Skip to main content

'முதல்வரின் பேரன்கள் எங்கு படிக்கிறார்கள்..? இயக்குநர் அமீர் காட்டம்..!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

புதிய கல்விக்கொள்கை பற்றிய விவாதம் தற்போது சூடுபிடித்துள்ள நிலையில், அதுபற்றி நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். அவரின் கருத்து அரைவேக்காட்டு தனமான ஒன்று என தமிழக அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், சூர்யா வன்முறையை தூண்டி விடுகிறார் என பாஜகவினர் கொதித்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக இயக்குநர் அமீரிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

புதிய கல்வி கொள்கை தொடர்பாக தமிழகத்தில் நீண்டதொரு விவாதம் நடைபெற்று வருகிறது. இதை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. நடிகர் சூர்யா இதுதொடர்பாக கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவரின் கருத்துக்கள் வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதை பற்றிய உங்களின் பார்வை என்ன?

இந்த புதிய கல்விக் கொள்கை எந்த வகையில் புதியது என்று மத்திய அரசு தான் அனைவருக்கும் விளக்க வேண்டும். இவர்கள் ஆரம்பித்துள்ள புதிய இந்தியா, டிஜிட்டல் இந்தியா என, 'புதிய' என்ற பெயரில் ஆரம்பிக்கும் அனைத்தும் ஏற்கனவே தொடங்கப்பட்ட ஒன்றுதான். நடைமுறையில், இந்த திட்டங்களில் பின்னால் இருப்பது ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ இயக்கங்களின் கருத்துக்கள் தான். இந்த சனாதன கருத்துக்களை தமிழகத்தில் எந்த வழியிலாவது திணிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதன் மற்றொரு வடிவம் தான் இந்த புதிய கல்விக்கொள்கை. ராஜாஜி கொண்டு வந்த கல்வி திட்டத்துக்கும், இந்த புதிய கல்விக்கொள்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதனுடைய மறுவடிவமாகவே இதனை நான் பார்க்கிறேன்.

 

ameer special interview about surya issue



புதிய கல்விக்கொள்கையின் நோக்கத்தை எப்படி இதனுடன் தொடர்பு படுத்துகிறீர்கள்?

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் கல்வி நிலைமை எப்படி இருந்தது. யார் கற்றுக் கொடுப்பவர்களாக இருந்தார்கள். உயர் ஜாதியை சார்ந்தவர்கள், பார்ப்பனர்கள் இவர்கள் தான் கற்றுக்கொடுக்கும் இடத்தில் இருந்தார்கள். நீங்களோ, நானோ அந்த இடத்தில் ஒருபோதும் இருந்ததில்லை. இந்த அவலநிலையை தான் தமிழகத்தை ஆண்ட தலைவர்கள் படிப்படியாக மாற்றினார்கள். அவர்களின் அயராத முற்சியின் காரணமாக வந்தவன் தான் இந்த அமீர். ஆகையால் கல்வி அறிவே மறுக்கப்பட்ட ஒரு சமூகம், தற்போது அதில் இருந்து படிப்படியாக அடுத்தடுத்த நிலைக்கு மாறி வருகிறது. இவ்வாறு, சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, அடிமையாக வைத்துக்கொள்ளப்பட்ட சமூகமக்கள் என, அனைவருக்கும் தமிழகத்தில் தங்கு தடையின்றி கிடைத்த கல்வியின் காரணமாக அவர்கள் ஆசிரியர்களாக, பட்டதாரிகளாக, வழக்கறிஞர்களாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளனர். இந்த வளர்ச்சியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, இதனை பார்த்து அவர்கள் அச்சம் கொள்கிறார்கள். இப்போதும் நாம் கற்றுக்கொடுக்க கூடிய இடத்துக்கு வந்துவிட்டோம். இதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களின் கண்களை இந்த முன்னேற்றம் உறுத்துகிறது. முற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு இணையாக சரிக்கு சரியாக  நம் பிள்கைகள் இருக்கிறார்கள். அவர்களை எப்படி பின்னோக்கி இழுக்கலாம் என்று யோசிக்கிறார்கள். அப்படி அவர்கள் நினைத்ததன் விளைவுதான், மாணவர்கள் எளிதில் மருத்துவ படிப்புக்கு செல்லக்கூடாது என்ற நோக்கில் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதையும் மாணவர்கள் இப்போது வெற்றிகரமாக தாண்டி வருகிறார்கள். இதனால் தான் இவர்களை 12 வகுப்புக்கு கூட வர விடக்கூடாது என்று, இந்த புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இப்போது 3 வகுப்பை கூட தாண்டாமல் குழந்தைகளை பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களின் அப்பா என்ன தொழிலை பார்கிறார்களோ அதில் குழந்தைகளை தள்ளிவிட பார்க்கிறார்கள்.

இது திறனை அறிந்து கொள்வதற்கான தேர்வு என்று கூறுகிறார்களே?

முடி திருத்துதல் ஒரு நல்ல தொழில்தான். அதை அனைத்து மக்களுக்கும் கற்றுக் கொடுப்பார்களா? மலம் அள்ளுதல், குப்பைகளை அகற்றுதல், கழிவுநீர் சுத்தம் செய்தல் போன்றவை தற்போது அரசு வேலையாகத்தான் செய்யப்படுகிறது. இந்த தொழிலை எல்லாம் அனைத்து சாதி குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்பார்களா? கடந்த மூன்று தலைமுறைகளாக மட்டுமே நம் குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. அதையும் பறிக்கும் முயற்சியாகவே இதனை நான் கருதுகிறேன். இந்த கோபத்தின் வெளிப்பாடாகவே சூர்யா பேசி இருக்கிறார். அவர் பேசியதில் நூறு சதவீதம் உண்மை இருக்கிறது. ஏனெனில் அவருக்கு கல்வி சம்பந்தமான உண்மை நிலவரம் என்னை விட, உங்களையும் தாண்டி அதிகம் தெரியும். அவ்வாறு தெரிந்ததன் காரணமாகவே அந்த மேடையில் அவர் கொதித்துள்ளார். சூர்யா போன்றதொரு நடிகர், பொதுவெளியில் இந்த கல்விக்கொள்கை பற்றி பேசுகிறார் என்றால் அதற்கு பெரிய துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சல் சூர்யாவுக்கு இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக பேசும் நடிகர் சூர்யா, அவருடைய குழந்தைகளை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தானே படிக்க வைத்துள்ளார் என்று எதிர்தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்களே? 

அவருக்கு அந்த வாய்ப்பை கொடுத்துள்ளீர்கள், அவர் படிக்க வைக்கிறார். சூர்யா மட்டும் தான் அவருடைய குழந்தையை சிபிஎஸ்சி-யில் படிக்க வைக்கிறாரா? நாட்டில் உள்ள பாஜகவினருடைய குழந்தைகள் எல்லாம் எங்கு படிக்கிறார்கள். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களின் பேரன் பேத்திகள் எங்கு படிக்கிறார்கள் என்று கூறுங்கள். கல்வியை தனியாருக்கு தாரை வார்த்தது யார்? சூர்யா கொடுத்தாரா? நீங்க தானே கொடுத்தீர்கள். இவ்வளவு பேசுகிறீர்கள் நீட் தேர்வை ஏன் கோச்சிங் சென்டரில் சொல்லித் தருகிறீர்கள். பள்ளிகளில் நீட் தேர்வு கோச்சிங் சென்டர் தொடங்க வேண்டியதானே. தனியார் கோச்சிங் சென்டர்களை மூட வேண்டியது தானே. ஏன் செய்ய மறுக்கிறார்கள்.

யார் எதை பற்றி விமர்சனம் செய்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான விமர்சனம் வருகிறதே?

பணமதிப்பிழப்பு சம்பவத்தில் அரசை வாழ்த்தி பேசியபோது சூர்யா எல்லா விவரமும் தெரிந்தவர். அதுவே அரசை பற்றி எதிர்த்து பேசினால் அரைவேக்காட்டுதனம். மாகாபாரதம், கம்ப ராமாயணத்தை வாழ்த்தி பேசினால் நல்லவர், அதுவே அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டால் கெட்டவர், உங்களுக்கு என்ன தெரியும் என்று அவரை விமர்சனம் செய்வது. மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை மக்களிடம் வாக்குகளுக்காக லஞ்சமாக கொடுத்து வெற்றி பெறுவதும், அதே மக்களுக்கு தன் சொந்த பணத்தை கொடுத்து கல்வி உதவி செய்வதும் ஒன்றா? என்பதை அவர்கள்தான் தெளிவுப்படுத்த வேண்டும்.

 


 

Next Story

“எப்போது அழைத்தாலும் விசாரணைக்குத் தயார்” - அமீர்

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
ameer about producer dmk jaffer sadiq issue

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாத 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநரும் நடிகருமான அமீர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக எனது ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த 22 ஆம் தேதி நான் ‘இறைவன் மிகப் பெரியவன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால் அது கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதுமே” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் வீடியோ வெளியிட்ட அவர், “என்னுடைய இறைவன் மிகப் பெரியவன் திரைப்பட தயாரிப்பாளர் ஜாஃபர் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் தெள்ளத் தெளிவாக விளக்கிய பிறகும், என் மீது பேரன்பு கொண்ட சில ஊடகவியலாளர்களும் நண்பர்களும் சமூக வலைதளப் பக்கங்களிலும் ஊடகங்களிலும் குற்றச்செயலோடு என்னை தொடர்புப்படுத்தி வீடியோக்கள் வெளியிடுவதை பார்க்க முடிகிறது. அவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அடிப்படையாகவே மது, விபச்சாரம், வட்டி இதுபோன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தத்தையும் மார்க்கத்தையும் கும்பிடக் கூடியவன் நான். அப்படி இருக்கையில் இதுபோன்ற ஒரு குற்றச்செயலில் என்னை தொடர்புப்படுத்தி பேசுவது என்பது எனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியுமே தவிர அல்லது என் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்த முடியுமே தவிர வேற எந்த பயனையும் நீங்கள் அடைந்து விட முடியாது. நீங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறேன். இந்த சோதனையான காலகட்டத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இறைவன் மிகப் பெரியவன்” எனப் பேசியுள்ளார். 

Next Story

“ஜல்லிக்கட்டுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும்” - முதல்வருக்கு அமீர் கோரிக்கை

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
ameer request to cm stalin ragards jallikattu

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளையொட்டி தமிழகம் முழுவதும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலக அளவில் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் வழக்கம் போல் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கக் காசு, கார், பைக், பிளாஸ்டிக் பொருட்கள் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம். இது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதாவது,  “வீரர்களுக்கு உழவுத் தொழில் தொடர்பான நடவு, களை, பூச்சிக்கொல்லிகள் தெளிப்பான்,அறுவடைக்கருவிகள், மாடுகள் தந்தால் அவைகளை பயன்படுத்தியும்,வாடகைகளுக்கு விட்டும் பயன் அடைவார்கள். அவ்வீரர்களின் வாழ்க்கை முன்னேற்றம் காணும் விதமான இது போன்ற பரிசினைத் தந்து தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும்” என தமிழக அரசை கேட்டு கொண்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து, அமீரும் முதல்வர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டினை அரசுப்பணி விளையாட்டோடு சேர்க்கவும், வெற்றி பெற்ற வீரர்களுக்கு அரசுப்பணி வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக, ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்’ என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில், தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு.. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்..’என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, ஒன்றிய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாச்சார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழக அரசின் அரசுப்பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.

மேலும், மதுரை அலங்காநல்லூரிலும், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய இடங்களில் நடந்த நிகழ்வுகளிலும் வெற்றி பெற்ற வீரர்கள் அரசுப்பணி கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்த இனிய தருணத்தில் அவர்களது கோரிக்கையை தாங்கள் கனிவோடு கவனித்து ஆவண செய்யக் கேட்டுக் கொள்கிறேன். ‘தமிழர் வீரம் வீணாகாது - தமிழ்க்கூட்டம் கூடிக்கலையும் கூட்டமல்ல.!’ என்பதை உலகிற்கு சொல்லும் செய்தியாக இது அமைவதோடு, தமிழர் தம் நெடிய வரலாற்றில் தங்களது இச்செயல் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்டு வரலாற்றில் வைக்கப்படும் என்ற நம்பிக்கையோடு இக்கோரிக்கையை முன்வைக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.