Skip to main content

யானைக்கு குரல் கொடுத்தவர்கள், இரண்டு மனித உயிர்களுக்கு குரல் கொடுத்தார்களா?? - ஆளூர் ஷாநவாஸ் கேள்வி!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

d

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக்கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர். 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ், நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

தூத்துக்குடியில் இரண்டு வணிகர்கள் சிறையில் இருக்கும்போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்கள். ஊரடங்கை மீறி கடையை நீண்ட நேரம் திறந்து வைத்திருந்ததால் அவர்களைக் கைது செய்தததாக போலிஸ் கூறுகிறது. அவர்கள் குடும்பத்தின் தரப்பில் காவலர்கள் அவர்களை முரட்டுத்தனமாக அடித்தார்கள், அதை நேரில் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள். அரசாங்கமும் இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளான காவல்துறை அதிகாரிகள் சிலரை சஸ்பெண்ட் செய்துள்ளார்கள். சிலரை பணியிடை மாற்றம் செய்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மிகவும் கண்டிக்கதக்க அரச பயங்கரவாத சம்பவம் அரங்கேறியுள்ளது. உடல்நலக்குறைவால் அவர்கள் மறைந்துள்ளார்கள் என்று போலிஸ் கூறுகிறது. இருவரும் சில மணி நேரங்களில் மரணிக்கிறார்கள் என்றால் சிறைக்குச் செல்லும் முன் மருத்துவப் பரிதோதனைக்கு அவர்களை உட்படுத்தித்தானே அவர்களை சிறையில் அடைப்பார்கள். அப்புறம் எப்படி அவர்கள் கூறும் திடீர் உடல்நலக் குறைவு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். உடல்நலக்குறைவு இருவருக்கும் ஒரே நேரத்தில் வந்துவிடுமா? இந்த சம்பவத்திற்கு பெரிய பொறுப்புகளில் இருப்பவர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததா என்றால் இதுவரை மக்களிடம் எதிர்ப்பு வந்துள்ளதே தவிர மத்திய அரசோ அல்லது அமைச்சர் பெருமக்களோ இதற்கு எவ்விதமான எதிர்வினைகளையும் ஆற்றவில்லை. 

கேரளாவில் யானை மரணம் அடைந்த சம்பவத்திற்கு ஆளும் மத்திய அரசாங்கம் துடிதுடித்து போனதே, அமைச்சர் பெருமக்கள் எல்லாம் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்களே? ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டதே, நாம் அந்த யானை பலியான சம்பவத்துக்கும் சேர்த்தே கண்டனம் தெரிவித்துள்ளோம். ஆனால் இவர்கள் மனிதர்களுக்கு ஒரு நிலைபாடு, விலங்குகளுக்கு ஒரு நிலைபாடு என்று எடுத்துள்ளார்களோ என்று சந்தேகம் எழும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் இருந்து வருகின்றது. யானைக்கு கண்டனம் தெரிவித்த குரூப் இந்த சம்பவத்திற்கு இதுவரை யாராவது கண்டம் தெரிவித்துள்ளார்களா என்றால் இல்லை. இந்த படுகொலைக்கு கூட அவர்கள் கனத்த மவுனம் காக்கிறார்கள்.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான் மீது காவலர்கள் அத்துமீறி நடந்துகொண்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியினை சேர்ந்த ஒருவர் காவலரை தாக்கினார். காவலரை தாக்குவது தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இருந்தாலும் அவர் ஒரு எதிர்வினை ஆற்றினார். அதற்கு ரஜினிகாந்த் முதலானவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். வீடியோ போட்டு இதனை தடுத்து நிறுத்த வேண்டும், தனி சட்டம் போட்டு இவர்களை அடக்க வேண்டும் என்று பல்வேறு செய்திகளை அவர்கள் பொதுவெளியில் முன்வைத்தார்கள். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள். சம்பவம் நடந்து இத்தனை நாட்கள் ஆகி ஒப்புக்கு கண்டம் தெரிவிக்கிறார்கள். நாங்கள் சாதிய படுகொலைகளுக்கு தனிச்சட்டம் வேண்டும் என்று கூறுகின்றபோது இவர்கள், போலிசாரின் நலனை பேணுகின்ற தனிச்சட்டம் வேண்டும் என்று கேட்கிறார்கள். ஏழைகளுக்கு இவர்களிடம் எப்போதுமே ஆதரவு இருக்காது" என்றார்.

 

Next Story

“பேரறிவாளன் விடுதலை; ஒன்றிய அரசுக்கு மிகப்பெரிய சாட்டையடி” - எம்.எல்.ஏ  ஆளூர் ஷாநவாஸ் 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Aloor Shanavas comment on Perarivalan release
கோப்புப் படம் 

 

“பேரறிவாளன் விடுதலையில் ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது” என்கிறார் விசிக மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஆளூர் ஷாநவாஸ்.

 

முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளூர் ஷாநவாஸ், “30 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு குறிப்பாக அற்புதம் அம்மாள் என்கிற ஒற்றை தாயின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற ஒரு மகத்தான வெற்றியாக இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். 

 

இன்னும் இதுபோன்று விடுதலை செய்யப்பட வேண்டியவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இந்த தீர்ப்பின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது. இது பேரறிவாளன் வழக்கு பேரறிவாளன் என்கிற ஒற்றை மனிதரின் விடுதலை என்று சுருக்கி பார்த்து விட முடியாத அளவிற்கு இதில் மாநில அரசினுடைய அதிகாரம் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

 

குறிப்பாக அரசியல் அமைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் மாநில அரசுக்கு முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அந்த பிரிவின் கீழ் மாநில அரசு ஒரு தீர்மானத்தை ஏற்றினாலோ, ஒரு சட்டமன்றம் கூடி முடிவு எடுத்தாலும் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுதான் அதில் இருக்கிற ஒன்று. ஆனால், அதை அவமரியாதை செய்யக்கூடிய வகையில் சட்டமன்றத்தையே அவமரியாதை செய்யக்கூடிய வகையில் தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தன்னுடைய கருத்தின் அடிப்படையில் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு இன்றைக்கு உச்சநீதிமன்றம் பதிலடி கொடுத்திருக்கிறது.

 

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; ஒன்றிய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்றெல்லாம் இதில் பந்தாடி கொண்டிருந்த, விளையாடிக்கொண்டிருந்த ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது.

 

மாநில அரசின் அதிகாரமும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது‌. ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. பேரறிவாளனும் 30 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே இது ஒரு முப்பரிமான மகிழ்ச்சியை நமக்கு தருகிறது. இதில் மிக முக்கியமாக நாம் சொல்ல வேண்டியது இவ்வளவு நாளும் நாம் சொல்லிக் கொண்டிருந்த அதே கருத்துதான், ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; மாநில அரசினுடைய முடிவை ஏற்று செயல்பட வேண்டிய இடத்தில் இருப்பவர் ஆளுநர்.


முதலமைச்சரின் மொழியில் சொல்வதென்றால் ‘ஒரு போஸ்ட்மேன்.’  அது இந்த இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அவர் போஸ்ட் மேன் தான். நம்முடைய சட்டமன்றம் தான் உயர்வானது, மதிப்பானது, அதிகாரம் மிக்கது என்பது மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது" என்றார்.

 

 

Next Story

'டீ செலவு மிச்சமா? டீசல் செலவு மிச்சமா?'- சூடு குறையாத தேநீர் விருந்து புறக்கணிப்பு விவகாரம்!

Published on 15/04/2022 | Edited on 19/04/2022

 

Is the cost of tea left over? Is diesel left over? '- Neglected tea party!

 

நீட் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் அனுமதியளிக்காததால் சட்டமன்றத்தின் மாண்பையும் தமிழக மக்களையும் மதிக்கவில்லை என்று கூறி தமிழக அரசு ஆளுநர் கொடுத்திருந்த தேநீர் விருந்தை புறக்கணித்திருந்தது. நேற்று ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''முதல்வரின் பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகும் ஆளுநர் தற்போது வரை நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு பதிலளிக்கவில்லை. தற்போது வரை ஆளுநர் இது குறித்து எந்தவித உத்தரவாதத்தையும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே ஆளுநர் கொடுக்க இருக்கும் தேநீர் விருந்து நிகழ்விலும், பாரதியார் சிலை நிகழ்விலும் தமிழக அரசு பங்கேற்காது'' என விளக்கியிருந்தார்.

 

Is the cost of tea left over? Is diesel left over? '- Neglected tea party!

 

நேற்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை ''தமிழக அரசு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்ததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். இதனால் மக்கள் வரிப்பணம் கொஞ்சம் சேவ் ஆகிறது என்றார்.

 

Is the cost of tea left over? Is diesel left over? '- Neglected tea party!

 

அண்ணாமலையின் இந்தக் கருத்துக்கு டிவிட்டர் வாயிலாக பதிலளித்துள்ள விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் 'டீ செலவு மிச்சமா? டீசல் செலவு மிச்சம் என பதிவிட்டுள்ளார். அதேபோல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், 'இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள் ஆளூர் ஷா நவாஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னதுபோல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்' தெரிவித்துள்ளார்.