Skip to main content

"பாஜகவில் மூத்த தலைவர்கள் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்; வாயில் வந்ததையெல்லாம் அண்ணாமலை பேசுகிறார்..." - ராம. சுப்பிரமணியன் பேச்சு

Published on 02/12/2022 | Edited on 03/12/2022

 

ஸ.

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில் இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " இது நூறு சதவீதம் உண்மை, பெரும்பாலான மூத்த பாஜக நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

 

அண்ணாமலை வந்த பிறகு ஏதோ உயரப் பறக்கின்ற மாதிரி கட்சியைக் காட்டிக்கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த நிலைமைக்குக் கட்சி வந்துள்ளதே என்று பலரும் தங்கள் வருத்தத்தைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்த நிலைமை சரியாகுமா இல்லை இதேபோன்ற நிலைதான் தொடருமா என்ற சந்தேகமும் தற்போது மூத்த தலைவர்களுக்கு வந்துள்ளது. அறிவாளிகள் இருந்த கட்சி என்பதைத் தாண்டி குற்றச்செயல்கள் செய்பவர்கள் இருக்கும் கட்சி என்ற பெயருக்கு தற்போது ஆளாகியுள்ளது. அண்ணாமலை தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார். வேறு யார் பற்றியும் அவர் கவலைப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. 

 

அவர் தடாலடி அரசியல் செய்து வருவது ஒருபுறம் இருந்தாலும் முக்கியமான தலைவர்களை எல்லாம் அவர் ஒதுக்கி ஓரங்கட்டிவிட்டார். உங்கள் பத்திரிகைகளில் கூட தமிழக விவகாரம் தொடர்பாக இல.கணேசன் பிரதமர் மோடி, அமித்ஷாவிடம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இல.கணேசன் போன்றவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட தலைவர் தெரியுமா? வெறும் ஒற்றைப்பையைக் கையில் மாட்டிக்கொண்டு தமிழகத்தில் பாஜகவை வளர்த்தவர்கள். கட்சி இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் இவரைப் போன்றவர்கள் கட்சிக்கு உழைத்ததுதான். ஆனால் அதைக்கூட நினைத்துப் பார்க்காமல் தான்தோன்றித் தனமாகச் செயல்பட்டால் கட்சி சிதைந்து போவதை யாராலும் தடுக்க முடியாது. பழைய ஆட்கள் எல்லாம் பாஜகவில் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

முதலில் அண்ணாமலை பேசும்போது தான் என்ன பேசுகிறோம் என்று தெரிந்து பேச வேண்டும். வாயில் வந்ததையெல்லாம் பேசக்கூடாது. தனக்கு மட்டும்தான் பேசத் தெரியும் என்பதைப் போல் என்ன பேசுகிறோம் என்று புரியாத அளவிற்குப் பேசுவதை முதலில் அண்ணாமலை தவிர்க்க வேண்டும். நாம் பேசுவது மக்களிடம் எப்படிப் போய்ச் சேரும் என்று முதலில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் புரிந்துகொண்டு பேச வேண்டும். பழைய ஆட்கள் எல்லாம் போனால் பரவாயில்லை என்பதெல்லாம் என்ன மாதிரியான புரிதல் என்று தெரியவில்லை. பழையன கழிதல் என்றால், இன்றைக்கு பாஜக இந்த அளவுக்கு வருவதற்குக் காரணமே அவர்கள் தானே, அதை இவர் இல்லை என்று மறுப்பாரா? இன்றைக்கு பாஜக நிழலில் அவர் இருப்பதற்கே அவர்களின் உழைப்புதானே பிரதானமாக இருந்தது" என்றார்.

 

 

Next Story

ஆபாச அண்ணாமலையை புறக்கணிப்போம்! - ஒன்றிணையும் ஊடகங்கள்!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Nakkheeran condemn to Annamalai

சமீபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேட்டி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அந்த பேட்டி குறித்து பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமைச்சர் உதயநிதியை பேட்டியெடுத்த ஊடகவியலாளரை, "பாத்து... பக்குவமா.. பல்லு பட்டுடப் போதுன்னு கிராமத்துல சொல்வாங்க... எங்க பகுதிகளில் சொல்வாங்க. அதுபோல அந்த பத்திரிகையாளர் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்'' என்று மிகவும் கீழ்த்தரமான இரட்டை அர்த்தத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். அதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு, எங்க ஊர்ப்பக்கம் இப்படித்தான் சொல்வார்கள் என்று அவர் குறிப்பிட்டதன் மூலம், மிகுந்த மரியாதையுடன் பழகக்கூடிய கொங்கு மண்டல மக்களின் மாண்பையும் கொச்சைப்படுத்தியிருக்கிறார். 

ஒரு அரசியல் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கக்கூடிய அரசியல்வாதியான அண்ணாமலை, இதுபோல் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்திப் பேசுவது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னரே, தன்னிடம் பேட்டியெடுக்க வரும் பத்திரிகையாளர்களை குரங்குகளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்திப் பேசியிருக்கிறார். அதேபோல் பத்திரிகையாளர்களை ‘அண்ணே’ என்று அன்பாகச் சொல்வதுபோல் பேசி ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம் என்று ஏலமிட்டு விலை நிர்ணயிப்பது போல் நக்கலடித்து அவமானப்படுத்தியிருக்கிறார். பத்திரிகையாளர்களை பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகளின் அடிமைகள் போலவும், கைக்கூலிகள் போலவும் சித்தரித்து தொடர்ச்சியாக நக்கலடித்து வருகிறார். அதேபோல் தன்னை எதிர்த்துக் கேள்வியெழுப்பும் பத்திரிகையாளர்களை அவர்களின் நிறுவனம் சார்ந்து குறிவைக்கும் மோசமான செயலிலும் ஈடுபடுகிறார்.

பத்திரிகையாளர்களின் பணி, போர் வீரர்களின் பணிக்கு ஒப்பானது. மிகுந்த நெருக்கடியான போர்ச் சூழலிலும்கூட பத்திரிகையாளர்கள் உயிரையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கி செய்திகளைச் சேகரிப்பார்கள். அபாயகரமான கொரோனா கால கட்டத்தில் நாடே முடங்கியிருந்தபோதும் பத்திரிகையாளர்கள் துணிச்சலாகக் களமிறங்கி செய்திகளைச் சேகரித்து வழங்கி வந்தனர். எங்கெல்லாம் பத்திரிகை சுதந்திரம் நன்முறையில் செயல்படுகிறதோ, அங்கெல்லாம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும்போதுதான் சர்வாதிகாரம் தலைதூக்கும். 

மத்தியில் ஆட்சியிலிருக்கும் கட்சியின் மாநிலத் தலைமையில் இருக்கும் ஒரே காரணத்தால், தைரியத்தால், தமிழ்நாட்டு ஊடகவியலாளர்களையும், பத்திரிகையாளர்களையும் தொடர்ச்சியாகத் தரக்குறைவாக விமர்சித்து வரும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் அடாவடித்தனத்தை நக்கீரன் வன்மையாகக் கண்டிக்கிறது. தனது அடாவடியான பேச்சுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும்வரை அவரது செய்தியையோ, படத்தையோ நக்கீரன் வெளியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பத்திரிகையாளர் சங்கங்கள் உள்ளிட்ட பல ஊடகங்களும் ஒன்றிணைந்து அண்ணாமலையின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.

ஆசிரியர்

Next Story

பிரதமர் மோடியுடன் தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பு!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Tamil Nadu BJP executives meeting with Prime Minister Modi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் இன்று (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் பிரதமர் மோடி ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை இன்று மாலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.

இதனையடுத்து பிரதமர் மோடி ஓய்வெடுப்பதற்காக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அப்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.  மேலும் தமிழக பாஜக நிர்வாகிகள் உடன் பிரதமர் மோடி 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என் மண் என் மக்கள் பாத யாத்திரையின் இறுதி நிகழ்வுக்கு பிரதமரை அழைத்து வர நேரம் கேட்டுள்ளோம். இது குறித்து அடுத்த நான்கு, ஐந்து நாட்களில் இறுதி செய்ய வேண்டும். பிப்ரவரி மாதம் 2 வது வாரத்தில் பாத யாத்திரையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். எனவே பிப்ரவரி 2 வது வாரம் நிறைவடையும் பாதயாத்திரை நிகழ்வில் கலந்துகொள்ள பிரதமர் பங்கேற்பதற்காக மீண்டும் தமிழகம் வர வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.