Skip to main content

"விவாதங்களில் நம்பிக்கை இல்லாத பா.ஜ.க.வினர் நம்மைச் சீண்ட பார்க்கிறார்கள்" - ஆளூர் ஷாநவாஸ் பேச்சு!

Published on 22/05/2020 | Edited on 27/05/2020

 

jh


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,
 


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகின்ற நிலையில், அந்த விவாதத்தில் பேசிய ஜோதிமணி, எதிர்க்கட்சிகள் மக்களுக்கு இந்தக் கரோனா நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் பிரதமர் உள்ளிட்டவர்களைப் பொதுமக்கள் கல்லால் அடித்திருப்பார்கள் என்று பேசினார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

எட்டுவழிச்சாலை தொடர்பாக பேசிய மன்சூர் அலி கான் இந்தத் திட்டத்தை நிறைவேற்றினால் எட்டு பேரை வெட்டுவேன் என்று பேசி இருந்தார். அவர் எட்டுப்பேரை வெட்டக்கூடிய ஆளா? வன்முறையைத் தூண்டக்கூடிய வகையில் பேசினார் என்று அவரை கைது செய்தீர்கள். ஆனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமலின் நாக்கை அறுப்பேன் என்று கூறினாரே அதை எந்தப் பட்டியலில் வைப்பீர்கள். வைரமுத்துவின் தலை இந்நேரம் தரையில் உருண்டிருக்க வேண்டாமா என்று ஹெச்.ராஜா கேட்டாரே, அதை எந்தப் பட்டியலில் சேர்ப்பீர்கள். இந்துக்களைப் பற்றி இனி யாரேனும் பேசினால் அவர்களின் தலையை எடுத்து வர வேண்டும் என்று நயனார் நாகேந்திரன் பேசினாரே அதை எந்தப் பட்டியலில் சேர்க்க முடியும். 
 

 


என்னால் இது மாதிரி பெரிய பட்டியல் போட முடியும். ஆனால் அவர்கள் மீது எல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தலையை வெட்ட வேண்டும், நாக்கை அறுக்க வேண்டும் என்ற நேரடி பொருள்பட ஜோதிமணி பேசவில்லை. நாங்கள் உதவி செய்யவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் தன்னுடைய வார்த்தைகளில் வெளிப்படுத்தினார். அதை அவர் தவிர்த்திருக்கலாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஏனென்றால் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும் என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறதோ அப்படி நாம் ஆகிவிட கூடாது என்பதே நம்முடைய நிலைப்பாடு. எனென்றால் நாம் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் விரும்பவில்லை. நாம் எப்போது தவறாகப் பேசி அவர்கள் வலையில் விழுவோம் என்று காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் நாம் வலை விரித்து அவர்களை நம் வலையில் விழ வைக்க வேண்டும். 

எனென்றால் உரையாடல்களின் மீது அவர்களுக்கு எப்போதும் நம்பிக்கை இருந்தது கிடையாது. ஆனால், ஜோதிமணிக்கோ, நமக்கோ, காங்கிரஸ் தரப்புக்கோ உரையாடல்களின் மீது நம்பிக்கை இருக்கின்றது. எப்படிப்பட்ட விவாதங்களிலும் நம்முடைய கருத்தை எடுத்து வைக்கலாம் என்ற எண்ணம் உடையவர்கள். ஆனால் அவர்கள் அப்படிப்பட்டவர்களா என்றால் நிச்சயம் அப்படிப்பட்டவர்கள் இல்லை. நம்முடைய வாயில் இருந்து ஒரு வார்த்தையைப் பிடுங்கி அதை வைத்து அரசியல் செய்யப் பார்ப்பார்கள். அவர்களின் எண்ணத்திற்கு நாம் துணை போகிவிடக் கூடாது.
 

http://onelink.to/nknapp


ஜோதிமணியின் ஒரு வார்த்தை அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்த வார்த்தையை வாபஸ் வாங்கச் சொல்வதும், இல்லையென்றால் அந்த அரங்கை விட்டு வெளியேறுவது தானே ஜனநாயக முறை. அதை ஏன் அவர் செய்ய மறுத்தார். ஆனால் கரு.நாகராஜன் எந்த எல்லைக்கும் சென்றார். ஜோதிமணி அரசியல் ரீதியாக வைத்த விமர்சனத்துக்குப் பதில் சொல்லாமல் தனி மனித தாக்குதலுக்கு அவர் சென்றார். இது கண்டிக்கத்தக்க ஒன்று. இதனை பா.ஜ.க. தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது, என்றார்.

 




 

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்

Next Story

தாமரை வடிவில் அலங்காரம்; புகாரில் சிக்கிய வாக்குச்சாவடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Decoration in the shape of a lotus at the polling station

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் பாகூர் வாக்குச்சாவடியில் நுழைவு வாயிலில் தாமரை வடிவிலான அலங்காரம் செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்பொழுது அவை நீக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் பாகூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 11/23 என்ற எண் கொண்ட வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அந்த வாக்குச்சாவடியின் நுழைவு வாயிலில் பேப்பரால் செய்யப்பட்ட தாமரைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. உடனடியாக இதுகுறித்து திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டிருந்த தாமரை வடிவிலான பேப்பர் பூக்களை அகற்றினர்.