Skip to main content

அறிவாலயத்துக்கு அல்வா! சேலம் திமுகவில் சலசலப்பு!!

Published on 20/07/2020 | Edited on 20/07/2020

 

salem district

 

உள்ளாட்சித் தேர்தலின்போது, ஆளுங்கட்சிக்கு முரட்டு விசுவாசம் காட்டியதாக எழுந்த புகாரின்பேரில் கட்டம் கட்டப்பட்ட ஏற்காடு ஒன்றியச் செயலாளர் ஏ.டி.பாலு மீண்டும் கட்சிக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டதால், கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


தமிழகத்தில் கடந்த டிசம்பரில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்றாலும் கூட, சேலம் மாவட்டத்தில் 65 சதவீத ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளைத் தி.மு.க. கைப்பற்றி கெத்து காட்டியது. அதேநேரம், 20 ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவிகளை மொத்தமாக அ.தி.மு.க. கூட்டணி வாரிச்சுருட்டியது. 


இவற்றில் சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சேலம், ஏற்காடு, அயோத்தியாப்பட்டணம் ஆகிய ஒன்றியங்களில் தலைவர் பதவியைத் தி.மு.க. கைப்பற்றி விடும் நிலை இருந்தும் கூட, உடன்பிறப்புகளின் உள்ளடிகளால் கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாத நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சியின் குதிரை பேரத்தில், தி.மு.க.வில் யாரெல்லாம் ட்ரம்ப் கார்டாக இருந்தார்களோ அவர்கள் எல்லோருமே விலை போனார்கள். அந்தளவுக்கு கச்சிதமாக காய் நகர்த்தி இருந்தார், சேலத்தின் நிழல் முதல்வரான பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன்.


உடன்பிறப்புகளின் உள்ளடி வேலைகள் குறித்த புகார்கள் தலைமைக்கு பறந்ததால், உடனடியாகக் களையெடுப்பில் இறங்கினார் மு.க.ஸ்டாலின். சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவை உடனடியாக அப்பதவியில் இருந்து தூக்கினார். அதுவரை மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்டத்தின் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தேர்தல் பணிக்குழுவில் இருந்த டி.எம்.செல்வகணபதி, மேற்கு மாவட்ட பொறுப்பாளரானார்.


ஏற்காடு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.டி.பாலு, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக முரட்டு விசுவாசத்துடன் நடந்து கொண்ட புகாரின்பேரில் கடந்த 21.1.2020ஆம் தேதி அதிரடியாக கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை ஜூலை 8ஆம் தேதி முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினராக தொடர்வார் என்றும், அவர் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாகவும் கட்சித் தலைமை அறிவித்து இருப்பது சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

sss

 

இது தொடர்பாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் நம்மிடம் பேசினர்.


''உள்ளாட்சித் தேர்தலில் ஏற்காடு ஒன்றியக்குழுவில் மொத்தமுள்ள 6 இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளிலும் தலா 3 பேர் கவுன்சிலர்களாக வெற்றி பெற்றனர். தி.மு.க. தரப்பில் கோகிலா சித்தேஸ்வரன், சின்னவெள்ளை, சேகர் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களை அ.தி.மு.க. பக்கம் இழுக்க பெரிய அளவில் குதிரை பேரம் நடந்தது. அப்போது ஏற்காடு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்த ஏ.டி.பாலு, ஆளுங்கட்சியினரிடம் இருந்து 40 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு, அ.தி.மு.க.வுக்கு சாதகமாக ஓட்டுப்போடுமாறு வற்புறுத்தினார். இதற்காக கோகிலா சித்தேஸ்வரனுக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்தார். ஆனால் அதன்பிறகு நடந்த பேரங்களில் தி.மு.க. தரப்பில் வெற்றி பெற்ற சேகரை துணைத்தலைவராக்கிவிட்டு அ.தி.மு.க.வுக்கு தலைவர் பதவியை விட்டுக் கொடுத்துவிட்டனர்.


கவுன்சிலர்கள் கோகிலா சித்தேஸ்வரன், சின்னவெள்ளை மற்றும் ஏற்காடு ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள் சிலர் ஏ.டி.பாலுவும், அப்போதைய கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜாவும் உள்ளாட்சித் தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வேலை செய்த விவரங்களை எல்லாம் அறிவாலயத்திற்கு நேரில் சென்று புகார் அளித்தனர். ஏ.டி.பாலு, அ.தி.மு.க.வை ஆதரிக்கச் சொல்லி தனக்குக் கொடுத்த 5 லட்சம் ரூபாயையும் தளபதியிடம் ஒப்படைத்தார், கோகிலா.


அதற்கு அடுத்த நாள் விளக்கம் அளிப்பதற்காக ஏ.டி.பாலு அறிவாலயம் சென்றபோது அவரை நேரில் சந்திப்பதையே தளபதி தவிர்த்து விட்டார். உடனடியாக அவரை கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்து முரசொலியில் கட்டம் கட்டி அறிவிப்பும் வெளியானது. கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகும்கூட, ஏற்காடு ஒன்றியத்தில் கடைகள் ஏலம் விட்டபோது தி.மு.க. பெயரைச் சொல்லி ஆளுங்கட்சிக்காரர்களிடம் ஏ.டி.பாலு 'கட்டிங்' வாங்கினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சித்ரா இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். கட்சிக்கு விசுவாசமில்லாத ஏ.டி.பாலுவை சில நாள்களுக்கு முன்பு மீண்டும் கட்சியில் சேர்த்திருப்பது, எங்களுக்கு எல்லாம் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.


என்ன தப்பு செய்தாலும் கட்சி நம்மீது நடவடிக்கை எடுப்பதுபோல் எடுத்துவிட்டு மீண்டும் சேர்த்துக் கொள்ளும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும், ஏ.டி.பாலுவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர, அவரிடம் இருந்து சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆஸ்.சிவலிங்கத்துக்கு 5 லட்சம் ரூபாய் கைமாற்றப்பட்டு உள்ளது. இந்த விவரங்களை எல்லாம் அறிவாலயத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் மூன்று பேர் தளபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில்லை. தளபதிக்கு தெரிந்து இதுபோன்ற தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. அவரையே ஏமாற்றித்தான் ஏ.டி.பாலுவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும்,'' என்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.


ஏ.டி.பாலுவிடம் இருந்து கிழக்கு மாவட்டத்திற்கு பணம் வசூலித்துக் கொடுக்கும் தரகு வேலையை எஸ்.ஆர்.சிவலிங்கத்துக்கு நெருக்கமான கட்சிக்காரர் ஒருவர் செய்து கொடுத்ததாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. மேலும், கரூர் மாவட்ட தி.மு.க.வை முன்னுதாரணமாக வைத்து, சேலம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பத்து ஒன்றியங்களையும் அமைப்பு ரீதியாக இரண்டாக பிரிக்கவும் மாவட்டத் தலைமை யோசித்து வருவதாகவும் சொல்கிறார்கள். இதுவும் கட்சிக்குள் புதுக்குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

salem district


இது தொடர்பாக நாம் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கத்திடம் கேட்டோம்.

 

''ஏற்காடு ஒன்றியத்தில் ஏ.டி.பாலு கட்சியின் அடிப்படை உறுப்பினராகத்தான் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போதும் சொல்கிறேன், அவர் ஒருநாளும் ஒன்றிய பொறுப்புக்கு வரமாட்டார். கட்சித் தலைமைக்கு அவர் தன் தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்ததன் பேரில், கட்சித் தலைமைதான் அவரை மீண்டும் உறுப்பினராகச் சேர்த்து இருக்கிறது. இதில் என் பரிந்துரை எதுவும் இல்லை.


யாராவது அடிப்படை உறுப்பினராகச் சேர்வதற்காக 5 லட்சம் ரூபாய் கொடுப்பார்களா?. அந்தளவுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு ஏ.டி.பாலு ஒன்றும் கோடீஸ்வரனும் கிடையாது. என் மீதான காழ்ப்புணர்வு காரணமாக கட்சிக்காரர்கள் சிலர் இவ்வாறான புகார்களைச் சொல்கிறார்கள். அதேபோல்தான், ஒன்றியங்களைப் பிரிக்கும் திட்டமும் என்னிடம் இல்லை. இருந்த இடத்தில் இருந்தே நிர்வாகம் செய்யும் அளவுக்கு தொழில்நுட்ப வசதிகள் எல்லாம் வந்துவிட்டது. அப்படியே செய்தாலும் அதெல்லாம் கட்சித் தலைமைதான் தீர்மானிக்கும்.


இரண்டுமுறை எம்.எல்.ஏ. ஆக இருந்தும்கூட நானெல்லாம் பரம்பரைச் சொத்துகளை விற்று கட்சிக்காக வேலை செய்பவன். இப்போதுகூட வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். சில பேர், கட்சிக்குள் குழப்பதை ஏற்படுத்த இப்படியெல்லாம் புகார்களைச் சொல்கிறார்கள்,'' என்றார் எஸ்.ஆர்.சிவலிங்கம்.

 

dddd

 

ஏற்காடு முன்னாள் ஒன்றியச் செயலாளர் ஏ.டி.பாலுவிடம் கேட்டபோது, ''உள்ளாட்சித் தேர்தலில், ஏற்காடு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்ற கோகிலா சித்தேஸ்வரன் அ.தி.மு.க.விடம் பேரம் பேசி வந்தார். அவரை தி.மு.க.வுக்கு ஆதரவாக ஓட்டுப்போடத்தான் 5 லட்சம் ரூபாயை துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சேகர் கொடுத்திருந்தார். அவர் அ.தி.மு.க. அணிக்கு போய்விடக்கூடாது என்பதற்காக, அவர் உள்பட தி.மு.க. .கவுன்சிலர்களை அப்போது டாப்சிலிப்பில் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைத்திருந்தேன். 

 

அந்தப் பணத்தைதான் நான் கொடுத்ததாக அவர் கட்சித் தலைமையிடம் கொடுத்தார். அந்தப் பணத்தையும் கட்சித் தலைமை கோகிலாவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டது. நான் ஒருபோதும் அ.தி.மு.க.விடம் பணம் பெறவில்லை. லாக் டவுனுக்கு முன்பே, என் தரப்பு விளக்கத்தை கட்சித் தலைமையிடம் கடிதம் மூலம் தெரிவித்து இருந்தேன். கிழக்கு மாவட்டக் கழக பொறுப்பாளரும் என் மீது தவறு இல்லை என்று தளபதியிடம் கூறினார். அதையடுத்துதான் நான் மீண்டும் கழகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளேன்,'' என்றார்.

 

http://onelink.to/nknapp


உள்ளாட்சித் தேர்தலில் கழகத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்ததால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டவர்தான் ஏ.டி.பாலு. அப்போது எதிராகச் செயல்பட்டவர், மீண்டும் சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது ஆளுங்கட்சியிடம் சோரம் போகமாட்டாரா? என பதிலுக்கு கேள்வி எழுப்புகின்றனர் கழக உடன்பிறப்புகள். நியாயமான கேள்வி; தலைமைக்குப் புரிந்தால் சரிதான்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.