Skip to main content

அண்ணா நகரை ஐஏஎஸ் தலைநகராக்கியவர்! 

Published on 12/10/2018 | Edited on 12/10/2018

இன்று காலை செய்தித் தொலைக்காட்சிகளில் 'சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி' நிறுவனர் சங்கர் தற்கொலை என்ற செய்தி பொதுமக்களுக்கு சாதாரண ஒரு செய்தியாகக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், மாணவர்களுக்கும் அந்த பயிற்சி நிறுவனம் குறித்து அறிந்தவர்களுக்கும் அவர் குறித்து அறிந்தவர்களுக்கும் ஒரு பேரதிர்ச்சி தந்த செய்தி. இந்தியாவின் முக்கிய அதிகாரிகளை உருவாக்கும் ஒரு புகழ் பெற்ற பயிற்சி நிறுவனத்தின் தலைவர், நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் நண்பர், ஆயிரக்கணக்கான எதிர்கால ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளின் வழிகாட்டியாக இருந்த ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி எப்படி எளிதாகக் கடந்து செல்லும்? காரணத்தை காவல்துறை விசாரித்து வருகிறது.

 

sankar ias



2004ஆம் ஆண்டு இவர் தொடங்கிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடெமி, இன்று தமிழ்நாட்டின் பல நகரங்களில் பல கிளைகளைக் கொண்டு செயல்படுகிறது. இவர் வேறு ஒரு தொழில் பார்த்துக்கொண்டு இதையும் ஒரு தொழிலாகத் தொடங்கவில்லை. இவரும் சிவில் சர்விஸ் தேர்வுகள் எழுதி, நேர்முகத் தேர்வுவரை சென்றவர். தன் அனுபவத்தை, பிறருக்கு கல்வியாக்கலாம் என்று பயிற்சி மையம் தொடங்கியவர்.

"பிரிட்டிஷ் காலத்துல இருந்தே கலெக்டர் பங்களாக்கள் எல்லாமே ஊருக்கு வெளியே, பெருசா, யாரும் எளிதாக உள்ளே செல்ல முடியாத கட்டுப்பாடுகளுடனேயே அமைக்கப்பட்டிருந்தன. இந்த விஷயமும் அவர்களிடம் நாம் அடிமையாய் இருந்ததும் சேர்ந்து கலெக்டர் வேலையெல்லாம் ரொம்ப பெரிய வேலை, நமக்கெல்லாம் அது கிடைக்காது, நம்மால் அது முடியாது' என்னும் ஒரு வித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியது. முதலில் அந்தத் தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளிய வரணும். அண்ணா யுனிவர்சிட்டி, ஐஐடியில் இருந்து வந்தவங்கதான் ஐஏஎஸ், ஐபிஎஸ் பண்ண முடியும்னு நிறைய பேர் நினைக்குறாங்க. அது சுத்தப் பொய். சிவில் சர்விஸ் என்பது காமன் சென்ஸ்தான், பகுத்துப் பார்க்கும் அறிவு இருந்தா போதும். அது எல்லோருக்கும் வராது. ஆனால், இந்த காலேஜ்ல படிச்சாதான் வரும் என்பதும் கிடையாது. எங்க நிறுவனத்துக்கு வெளிநாட்டு யுனிவர்சிட்டியில் இருந்து வந்தவங்க இருக்காங்க. அவர்களால் சாதிக்க முடிஞ்சதை விட அதிகமாக சாதிச்சிருக்காங்க இங்க படிச்ச மாணவர்கள்" - இது சங்கர் பல முறை மாணவர்களுக்குக் கூறியது.


 

sankar family



இவர் தமிழ் வழி கல்வி படித்து 12ஆம் வகுப்பு வரை ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை எழுதுவதைக் கூட கடினமாக உணர்ந்தவர். தன் 22 வயதில் கல்லூரி சென்று 27 வயதில் முதுகலை படிப்பு முடித்து 29 வயதில் தான்  சிவில் சர்விஸ் முயற்சியை தொடங்கினார். நேர்முகத் தேர்வு வரை சென்ற இவர், அதற்கு மேல் செல்ல முடியாத போது தன் அனுபவத்தைப் பகிர முடிவு செய்து பயிற்சி மையம் தொடங்கினார். பயிற்சி நிறுவனம் நடத்துவதோடு நிற்காமல் தேர்வு முறைகளில் எளிய மாணவர்களுக்கு எதிராக நடக்கும் மாற்றங்களை எதிர்த்து போராட்டங்களில் கலந்துகொண்டவர், குரல் கொடுத்தவர். பல எளிய பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு பணத்தை முக்கியமாகக் கருதாமல் பயிற்சியளித்தவர். ஐஏஎஸ் பயிற்சி என்றாலே டெல்லி என்றிருந்த நிலையை மாற்றி அண்ணா நகரை ஐஏஎஸ்க்கு பெயர் பெற வைத்தவர் சங்கர். ஆயிரக்கணக்கானோருக்கு நம்பிக்கையளித்த சங்கர், தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி அவரது மாணவர்களுக்கும் அவரால் உருவான அதிகாரிகளுக்கும் பேரதிர்ச்சிதான்.

அண்ணா நகரில் சங்கர் பயிற்சி மையத்திற்கு அருகில் உள்ள டீக்கடைக்கு வகுப்புகளின் இடைவேளையில் இவர் வருவார். இயல்பாக நின்று புகைப்பார், வரும் மாணவர்களைக் கண்டு புன்னகைத்து ஹாய் சொல்லுவார். 'என்னிடம் கற்றுக்கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக்கொள்ள வேண்டும். அந்தத் தெளிவு உனக்கு இருக்கிறது' என்ற எண்ணம் அது. அது உண்மைதான், இனி அந்த டீக்கடையில் அவரைக் காண முடியாது. என்றாலும், அவர் விதைத்த நம்பிக்கை சிவில் சர்விஸ் கனவுகளுடன் வரும் தமிழக கிராமப்புற மாணவனை அதிகாரத்துக்குக் கொண்டுவரும்.    
 

 

 

 

Next Story

சங்கர் படுகொலையைவிட, நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது!!! -எவிடென்ஸ் கதிர்

Published on 25/06/2020 | Edited on 25/06/2020
hj

 

சங்கர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கும் தண்டனை குறைப்பு மற்றும் விடுதலை கொடுக்கப்பட்டது. இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இதுதொடர்பாக கூறும்போது, “கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி சங்கர் என்ற இளைஞர் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவருடைய மனைவி கவுசல்யா வெட்டப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று மீண்டார், அதாவது  ஒரு கூலிப்படை கும்பல் சங்கர், கவுசல்யா கடைவீதிக்கு செல்லும்போது, வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றது. இதில் காயங்களுடன் கவுசல்யா பிழைத்துக்கொண்டார். சங்கர் அதே இடத்தில் பலியானார்.  இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது மிக அப்பட்டமான சாதிய ஆணவ படுகொலை என்பது அனைவருக்கும் தெரியும். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு திருப்பூர் நீதிமன்றம் தண்டனை கொடுத்தது. சிலரை விடுதலை செய்தது. இதில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்திருந்தனர்.  தற்போது அந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பு கடும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய குற்றவாளியான சின்னசாமி விடுவிக்கப்பட்டுள்ளார். கூலிப்படையை சேர்ந்த சிலருக்கு மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற தீர்ப்பு என்பது மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. சங்கருக்கு நடந்த ஆணவ படுகொலையைவிட இந்த தீர்ப்புதான் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றம் கொடுக்கின்ற தீர்ப்புகளை மதிக்கின்றோம், ஏற்றுக்கொள்கிறோம் என்பது வேறு. அதில் உண்மை தன்மை இல்லை என்கிறபோது நாங்கள் மேல் முறையிட்டுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. இந்த வழக்கிலும் அந்த சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

கவுசல்யா அந்த சம்பவத்தை நேரடியாக பார்த்த ஒரு சாட்சி, அவருடைய சாட்சியைத்தான் நீதிமன்றம் ஆதாரமாக எடுத்துக்கொண்டு தீர்ப்பு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தீர்ப்பை நான் வாசித்து பார்த்தேன். 311 பக்கங்கள் கொண்ட தீர்ப்பாக அது இருக்கின்றது. அந்த தீர்ப்பில் ஒரு இடத்தில் கூட இந்த கொலை சாதி ஆணவப்படுகொலை என்று பதிவு செய்யப்படவில்லை. இந்தியா முழுவதும் இது சாதிக்காக நிகழ்த்தப்பட்ட ஒரு படுகொலை என்று தெரிந்திருந்தாலும், நீதிமன்றத்தின் தீர்ப்பில் ஒரு வார்த்தை கூட அந்த மாதிரியான வாசகங்கள் இல்லை. அரசுதரப்பு நீதிமன்றத்தில் போதுமான நடைமுறைகளை செய்து குற்றவாளிகளை தப்பிக்க விட்டிருக்கக்கூடாது. ஆனால் அரசு அத்தகைய எந்த முயற்சியையும் செய்யவில்லை. இதில் இருந்தே தெரிகின்றது அவர்களுக்கு எத்தகைய அனுமானங்கள் இருந்திருக்கின்றது என்று. இன்னும் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். 

 

Next Story

உடுமலை சங்கர் கொலை வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு...

Published on 20/06/2020 | Edited on 20/06/2020
Udumalai Shankar case to be heard day after tomorrow

 

உடுமலை சங்கர் கொலை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை மறுநாள் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கவுள்ளது.

இருவேறு சமூகத்தை சேர்ந்த கௌசல்யாவும், சங்கரும் 2015-ல் திருமணம் செய்து கொண்டனர். 2016 மார்ச் 13-ல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.   

கௌசல்யா தந்தை உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. தண்டனையை எதிர்த்து 6 குற்றவாளிகளும், மூன்று பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் நாளை மறுநாள் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.