Skip to main content

''அந்த நெனப்ப தூக்கி குப்பையில போடு..!” - தினகரனின் கனவுக்கு ஆப்பு வைத்த சசிகலா! 

Published on 05/03/2021 | Edited on 05/03/2021

 

 AIADMK

 

அமமுக வேட்பாளர்களுக்காக தேர்தல் களத்தில் பிரச்சாரம் பண்ண வேண்டும் என்று டிடிவி தினகரன் கொடுத்த அழுத்தமே, ‘அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்..’ என சசிகலாவை அறிக்கை வெளியிடச் செய்தது. ஆனாலும், பத்திரிகையாளர்களிடம் தினகரன் “எனது சித்தி என்பதற்காக அவர் மீது எனது கருத்துகளை நான் திணிக்க இயலாது. அவருடைய மனசாட்சியாக நான் பேசவும் முடியாது.” என்று விளக்கம் அளித்துவிட்டு, ‘ஏன் ஒதுங்கி இருக்க வேண்டும்? அரசியலில் இருந்தபடியே நடவடிக்கை எடுக்கலாமே?’ என்று சின்னம்மாவிடம் வலியுறுத்தியதாக, தனது கட்சியினரிடம் கூறி சமாளித்துள்ளார்.  

 

இந்நிலையில், சித்தியைப் பகைத்துக்கொள்ள விரும்பாத தினகரன், அவரைக் ‘கூல்’ செய்யும் விதமாக “நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறேன்..” என்று சமாதானம் செய்ய முயற்சித்தபோது, தனது ஆலோசனையை, ஆத்திர வார்த்தைகளில் கொட்டியிருக்கிறார் சசிகலா.

 

“நான் ஜெயில்ல இருந்தப்ப என்ன சொன்னேன்? எம்.பி. எலக்ஷன்ல கான்சன்ட்ரேட் பண்ணாத.. எம்.எல்.ஏ. (இடைத்தேர்தல்) எலக்ஷன்ல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணுன்னு சொன்னேன். நான் சொன்னத நீ கேட்கல. உன்ன நம்பி வந்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கு உன்னால நல்லது பண்ண முடியல. நான் சொன்னதக் கேட்டிருந்தா பதினெட்டுல 12 பேராச்சும் ஜெயிச்சு எம்.எல்.ஆயிருப்பாங்க. ஆட்சியும் கவிழ்ந்திருக்கும். ஆனா.. நீ என்ன பண்ணுன? கூட்டணி கட்சிக்கு ஒரு தொகுதிய ஒதுக்கிட்டு, 38 தொகுதியில உன் கட்சி நின்னுச்சு. ஆனா.. ஒரு இடத்துல கூட ஜெயிக்கல. இதுனால திமுகவுக்கு லாபம்; அதிமுகவுக்கு நஷ்டம்.  

 

இனியும், தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகணும்னு கனவு காணாத. மொதல்ல அந்த நெனப்ப தூக்கி குப்பையில போடு. ‘234 தொகுதிலயும் போட்டியிடுவோம். என் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளைக் கூட்டணில சேர்த்துக்கிறேன். நான்காவது அணி அமைக்கப்போறேன்’னு வீரவசனம் பேசுறத நிறுத்து. இப்பவாச்சும் சொல்லுறதக் கேளு. எம்.பி. எலக்ஷன்ல உன் கட்சி முப்பதாயிரத்துக்கு மேல ஓட்டு வாங்கின தொகுதிகள் எத்தனை இருக்குன்னு பார்த்து, அதுல 50 தொகுதிகளை மட்டும் செலக்ட் பண்ணி வேட்பாளர்களை நிறுத்து. அதுவும் நல்ல வேட்பாளரா.. ஊருக்குள்ள நல்ல பேரு வாங்கியிருக்கிற ஆளைப் பார்த்து நிறுத்து. வேற எந்த ஆணியும் நீ பிடுங்க வேணாம்.’ என்று கூற, பவ்வியமாகத் தலையாட்டிவிட்டுச் சென்றாராம் டிடிவி.தினகரன். 

 

சித்தியின் பாசத்துக்கும் ஆலோசனைக்கும் எந்த அளவுக்கு மதிப்பளிக்கப் போகிறாரோ தினகரன்? 

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.