Skip to main content

ஓ.பி.எஸ். மகனுக்கு உள்ள ஒரே தகுதி... ஜெமிலா கடும் தாக்கு

Published on 28/03/2019 | Edited on 28/03/2019

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெமிலா நக்கீரன் இணையதளத்திடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவற்றிலிருந்து...
 

அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. பொது சின்னம் அளிப்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
 

பொதுச் சின்னம் ஒதுக்கச் சொல்லியிருப்பது எங்களுக்கு சாதகமாகத்தான் இருக்கிறது. மேலும் எந்தச் சின்னம் என்பதை முடிவு செய்வதை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துவிட்டார்கள். அவர்கள் எந்தச் சின்னம் கொடுத்தாலும் வெற்றி பெறுவோம். 

 

jameela ammk


 

தேர்தல் களத்தில் உங்கள் கட்சி நிலவரம் எப்படி உள்ளது?
 

தேர்தல் களத்தில் எங்கள் கட்சி சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அந்த அளவிற்கு துணிச்சலான வேட்பாளர்கள் தான் எங்களிடம் உள்ளனர். அதிமுகவிலிருந்து மட்டுமல்ல புதிய வாக்காளர்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். உதராணத்திற்கு டி.டி.வி.தினகரன் செல்லும்போது வழி முழுக்க பெரும் வரவேற்பு உள்ளதை பார்க்கலாம். அதனால் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதேபோல் மிக எளிதாக வெற்றி பெற அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்.
 

குழந்தையே பிறக்கவில்லை பெயர் வைக்கத்துடிக்கிறார்கள் என்று முதல்வரும், அமமுக என்பது பிரைவேட் லிமிடெட், அது ஒரு கட்சியாகவே நடக்கவில்லை என அமைச்சர் இராஜேந்திர பாலாஜி போன்றோர் பிரச்சாரத்தில் பேசுகிறார்களே?
 

அவர்கள், ‘மோடி எங்கள் டாடி’ என்றெல்லாம் பேசுகிறார்கள். இதுவெல்லாம் ஏற்புடையதாகவா இருக்கிறது? இன்று அவர்கள் முழுவதுமாக பாஜகவின் வாயாக இருக்கிறார்கள். மோடியின் மக்கள் விரோத செயல்களையெல்லாம் மக்கள் நலத்திற்கான விஷயங்கள் என்று பேசுகிறார்கள்.
 

இவர்களின் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள இவர்கள் இப்படி பேசிவருகின்றனர். அவர்கள் தரப்பில் நியாயம் இருக்கிறது என்பதுபோல் மக்களிடம் காட்டவேண்டும் என்பதற்காக இப்படி பேசுகிறார்கள். மற்றப்படி உண்மையாகவே மக்களும், கட்சியில் இருக்கும் தொண்டர்களும் இவர்கள் ஜெயலலிதாவின் கொள்கைக்கு எதிராக இருக்கிறார்கள் அதனால் இவர்களை ஏற்கக்கூடாது என்ற முழு மனநிலையோடு இருக்கிறார்கள். 
 

அதிமுகவிலிருந்து 60 முதல் 70 சதவீத நிர்வாகிகள் அமமுகவில் இருக்கிறார்கள். அதேபோல் மற்றக் கட்சிகளில் இருந்தும் என்னைப்போல் அமமுகவில் இணைந்து இருக்கிறார்கள். இவையெல்லாமே டிடிவி தினகரனுக்கு கிடைத்த பெரிய பரிசு போன்றுதான். 
 

ரஜினி உள்பட பலர் வெற்றிடம் இருக்கிறது அதனை நிரப்ப வேண்டும் என்று வெறும் வாய்ச்சொல்லாகத்தான் இருக்கிறார்கள். யாரும் களத்தில் இறங்கவில்லை. அப்படி இருக்கும்போது களத்தில் இவ்வளவு பிரச்சனைகள் கொடுக்கும்போதும்கூட துணிச்சலாக தினகரன் வருகிறார் எனும்போது மக்களும் இதைதான் விரும்புகிறார்கள். ஜெயலலிதாவை மக்கள் ஏன் விரும்பினார்கள் என்றால் எதையும் துணிச்சலோடு அவர்கள் எதிர்கொண்ட விதம். அதேபோன்று தினகரனும் பண்ணும்போது மக்களுக்கு பிடிக்கிறது.
 

அதிமுகவின் கூட்டணி வெற்றி கூட்டணி என்கிறார்களே? அதுகுறித்து உங்கள் பார்வை?
 

அது முழுக்க சந்தர்ப்பவாத கூட்டணி. பாமக தனது தனித்துவத்தை இழந்துவிட்டது. காரணம் 2016 காலகட்டத்தில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என விளம்பரம் செய்து, அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோர் திராவிட கட்சிகள்தான் தமிழகத்தையே குட்டிச்சுவராக்கிவிட்டனர் என்று மிகவும் மோசமான, பகிரங்கமான குற்றச்சாட்டுகளை சொன்னதோடு, இழிவான சொற்களையும் பயன்படுத்தினர். இன்று திராவிட கட்சியான அதிமுகவிடம் கூட்டணி வைத்துள்ளது பாமக.


மேலும் அதிமுகவையும் மறைந்த ஜெயலலிதாவையும் கடுமையாக விமர்சித்த பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. இது ஜெயலலிதாவுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். வெற்றி பெறவேண்டும் என்று கூட்டணி அமைத்ததை யாரும் இரசிக்கவில்லை. அந்த இரு கட்சிக்குள் இருப்பவர்களும்கூட இதனை இரசிக்கவில்லை. சிலர் இதனை வெளிப்படையாக சொல்லிவிட்டனர். இன்னும் சிலரால் இதனை சொல்லமுடியவில்லை.

 

admk-pmk


 

அப்படியென்றால் பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிமுகவிற்கு வேலை செய்வார்களா? செய்ய மாட்டார்களா?
 

நிச்சயமாக செய்யமாட்டார்கள். இப்போதே மேடைகளில் அங்கங்கே பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் கூட்டணி அமைத்துவிட்டால் தொண்டர்களும், நிர்வாகிகளும் வேலை செய்துவிடுவார்கள் என்றும் மட்டும் பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் களநிலவரம் அதுகிடையாது.


எப்போதும் உணர்வுபூர்வமாக இருப்பவர்கள் தொண்டர்கள்தான். அப்படிப்பட்டவர்கள் ஜெயலலிதாவை இழிவாகப்பேசியவர்களை கூட்டணியில் சேர்த்திருப்பதை  ஏற்கமாட்டார்கள். இவர்கள் வேண்டுமானால் பதவிக்காகவும் வெற்றிக்காகவும் அதையெல்லாம் மறந்திருக்கலாம். உணர்வுபூர்வமாக இருந்திருந்தால் இவர்களே கூட்டணி அமைத்திருக்கமாட்டார்கள்.

 

Ravindranath Kumar - Thanga Tamil Selvan


 

வாரிசு அரசியல் கூடாது என்று சட்டம் இருக்கிறதா? என்று பன்னீர்செல்வம் தனது மகனை தேனி வேட்பாளராக நிறுத்தும்போது கேட்கிறார். மேலும், ‘நிச்சயமாக தங்கத்தமிழ்செல்வனை தோற்கடிப்பேன் அதற்கான வியூகம் என்னிடம் உள்ளது’ என்று பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் சொல்லுகிறார். உண்மையில் அமமுகவின் கள நிலவரம் தேனியில் எப்படி இருக்கிறது?

 

தேனி தொகுதியின் அதிமுக வேட்பாளருக்கு பன்னீர்செல்வத்தின் மகன் எனும் தகுதியைத் தவிர வேறு எந்த தகுதியும் கிடையாது. அதனால் நிச்சயம் தங்கத்தமிழ்செல்வன் வெற்றிபெறுவார். தங்கத்தமிழ்செல்வன் அதே தொகுதியில் இருந்தவர். ஜெயலலிதாவிற்காக தொகுதியைவிட்டுக்கொடுத்துவிட்டு வந்தவர். இப்போதும் தனது பதவியை தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறார் என்றால் அவ்வளவு கொள்கை பிடிப்புடன் இருப்பவர். அதனால் மக்கள் அவருக்கான அங்கீகாரத்தை கொடுப்பார்கள்.

 

பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு விசாரணை கமிஷன் அமைத்து உண்மையை வெளியே கொண்டுவருவேன் என்று தெரிவித்தார். ஆனால் இன்று அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை கமிஷனுக்குக்கூட போகமுடியவில்லை. அப்படியென்றால் அவரிடம் என்ன உணமை இருக்கிறது?. இது அனைத்து மக்களுக்கும் தெரியும். தனது முதல்வர் பதவி போனது என்பதுதான் அவருக்கு கஷ்டமாக இருந்ததே தவிர, வேறு எதுவும் கிடையாது. துணை முதல்வர் பதவி கொடுத்ததும் அவர் அனைத்தையும் மறந்துவிட்டார்.

 

அமமுக தனியாக நிற்க என்ன காரணம், வாக்கு வங்கியை காட்ட வேண்டும் என்பதுதான் குறிக்கோளா?
 

கிடையாது. தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் எந்தவித நன்மையும் நடைபெறப்போவதில்லை என்பது முதல் காரணம். காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுக்கும் மாநிலத்தின் மீது அக்கறை கிடையாது. அதைத் தவிர்த்து மாநில கட்சிகளான பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் எல்லாம் மிகவும் மோசமாக அதிமுகவை விமர்சித்த கட்சிகள். இப்படி விமர்சித்தவர்களுடன் எப்படி கூட்டணி அமைக்க முடியும்?. அப்படி அமைத்திருந்தால் அது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியாகத்தான் இருந்திருக்கும். அது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய கூட்டணியாக இருக்காது. 
 

ஆர்.கே.நகர் தேர்தலில் ஒரு புறம் திமுக பல கட்சிகளை இணைத்து கூட்டணி வைத்து போட்டியிட்டது. அதிமுகவும் கூட்டணி வைத்து போட்டியிட்டது. அப்படி இருக்கும்போது, எஸ்.டி.பி.ஐ. கட்சி மட்டும்தான் அப்போது ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கி வெற்றிக்காக உழைத்தார்கள். அவர்களுக்கு நன்றியுடனும் அப்போதே எங்கள் அணியுடன் கொள்கையுடன் ஒத்துப்போய் வேலை செய்ததாலும் அவர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது அமமுக. 

 

 

 

 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

“என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை” - தி.மு.க வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
DMK candidate CN Annadurai crictized edappadi pazhaniswamy for lok sabha election

மக்களவைத் தேர்தல், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தொடங்கப்படும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று, அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நக்கீரன் சார்பாக அவரைப் பேட்டி கண்டோம். நம்முடைய கேள்விகளுக்கு சி.என்.அண்ணாதுரை அளித்த பேட்டி பின்வருமாறு...

2014 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தீர்கள். அதனைத் தொடர்ந்து மீண்டும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தீர்கள். அப்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்ன? இதுவரை தொகுதிக்கு செய்தது என்ன?

“ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தேனோ அதை ஒரு ஆளுங்கட்சி எம்.பி செய்வதை விட அதிகமாக நான் செய்திருக்கிறேன். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி இருக்கிறோம். அதேபோல், கொரோனா காலத்தில் ஏழை எளிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. அதை சரிப்படுத்தும் விதமாக பி.எஸ்.என்.எல் டவர் இரண்டு கட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த டவர்கள் எல்லாம் பயன்பாட்டுக்கு வரும். அதிகபட்சமான கிராம சாலைகள், மூன்று ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதே போல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தியுள்ளோம்”

இந்த 2024 மக்களவைத் தேர்தலில் என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறீர்கள்?

“எதிர்க்கட்சி வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது மோடி அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். ஆனால், பாஜக தமிழ்நாட்டைத் திட்டமிட்டு புறக்கணித்தார்கள். அதையும் தாண்டி, போராடி சில திட்டங்களை அதிகாரிகளின் துணையுடன் செய்திருக்கிறோம். அந்த வகையில் தொகுதி மக்களுக்காவும், தொகுதி பிரச்சினைக்காகவும் நாடாளுமன்றத்தில் 507 கேள்விகள் கேட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் இருந்து அதிகமாக கேள்வி எழுப்பியதில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது

மோடி அரசாங்கத்துக்கோ, மோடி அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கோ தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என்று ஒரு துளி கூட அக்கறை இல்லை. திட்டமிட்டு அவர்கள் புறக்கணித்தார்கள். எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது இவ்வளவு திட்டங்கள் கொண்டு வந்திருக்குறோம் என்றால்  ஆளுங்கட்சி வரிசையில் அனைத்து ஒன்றிய அரசு திட்டங்களையும் கண்டிப்பாக இந்த திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கொண்டு வந்து இந்த பகுதி வளர்ச்சிக்கும் மக்களுடைய வளர்ச்சிக்கும் கண்டிப்பாக நான் துணையாக இருப்பேன்”.

திமுக தேர்தல் அறிக்கையும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?

“இந்த இரண்டு கட்சிகளும் ஒத்த கருத்து உடையது தானே. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபட்டார். ஆனால் இந்த தேர்தலுக்குப் பிறகு, இந்தியாவுடைய வளர்ச்சிக்கு ராகுல் காந்தியோடு துணையாக இருந்து செயல்படுவார்”.

காங்கிரஸ் அறிவித்த மகாலட்சுமி திட்டத்தின் மூலம் ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சம் கொடுப்பது எப்படி சாத்தியம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“எத்தனையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், அம்பானிக்கும், அதானிக்கும் பல லட்சம் கோடி தள்ளுபடி செய்யும் போது, ஏழை மக்களுக்கு கொடுக்கும்போது மட்டும் அது சாத்தியமாகாதா?. இந்த திட்டம் கண்டிப்பாக சாத்தியப்படும். அதனால், தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கிறோம்”.

இந்தியா கூட்டணி வாரிசு கூட்டணி என்றும் ஊழல் குற்றம் இல்லை என்றும் விமர்சனம் செய்து வருகிறார்களே?

“உலக வரலாற்றிலேயே பா.ஜ.க ஆட்சியில் நடந்த மாதிரி ஊழல் எங்கும் இருந்ததில்லை. அவர்கள் அறிவித்த தேர்தல் பத்திரம் திட்டம் கூட ஊழல் செய்வதற்காக கொண்டு வந்தார்கள்”.

திமுக கூட்டணியில் இருக்கும் வேட்பாளர்கள் தான் பொருளாதார பின்னடைவு உள்ள வேட்பாளர்கள். ஆனால், அதிமுக வேட்பாளர்கள் எளிமையான வேட்பாளர்கள் தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே?

“போன வாரம் அவர் பிரச்சாரம் செய்யும் போது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலை சட்டமன்றத் தேர்தல் என்று சொல்கிறார். என்ன தேர்தல் நடக்கிறது என்று கூட அவருக்கு தெரியவில்லை. அவருக்கு என்ன தெரியும்?. கடந்த தேர்தலில் நான் வேட்பாளராக நிற்கும் போது என்ன சொத்து மதிப்பு இருந்தது, இப்பொழுது என்ன சொத்து மதிப்பு இருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள். ஏற்கெனவே இருந்த சொத்தை எல்லாம் மக்களுக்காக செலவு செய்திருக்கிறோம். ஏனென்றால், மோடி அரசு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியை எல்லாம் கொரோனாவை காரணம் காட்டி இரண்டு வருடம் நிறுத்திவிட்டார்கள். அந்த சமயத்தில் கூட மக்களுக்கான உதவி செய்திருக்கிறோம். நாங்களும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்” எனக் கூறினார்.

 

பேட்டி தொடரும்...