Skip to main content

பிசிசிஐ-யில் பதவியில் இருக்கும் அமித்ஷா மகன் டெண்டுல்கருடன் கிரிக்கெட் விளையாடியவரா..? -ஆளூர் ஷாநவாஸ் கேள்வி

Published on 26/11/2020 | Edited on 26/11/2020
gj

 

 

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில்ல தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக ஆளும் மற்றும் எதிர்க்கட்சியினர் தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில் ஆச்சர்யமாக அதிமுக, பாஜக கூட்டணி தற்போது உறுதியாகியுள்ளது. தமிழகம் வந்த அமித்ஷா இதனை உறுதி செய்துள்ளார். இதற்கிடையே திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை உதயநிதியை வைத்து ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில், அமித்ஷாவின் வரவு தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா, திமுகவுக்கு அது நெருக்கடியை கொடுக்குமா? போன்ற பல்வேறு கேள்விகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷாநவாஸிடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

தமிழக அரசியல் களம் தேர்தலுக்கு தயாரான ஒரு சூழ்நிலையை நாம் பார்க்கிறோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து சென்றுள்ளார். அதிமுக பாஜக கூட்டணி உறுதி ஆகியுள்ளது. இது வெற்றி கூட்டணி என இரண்டு கட்சிகளும் கூறியுள்ளன. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அதிமுக பாஜக கூட்டணி எங்களுக்கு சவால் என்ற பேச்சு எழுவதற்கே வாய்ப்பில்லை. அது எங்களுக்கு வசதியாகத்தான் இருக்கும். அவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை எழுப்புவதற்கும், அவர்களை களத்தில் வீழ்த்துவதற்கும் இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இது வெற்றி கூட்டணி என்று அவர்கள் கூறலாம். எங்களுக்கு வெற்றியை ஏற்படுத்த அமைக்கப்பட்ட கூட்டணி என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் அது எங்களுக்கு வெற்றியை கொடுத்துள்ளது. எனவே அவர்கள் இணைந்து தேர்தலை சந்திக்கும்போது எங்களுக்கு வெற்றியை தட்டுவதில் எவ்வித இடைஞ்சலையும் அவர்கள் கொடுக்க போவதில்லை என்பது நூறு சதவீதம் நிஜம்.

 

நாடாளுமன்ற தேர்தலை போல் சட்டமன்ற தேர்தலையும் நினைக்கிறீர்களா?

 

மத்திய அரசின் நிலைபாட்டில் என்ன மாற்றம் வந்திருக்கிறது. அப்போது எப்படி ஏதேச்சதிகாரத்தோடு இருந்தார்களோ அதைபோலத்தான் தற்போது இருக்கிறார்கள். தமிழக அமைச்சரவை கூடி தமிழ்நாட்டுக்கு இதெல்லாம் தேவை என்று கூறி மசோதாவை அனுப்பினால் அதை தூக்கில் குப்பையில் போடுகிறார்கள். தமிழகத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இந்த நிலையில் அவர்கள் எந்த அடிப்படையில் வாக்கு கேட்க தமிழகம் வருவார்கள் என்று தெரியவல்லை. அவர்கள் இதற்கெல்லாம் அச்சப்பட மாட்டார்கள். தேர்தல் களத்திற்கு வருவார்கள், ஆனால் அங்கு தோல்வியை சந்தித்துவிட்டு செல்வார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

 

ஆனால் அதிகாரத்தில் இருக்கும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு அனைத்தும் கிடைக்கிறது என்று கூறி இருக்கிறார்களே? 

 

அவர்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைக்கிறது. மக்களுக்கு என்ன கிடைத்துள்ளது என்ற கேள்வி இயல்பாகவே எழும் இல்லையா? மக்களுக்கு தேவையான எதையும் இந்த இரண்டு கட்சிகளும் இதுவரை செய்யவில்லை. எனவே அவர்கள் மக்களை சந்திப்பதில் தோல்வியை பெற உள்ளனர். இருவருக்கும் தேவையானதை இதுவரை மத்திய அரசு இணக்கமாக செய்து வருகிறது. அமைச்சர்கள் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் அடுத்த கட்ட விசாரணைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களும் அவர்களின் சகாக்களும் மத்திய அரசினால் நல்ல பலன்களை இதுவரை அடைந்துள்ளனர். 

 

சேகர் ரெட்டி விவகாரம் ஊத்தி மூடப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு என்ன ஆனது என்பது பற்றி யாருக்காவது தெரியுமா? எனவே மத்திய அரசு இவர்களின் நலனுக்கான அரசாக தொடர்ந்து உள்ளது. தமிழகம் கேட்பதை எதையும் அவர்கள் தரவில்லை. நீட் விலக்கு கேட்டோம், ஏழு தமிழர் விடுதலை கேட்டோம், கொடுக்கவில்லை. ஆனால் அண்ணா பல்கலை சிறப்பு அந்தஸ்து வேண்டி யாராவது போராட்டம் செய்தோமா?  அதை எதற்கு கேட்காமலே தர முயல்கிறார்கள். 

 

எதிர்கட்சியாக இருக்கும் போதே திமுக பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த காரணமாக இருந்திருக்கிறது என்கிறீர்கள், ஆனால் வெற்றிபெற்று அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசு மாறபோவதில்லையே? 

 

திமுக கூட்டணி சொல்வதைத்தானே தமிழக அரசு ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. எந்த திட்டங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் எங்களின் அழுத்தம் நிச்சயம் இருக்கும். மக்கள் பாஜகவுக்கு 100 வருடத்துக்கு ஆட்சியை பட்டா போட்டா கொடுத்துள்ளார்கள். மக்களின் முடிவுக்கு ஏற்ப இந்த ஆட்சி நிச்சயம் மாறும்.

 

ஊழல் அரசு என்று காங்கிரஸ் திமுக கூட்டணியை மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சனம் செய்துள்ளாரே? 

 

அதை இவர் எங்கே நின்று சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். ஊழல் செய்து தண்டனை பெற்ற ஒரு கட்சியின் முன்னிலையில் நின்று சொல்கிறார். அவருக்கு பக்கத்தில் ஓபிஎஸ் நிற்கிறார். அவருடைய மகன் நாடாளுமன்ற உறுப்பினர். இந்த நிலையில் அவர் வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்று கூறுகிறார். அவருடைய மகன் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பதவியில் இருக்கிறாரே அவர் என்ன சச்சின் கூட கிரிக்கெட் ஆடியவரா? அவர் எப்படி அந்த இடத்திற்கு சென்றார். எனவே அமித்ஷாவின் வாதம் அவருக்குத்தான் சரியாக இருக்கும் என்பதே எங்களுடைய கருத்தாகும்.

 

 

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.