Skip to main content

அமித்ஷா நினைத்தால் பயங்கரவாதி முத்திரை குத்தமுடியும்!

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் (உபா) செய்யப்பட்டுள்ள திருத்தத்தை வைத்து, மத்திய உள்துறை அமைச்சர் நினைத்தால் எந்த ஒரு தனிநபரையும் பயங்கரவாதி என்று முத்திரை குத்திவிடலாம். அவர் எந்தக் கோர்ட்டுக்கும் அப்பீல் செய்ய முடியாது.
 

AMITS

 

 

இந்தச் சட்டத்தின்படி பாதுகாப்பு நிறுவனங்கள் யாரை பரிந்துரைக்கிறதோ அவரை பயங்கரவாதி என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒப்புக்கொண்டு கையெழுத்து இட வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட நபர் உள்துறை அமைச்சகத்துக்கு அப்பீல் செய்யலாம். அந்த அப்பீல் மீது 45 நாட்களில் அமைச்சகம் முடிவு செய்யும்.
 

அதிலும் அவர் மீதான முத்திரை களையப்படாவிட்டால், மத்திய உள்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற அல்லது பணியிலிருக்கிற மூன்று நீதிபதிகள் கொண்ட கமிட்டி முன் அப்பீல் செய்யலாமாம்.
 

அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் தீர்வு என்ன என்பதோ, பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட நபருக்கு என்ன தண்டனை, எத்தனை ஆண்டு சிறைவாசம் என்பதெல்லாம் முடிவு செய்யப்படாத விஷயங்களாக இருக்கின்றன.
 

பல்வேறு நாடுகளில் உள்ள சட்டங்களின் அடிப்படையில்தான் இந்தச் சட்டதிருத்தம் செய்யப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதி என்று அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா.விடம் இந்தியா முறையிட்டபோது, இந்தியாவில் ஏன் அவரை பயங்கரவாதி என்று அறிவிக்காமல் இருக்கிறீர்கள் என்று அதிகாரிகள் கேட்டார்களாம். அதன் விளைவாகத்தான் இந்தச் சட்டத்திருத்தமாம். இந்தச் சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் முதலில் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்படப் போகிறவர்கள் மசூத் அசாரும், லஸ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீதும்தான் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
 

அவர்கள் இப்படிக் கூறினாலும், பாஜகவுக்கு எதிரான சக்தி வாய்ந்த பிரச்சாரகர் யாராக இருந்தாலும் அவர்கள் அச்சுறுத்த அமித் ஷாவும் பாஜகவும் இந்த சட்டத்தை பயன்படுத்துவார்கள் என்பதே அரசு சொல்ல வரும் சேதி என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
 

குஜராத்தில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய ஹர்திக் படேல் போன்றவர்கள் தேசப்பாதுக்காப்புச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதே அமித் ஷா, மோடி ஆகியோரின் நடவடிக்கைகளுக்கு உதாரணம் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
 

அமித் ஷாவின் கடந்த கால கிரிமினல் நடவடிக்கைகள், அவர் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ய அவர் மேற்கொண்ட வழிமுறைகள் ஆகியவற்றையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

 

 

Next Story

அமித்ஷாவின் சொத்து மதிப்பு?; வெளியான விவரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Published details Amit Shah's net worth

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, நேற்று தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதில், முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. குஜராத் மாநிலம், காந்தி நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். அதன்படி, அமித்ஷா தனது வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் செய்த வேட்புமனுவில் அவருடைய சொத்து மதிப்புடைய பிரமாண பத்திரமும் இணைக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. 

அமித்ஷாவின் பிரமாண பத்திரத்தில், அவருக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகள், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமித்ஷாவின் ஆண்டு வருமானம் 2022 - 23 ரூ.75.09 லட்சம் எனவும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்; மேற்குவங்கத்தில் என்.ஐ.ஏ. அதிரடி!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
benagaluru hotel incident at west bengal nia

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மூன்று மாநிலங்களில் உள்ள பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அகமது தாஹா ஆகியோரின் புகைப்படத்தையும், இவர்கள் இருவர் பற்றிய தொடர்புடைய முழு விபரங்களையும் என்.ஐ.ஏ. வெளியிட்டிருந்தது. அதில் இவர்கள் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. அதே சமயம் சந்தேகத்தின் பேரில் பாஜக பிரமுகர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். 

benagaluru hotel incident at west bengal nia

இது குறித்து தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் தெரிவிக்க விரும்புபவர்கள் info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 08029510900, 8904241100 என்ற தொலைபேசி எண்களுக்கோ தெரிவிக்கலாம் என என்.ஐ.ஏ. தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளான முஷாவீர் ஹுசைன் ஜாகிர், அப்துல் மதீன் அஹமத் தாஹா ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் கைது செய்துள்ளனர். பெங்களூரு ராமேஸ்வரம் உணவக குண்டு வெடிப்பு சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.