலவிட்டது. சுங்கவரியை சிலரிடம் வசூலிக்காமல் விட்டது. அதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி. ரவிக்குமார் கடிதம் அனுப்பியது முதல் பாரத்மாலா திட்டத்திலும் நிறைய சிக்கல் உள்ளது எனவும் முதல்வர் பேசியுள்ளார். பின்பு, துவாரகா விரைவுச் சாலை திட்டத்தில் 1270% நிதி உயர்ந்தது என்றும் கூறியுள்ளார். 

 

ஏற்கனவே, தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வருகிறது. அதேபோல், ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டது. அதிலும், இறந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தது, ஒரே தொலைப்பேசியை வைத்து பல சிகிச்சைகளை பெற்றது. ஒரே ஆதார் எண்ணில் பல சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்தனை தகவலையும் ஸ்டாலின் எடுத்து சொல்லி ‘இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால் இ.ந்.தி.யா. கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார். மேலும், ஊழலின் உறைவிடமாக பாஜக இருக்கிறது. இது குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரிலும், பத்திரிகைளிலும் கூட பேசுவதில்லை என ஆதங்கத்துடன் முதல்வர் தெரிவித்துள்ளார். எனவே, முதல்வரின் இந்த பேச்சு இந்திய மக்களை சென்றடையும் என்பதே எனது கருத்து.

 

இந்த சுங்கவரி உயர்வு குறித்து, நக்கீரன் களத்திற்குச் சென்று நிலவரத்தை தெரிந்து கொண்டு வீடியோவாக பதிவு செய்தது. இதேசமயம், சிஏஜி அறிக்கை குறித்து  பாஜக, ‘இந்த அறிக்கை எல்லா காலத்திலும் வரக்கூடியது தான். திட்டங்களின் செலவுகள் அதிகரித்துள்ளது. மேலும், திட்டங்களை மத்திய அரசு அறிவித்தாலும், மாநில அரசு தான் செயல்படுத்தும்’ எனக் கூறியிருந்தது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. போன்றவர்கள் ‘இந்த முறைகேடுகள் பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடந்துள்ளது’ எனத் தக்க பதிலையும் அளித்தனர். எனவே, எந்த குற்றச்சாட்டையும் பாஜக மீது வைக்க முடியாது என்றதும் பின்னர் வந்த சிஏஜி அறிக்கையும், மு.க. ஸ்டாலின் கூறிய கருத்தும் பாஜகவினரை அச்சமடைய வைத்துள்ளது என்பது உண்மை.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...