Skip to main content

எவ்வளவு சமைத்தீர்கள். எத்தனை பேர் வந்து சாப்பிட்டார்கள்... அம்மா உணவகத்தில் இப்படியா? அதிர வைத்த ரிப்போர்ட்!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

தமிழகத்தில் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட சென்னையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், அத்தியாவசிய உணவுத் தேவைக்காக அல்லல்படும் மக்களுக்காக அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவித்தது தமிழக அரசு.

மேலும், சென்னையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, சென்னை மாநகராட்சி மூலமாக கிருமிநாசினி தெளித்தல், தங்கு தடையில்லாமல் தண்ணீர் வழங்குதல், தெருக்களைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

admk



ஒருவேளை உணவிற்கே வழியில்லாத ஆதரவற்றோர், வெளிமாநிலத்தில் இருந்து வேலைதேடி வந்து திரும்பிச் செல்ல வழியில்லாமல் தவிப்போர் என அனைவருக்கும் அம்மா உணவகமே கதி என்ற நிலையில், பல இடங்களில் அம்மா உணவங்கள் சரிவர இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

admk



தமிழகம் முழுவதும் மொத்தமாக 654 அம்மா உணவகங்கள் இயங்குகின்றன. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டுமே 407 உணவகங்கள் இருக்கின்றன. அரசு பொது மருத்துவமனைகளிலும், மற்ற பிரதான இடங்களிலும் இயங்கிவரும் இந்த உணவகங் களுக்கு ஆகும் செலவும் 2013 முதல் 2019 வரை நூறு கோடி ரூபாயைத் தாண்டுகிறது. ஆனால், வரவோ 60 கோடி ரூபாய்தான். இருப்பினும், ஏழை மக்களின் துயர் தீர்க்கும் திட்டம் என்பதால், நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் 2019-20 ஆண்டிற்காக 12.7 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியது தமிழக அரசு.

இதில் காலை 7 மணிமுதல் 10 மணிவரை இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது. மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை விதவிதமான சாத வகைகள் ஐந்து ரூபாய்க்கும், மூன்று ரூபாய்க்கும் கிடைக்கிறது. இரவில் இரண்டு சப்பாத்திகள் மூன்று ரூபாய்க்கும் கிடைப்பதால், பலரும் பயனடைகின்றனர். ஆனால், இந்தப் பயன் எல்லா அம்மா உணவகங்களிலும் கிடைப்பதில்லை.

 

admk



சென்னையில் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள அம்மா உணவகத்தில் சமையல் செய்யும் பெண்களுக்கு, இந்த கொரோனா காலத்திலும் கையுறைகளோ, முகக் கவசமோ கொடுக்கப்படவில்லை. அதிகாரிகள் அதையெல்லாம் தருவதில்லை என்று அங்கு பணிபுரியும் பெண்கள் தெரிவித்தனர். அதேபோல், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் இரவு ஒன்பது மணிவரை கொடுக்கவேண்டிய உணவு, மாலை 6.30 மணிக்கே முடிந்துவிட்டது என்று அறிவித்துவிட்டார்கள். பசியோடு அங்கு வந்த சிறுவர்கள், இதைக்கேட்டு வாடிய முகத்துடன் திரும்பிச் சென்றனர். இதுபற்றி அங்கு பணிபுரிகிறவர்களிடம் கேட்டபோது, நூறு சப்பாத்தி தான் போட்டோம். அதுவும் சீக்கிரமே காலியாகிவிட்டது என்றனர்.


முதன்முதலில் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட சாந்தோம் பகுதியில், தற்போதுள்ள அமைச்சர் ஜெயக்குமாரின் வீட்டிற்கு முன்பாக இருக்கும் அம்மா உணவகம், மாலை 7 மணிக்கே மூடப்பட்டு இருந்தது. அங்குவந்த சுபாஷ் என்பவர், எப்போ திறப்பாங்க, மூடிட்டுப் போவாங்கன்னு யாருக்குமே தெரியாது சார். கேட்டா காலியிகிடுச்சு அவ்வளவுதான்னு அசால்டா சொல்லிடுவாங்க. நாங்க என்ன செய்ய முடியும் என்றார் பரிதாபமாக.

சுபாஷிடம் நாம் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென காரில் வந்த ஒருவர் உள்ளே சென்று விசாரித்தார். நாமும் பேச்சை நிறுத்துவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது, அவர்களை லெஃப்ட், ரைட் வாங்கிக் கொண்டிருந்தார். எவ்வளவு சமைத்தீர்கள். எத்தனை பேர் வந்து சாப்பிட்டார்கள் என கேள்விகளை அவர் அடுக்கிக்கொண்டே போனபோது, பேச முடியாமல் திகைத்து நின்றனர் பணியாளர்கள் கண்ணியம்மாளும், தனஜா குமாரியும். பிறகுதான், காரில் வந்தவர் இந்தப் பகுதியின் ஆர்.ஐ. அமுதா என்பதும், இந்த உணவகத்தில் இது தொடர்கதையாக இருப்பதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுவதால் விசாரிக்க வந்ததும் தெரியவந்தது.


மனிதாபிமான அடிப்படையில் எளியோரின் பசியாற்றும் இந்தத் திட்டத்தில் இத்தனை மோசடிகள் மண்டிக் கிடப்பதா என்ற கேள்வியை சமூக ஆர்வலர் பூவுலகின் சுந்தரராஜனிடம் முன்வைத்தோம்& நகர்ப்புறத்தில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய உணவு ஆதாரம் அம்மா உணவகம். கொரோனா போன்ற பேரிடர் சமயத்தில்தான், அம்மா உணவகங்களின் முக்கியத்துவம் பலருக்கும் தெரியவருகிறது. இந்தமாதிரி சமயத்தில் கூட, சரிசவர செயல்படாமல் இருந்தால் அது தவறு. சென்னை செண்ட்ரலில் தவித்திருந்த வெளிமாநிலத்தவர்களுக்கு சிந்தாதிரிப் பேட்டை சமுதாயக்கூடத்தில் தஞ்சம் கொடுத்த தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். அதேபோல், அம்மா உணவகத்தையும் உரிய பாதுகாப்புடன் முன்னெடுப்பது அரசின் கடமை என்று வலியுறுத்துகிறார்.

 

 

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.