Skip to main content

பரவுகிறது போராட்ட நெருப்பு! - ஸ்டெர்லைட்டை எதிர்த்து அமெரிக்க நகரங்களில் பேரணி 

Published on 31/03/2018 | Edited on 01/04/2018

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையால், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நோய்கள், பாதிப்புகள் ஏற்படுவதாலும், சுற்றுச் சூழல் சீர்கேடு உண்டாவதாலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணியை கைவிடக் கோரியும், ஏற்கனவே இயங்கும் ஆலையை முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டுமென்றும் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 

தொடர்ந்து 48 நாட்களாக போராடி வரும் குமரெட்டியாபுரம் கிராம மக்கள், ஸ்டெர்லைட் ஆலை கழிவு புகையால் ஒவ்வொரு குடும்பத்திலும் உடல்நல பாதிப்புகள் இருப்பதாகவும் அந்த ஆலையை மூடும் வரை தங்களது போராட்டம் தொடருமென்றும் உறுதியாகக் கூறியுள்ளனர். தூத்துக்குடியில் போராடி வரும் மக்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும்  அரசியல் தலைவர்களும் வந்து தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றனர். 

இப்படி மக்கள் போராட்டமாக மாறியுள்ள ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க வாழ் தமிழர்கள், ஒரு படி மேலே சென்று மிகப்பெரிய அமைதிப் பேரணி ஒன்றை ஒருங்கிணைத்துள்ளனர். ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று அமெரிக்காவின்  நியூயார்க், வாஷிங்டன், டல்லாஸ், அட்லாண்டா, சிகாகோ, ஹுஸ்டன், பாஸ்டன், மாரிஸ்வில், நெவார்க்   உள்ளிட்ட நகரங்களில் இந்த அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது. மார்ச் 31 அன்று இவர்களது ஒருங்கிணைப்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது. மேலும், வரும் ஏப்ரல் 8 அன்று நியூ ஜெர்சி நகரிலும் கனடா நாட்டில் டொரண்டோ நகரிலும் பேரணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இத்தனை நகரங்களில் இவ்வளவு பெரிய அளவில் பேரணி நடப்பது இதுவே முதல் முறை. தமிழ்நாட்டில் தமிழர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் அனைத்துக்கும் தாங்கள் கைகொடுப்பது மட்டுமல்லாமல் களத்திலும் இறங்குவோம் என்று காட்டியிருக்கின்றனர் அமெரிக்க வாழ் தமிழர்கள்.
 

america rally sterlite



இதற்கு முன், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும், ஒகி புயலில் மீனவர் தேடுதல் பணி,  நிவாரணம் ஆகியவற்றை வலியுறுத்தியும் இவர்கள் போராடி உள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து, அப்பொழுது சுஷ்மா சுவராஜ் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை சந்திப்புக்கு வந்த பொழுது போராடியுள்ளனர். சம்பிரதாயமான போராட்டமாக இல்லாமல், தொடர்ந்து தூத்துக்குடி மக்களுடன் தொடர்பிலிருந்து இங்குள்ள நிலவரத்தைக் கேட்டறிந்து அதற்கேற்ப போராட்டங்களை வடிவமைக்கின்றனர்.

பேரணி ஒருங்கிணைப்பாளார்களில் ஒருவரான துரைக்கண்ணனிடம் நாம் பேசிய போது, "இது, எந்த ஒரு இயக்கமோ, சங்கமோ ஏற்பாடு செய்ததல்ல. உள்ளுணர்வினால், தமிழ் பற்றினால் தன்னெழுச்சியாகக் கூடிய கூட்டம். ஏனெனில், தமிழகத்தில் வாழும் எங்கள் உறவுகளுக்கு ஒரு பிரச்சனையென்றால் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் நாங்கள் கை கொடுப்போம், எங்களால் முடிந்த பங்களிப்பை செய்வோம். அதை குறிப்பதுதான் இந்தப் பேரணி. சமூக ஊடகங்கள், தொலைபேசி வாயிலாக ஒருங்கிணைத்து அமைதி முறையில் எங்கள் ஆதரவை தூத்துக்குடி மக்களுக்கு தெரிவிக்கவுள்ளோம். இதன் தொடர்ச்சியாக பல நிகழ்வுகளை இங்கும் தமிழ்நாட்டிலும்  நடத்துவோம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்" என்று கூறினார்.    

 

neet protest in USA



மேலும், www.facebook.com/pg/bansterlitenrisupport/events என்ற ஃபேஸ்புக் பக்கத்தின் வழியாகவும் #BanSterlite #SterliteProtest #StandForThoothukudi ஆகிய ட்விட்டர் ஹேஷ் டேக்குகள் வழியாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒருங்கிணைக்கிறார்கள் இவர்கள். எத்தனையாயிரம் மைல்கள் தாண்டியிருந்தாலும் ரத்தத்தில் தமிழுணர்வும், தமிழ் மக்கள் மீதான பாசமும் குறையாமல் களமிறங்கியிருக்கிறார்கள் அமெரிக்கா வாழ் தமிழர்கள்.        

        

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.