ADVERTISEMENT

2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அ.ம.மு.க. தயார்..! சி.ஆர்.சரஸ்வதி பேட்டி..!

11:53 AM Sep 30, 2020 | rajavel

ADVERTISEMENT

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தரப்பினரிடையே காரசாரமாக விவாதிக்கப்பட்டதால், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக செயற்குழுக் கூட்டம் நடந்தது.

ADVERTISEMENT

அதேநேரத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி ராயபேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் மண்டல வாரியாக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடந்தது. இன்று 3வது நாளாக அவர்களிடம் பொருளாளர் வெற்றிவேல், தலைமை நிலைய செயலாளர் திருச்சி மனோகரன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் கட்சி கூட்டம், ஆலோசனை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சென்றார். இதேபோல் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் பணிகளுக்கு தயாரானோம். அதற்குள் மேலும் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பம் கேட்டிருந்தனர். அதனை வழங்கிய நிலையில் கரோனா பரவல் வந்துவிட்டது. கரோனாவால் ஊரடங்கு வந்ததால் கூட்டம் நடத்த வேண்டாம் என தினகரனும் சொல்லிவிட்டார். அதனால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டது.

2021 சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். இதற்காக கடந்த 28ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வாரியாக ஆலோசனை நடத்தினோம். அவர்கள் கேட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது. தேர்தல் வருவதால் தேர்தல் பணிக்குழு, பூத் கமிட்டி ஆலோசனை நடந்தது. இன்றோடு (30.09.2020) அந்த ஆலோசனை முடிந்தது. விரைவில் பொதுச்செயலாளர் தினகரன், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலளார்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துவார்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை எழுந்துள்ளது. சசிகலா விடுதலைக்கு பின்னர்...

அதிமுகவைப் பற்றி சொல்ல விரும்பவில்லை. அன்றைய செயற்குழுவில் இருவரையும் முதலமைச்சராக்கியது சசிகலாதான் என்று சொன்னார்கள், இதைத்தான் நாங்கள் சொன்னோம். சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்பது எங்களது பிரார்த்தனை. விடுதலைக்கு பின்னர் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். அதற்கு பிறகுதான் நாங்கள் அதைப்பற்றி பேசுவோம். நாங்கள் இப்போது எங்களது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் பணி என செல்கிறோம். 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அ.ம.மு.க. தயாராக இருக்கிறது என்றார் உறுதியாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT