Skip to main content

“அண்ணாமலை நடைப்பயணம் நடக்காது...” - நாஞ்சில் சம்பத்

Published on 14/07/2023 | Edited on 14/07/2023

 

“Annamalai road show will not happen..” - Nanjil Sampath

 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைப்பயணம்; பாஜகவின் ஒன்பது ஆண்டுக்கால சாதனை; அடுத்த பிரதமர் வேட்பாளர் யார்; செந்தில் பாலாஜி விவகாரம் உள்ளிட்டவை குறித்து திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் நமக்கு அளித்த பேட்டி.

 

‘என் மண் என் மக்கள்’ என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைப்பயணத்தைத் தொடங்கப் போகிறாரே?

 

பா.ஜ.க. இல்லாத இந்த இடத்தில் அந்த நடைப்பயணம் நடக்காது. இந்த 9 ஆண்டுகளில் இந்தியாவினுடைய கோபுர பெருமையை குட்டிச் சுவராக ஆக்கியதைத் தவிர பா.ஜ.க கட்சி என்ன சாதனை செய்தது. ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்று கூறிவிட்டு ரூ. 2000 நோட்டு கொண்டு வந்தது தவிர என்ன சாதனை செய்தார்கள். கழிப்பறை கட்டி இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். அந்த கழிவறையை இவர்கள் பயன்படுத்தினால் தான் தெரியும்.

 

“Annamalai road show will not happen..” - Nanjil Sampath

 

விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ. 6000 கொடுத்தது மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் பயனடைந்திருக்கிறார்களே? அதேபோல் வீடு கட்டும் திட்டத்திலும் நிறைய பேர் பயனடைந்திருக்கிறார்களே?

 

2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக ஆக்குவேன் என்று சொன்னார்கள். அப்படி பார்த்தால் விவசாயிகளுக்கு ரூ. 60,000 கொடுக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லையே. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு விவசாயிகள் விரும்புகிற விலைக்கு விற்பதற்கு இந்தியாவில் சாத்தியம் இருக்கிறதா. விவசாயம் செய்வதை விட வேறு எங்காவது சென்று இறந்து விடலாம் என்று கருதக்கூடிய விவசாயிகளின் கவலைக்கு மருந்து இட்டார்களா. விவசாயிகள் போராடுவதற்கு டெல்லிக்கு வந்தால் சாலையில் ஆணி அடித்து அவர்களை நிறுத்துகிறார்கள். விவசாயிகளுக்கு ஏதாவது செய்தார்களா. அதனால், விவசாயிகளுக்கு நல்லது செய்தோம் என்று சொல்வதெல்லாம் தவறான விஷயம். அதனால் மோடியினுடைய ஆட்சியில் சாதனை ஒன்றும் இல்லை. வேதனையிலும், துன்பத்திலும் மக்கள் அழுது கொண்டு இருக்கிறார்கள். வேறு ஒரு கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்களே முடிவு செய்து விட்டார்கள்.

 

மீண்டும் மோடி தான் பிரதமராக வருவார் என்று சொல்கிறார்கள்?

பிரதமராகுவதற்கு அமித்ஷா, யோகி, நிதின் கட்கரி போன்றவர்களுக்கு ஆசை இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியாது.

 

மோடி தலைமையில் 9 ஆண்டுக் கால ஆட்சியில் மோடி மீதோ பா.ஜ.க அமைச்சர்களின் மீதோ ஊழல் குற்றச்சாட்டு இதுவரை இல்லை. ஆனால், தி.மு.க.வில் இருக்கிறது என்று சொல்கிறார்களே?

 

ரூ. 21,000 கோடி அதானி கணக்கில் வந்தது எப்படி. அதேபோல் பிரதமர் பராமரிப்பு நிதி எங்கே இருந்து வருகிறது. ரஃபேல் விமானம் வாங்குவதில் எத்தனை கோடி ஊழல் செய்தார்கள். இதை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நிரூபிக்க முடியும். நிரூபிக்க வேண்டிய நேரம் கூடிய விரைவில் வரும். நீதிமன்றம், தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை என இவை அனைத்தும் அவர்கள் கையில் தான் இருக்கிறது. அதனால் அவர்கள் நினைத்ததை செய்து கொண்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி விவகாரத்தில் இரண்டு மாதத்தில் புலன் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியது. ஆனால், அமலாக்கத்துறை புலன் விசாரணை செய்யவில்லையே. ஒருவருக்கு மாரடைப்பு வரும் அளவிற்கா புலன் விசாரணை செய்வார்கள். 17 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அவர் வீட்டில் 5 முறை ரெய்டு நடத்தியும் எதையும் கண்டுபிடிக்கவில்லை.

 

செந்தில் பாலாஜி மீது அப்படி என்ன கோபம். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் என்ன. தி.மு.க.வில் அவர் பலமாக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். மேலும், கொங்கு மண்டலத்தில் தி.மு.க.வை நிலை நிறுத்தியிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் கணக்கை தொடங்க முடியாத தி.மு.க.விற்கு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறார். ஒரே பொதுக் கூட்டத்தில் 94,000 பேரை தி.மு.க.வில் சேர்த்துவிட்டார். இரண்டு வருட ஆட்சியில் அவர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்திருக்கிறார். பத்தாயிரம் துப்புரவு பணியாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கொடுத்திருக்கிறார். கண் விழிக்காத கிராமங்களிலும் கருப்பு சிவப்பு கொடியை பறக்கவிட்டார். கொங்கு மண்டலம் தான் அவர்களுடைய ஆதாரம் என்று சொன்னதை இன்றைக்கு அனைத்து இடத்திலும் தி.மு.க.வை நிலை நிறுத்தியிருக்கிறார். அதனால், செந்தில் பாலாஜியை அடித்தால் ஸ்டாலின் தாங்கிக் கொள்ளமாட்டார் என்ற நோக்கத்தில் இதுபோன்று செய்கிறார்கள்.

 

ஆனால், தேசிய அளவில் பேசப்படுகிற தலைவராக ஸ்டாலின் இன்றைக்கு மாறி இருக்கிறார். கரூர் மற்றும் கோவை மாவட்டத்தில் மட்டுமே தெரிந்த செந்தில் பாலாஜியை பற்றி இன்றைக்கு மல்லிகார்ஜூன கார்கே பேசுகிறார். செந்தில் பாலாஜிக்காக மராட்டிய மண்ணிலிருந்து சரத் பவார் பேசுகிறார். ஆகவே, தேசிய அளவில் செந்தில் பாலாஜி இன்றைக்கு புகழ் பெற்றிருக்கிறார். இது செந்தில் பாலாஜிக்கு வரமாக கிடைத்திருப்பதாக கருதுவாரே தவிர இது சங்கடம் என்று சொல்லி நலிந்து போகிற அளவிற்கு செந்தில் பாலாஜி அப்படி ஒன்றும் மோசமானவர் கிடையாது.

 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்