Skip to main content

தங்க தமிழ்செல்வன் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த தினகரன்: கே.சி.பழனிசாமி அதிரடி

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளில் அமமுக தோல்வி அடைந்ததால், மக்கள் அமமுகவை ஏற்கவில்லை என்று அமமுகவில் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
 

தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி.
 

அமமுக துவங்கியபோது டிடிவி தினகரனுடன் பக்க பலமாக இருந்தவர்கள் சாமி, செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன். இதில் சாமி உடல்நிலை சரியில்லாமல் காலமானார். செந்தில்பாலாஜி திமுகவுக்கு சென்றார். தங்க தமிழ்செல்வன் தற்போது அமமுகவில் இருந்து வெளியேறியிருப்பது பற்றி...
 

தினகரனை நம்பி சென்றவர்கள் யார் என்றால், அதிமுகவைச் சேர்ந்த ஒரு சிலரும், அந்த குடும்பத்தால் பலன் அடைந்தவர்களும்தான். முதலில் அதிமுக தலைமையை கைப்பற்றுவோம் என்று தினகரன் சொன்னார். அதுவரை அவர் பின்னால் சென்றவர்கள் அவருடன் இருந்தனர். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பின்னர் தினகரன், சின்னம் ஒரு பொருட்டே கிடையாது. இரட்டை இலைக்கு வேல்யூ கிடையாது. அமமுகவில் அதிமுக இணைய வேண்டும் என தன்னை மிகப்பெரிய தலைவராக காட்டிக்கொண்டார். 

 

ttv dinakaran - thanga tamilselvan


 

இதனை ஏற்றுக்கொள்ளாத அதிமுக தொண்டர்கள் அவரைவிட்டு தள்ளி வந்துவிட்டனர். அப்படி தள்ளி வந்ததன் முடிவுதான் இந்த தேர்தலின் முடிவுகள். இந்த முடிவுகள் வெளியானவுடன் அமமுகவில் இருந்த  இரண்டாம் கட்ட தலைவர்களும் அமமுகவை மக்களும், அதிமுக தொண்டர்களும் ஏற்கவில்லை என்று உணர்ந்தனர். அமமுக என்பது அதிமுகவுக்கு சம்மந்தமில்லாத ஒரு அமைப்பாக இருக்கிறது என்று உணர்ந்தனர். இதனால்தான் அதிமுகவால் உருவானவர்கள் அமமுகவில் இருந்து வெளியேறுகிறார்கள். தங்க தமிழ்செல்வனும் அதேபோல்தான் வெளியேறியுள்ளார்.
 

ஒவ்வொரு கட்சியிலும் தலைமை மீதும், நிர்வாகிகள் மீதும் சலிப்புகள் இருக்கும். அதனை சக கட்சிக்காரர்களுடன் பகிர்ந்து கொள்வது இயற்கை. வெளியே பேசும்போது, எங்கள் தலைவர், எங்கள் உயிர் என்றுதான் பேசுவார்கள். இது எல்லா கட்சியிலும் நடக்கிற ஒன்றுதான். அப்படி தங்க தமிழ்செல்வன் பேசியபோது, பதிவு செய்து தினகரன் தரப்புத்தான் வெளியிட்டது. 
 

ஏனென்றால் அதிமுகவில் தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏவாக, எம்பியாக இருந்தவர், மேலும் கட்சியில் பல பொறுப்புகளை வகித்தவர். அவர் அமமுகவில் இருந்து வேறு கட்சிக்கு செல்லும்போது அவருடன் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக இப்படி செய்துள்ளனர். 
 

தங்க தமிழ்செல்வனை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று கூறுகிறார்களே...
 

அந்த அளவுக்கு அரசியலில் ஒன்றுமே தெரியாதவரா தங்க தமிழ்செல்வன். ஓ.பன்னீர்செல்வம் முதல் அமைச்சராக இருந்தபோதே அவரை எதிர்த்து அரசியல் செய்தவர். 


 

K. C. Palanisamy


 

ராஜ்யசபா சீட்டுக்கு ஆசைப்பட்டுத்தான் அவர் கட்சி மாற நினைக்கிறார் என்று அமமுகவினர் கூறுகிறார்களே...


இதெல்லாம் ஒரு யூகமாகத்தான் இருக்கும். அதிமுகவில் ஏற்கனவே மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அவர்கள் விடுவார்களா? எடப்பாடி பழனிசாமிதான் முதல் அமைச்சர் என சசிகலா தேர்வு செய்தபோது, ஓ.பன்னீர்செல்வம் தனியாக சென்றார். அப்போது தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பிரிந்ததால் அந்த மாவட்டத்திற்கு தங்க தமிழ்செல்வனை அமைச்சராக்கலாம் என்று தங்கமணி, வேலுமணி, எடப்பாடி பழனிசாமி மூன்று பேரும் பேசியிருக்கிறார்கள். ஆனால் தினகரன், தங்க தமிழ்செல்வனை அமைச்சராக்கக்கூடாது என்று சொல்லியுள்ளார். பின்னர் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் இணைந்த பிறகு, ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை பெற்றார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இருக்க முடியாது என்று தினகரன் பக்கம் வந்தார் தங்க தமிழ்செல்வன். பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் அன்றைக்கே அமைச்சர் பதவியை பெற்றிருப்பார் தங்க தமிழ்செல்வன். 
 

தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் இணைக்க விரும்புவாரா எடப்பாடி பழனிசாமி? 
 

தங்க தமிழ்செல்வனை அதிமுகவில் பயன்படுத்த நினைப்பார் எடப்பாடி பழனிசாமி. ஏனென்றால் எதிர்காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி இடையே பிரச்சனை ஏற்பட்டால் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கை ஓங்காமல் இருக்க, தங்க தமிழ்செல்வனை பயன்படுத்த நினைப்பார். 
 


 

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.