Skip to main content

"பகவத் கீதை தெற்கே வரும்போது திருக்குறள் ஏன் வடக்கே செல்லவில்லை.." - ஆளுர் ஷானவாஸ் ஆவேசம்!

Published on 08/11/2019 | Edited on 08/11/2019

திருக்குறள் தொடர்பான விவாதங்கள் கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக திருவள்ளுவருக்கு காவி உடையை அணிவிப்பது, அவரின் சிலைக்கு மை அடிப்பது, சிலையை சேதப்படுத்துவது என்று தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசிகவை சேர்ந்து ஆளூர் ஷானவாஸ் தெரிவித்த கருத்துகளை காண்போம். இதோ அவரின் அதிரடி பேட்டி,

திருவள்ளுவர் படத்துக்கு காவி உடை அணிவித்து, ருத்ராட்சை மாலை அணிவித்து இந்துத்துவ வாதி திருவள்ளுவர், இந்துமதம் சார்ந்த கருத்துக்களை பரப்பினார் என்று தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பாஜக திருவள்ளுவரை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது?

திருவள்ளுவரை கொண்டாடுவது என்றால் என்ன? திருவள்ளுவரை எப்படி எல்லாம் கொண்டாடினார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களுக்கு தெரிந்த கொண்டாட்டங்களை சொல்லுங்கள். கொண்டாடுவது என்றால் என்ன? உங்களை உங்கள் நிறுவனத்தின் தலைவர் கொண்டாடுகிறார் எனறால், வெறும் வாய் பேச்சில் மட்டும் அது இருந்துவிட்டு, உங்களுக்கான ஊதியத்தை தரவில்லை என்றால், அதற்கு பெயர் கொண்டாட்டமா? இதை போன்றதே பாஜகவின் திருக்குறள் பாசம். உலகம் முழுவதும் பிரதமர் போகிறாரே, அங்குள்ள பல்கலை கழங்களில் பேசி திருக்குறளை ஒரு பாடத்திட்டமாக வைக்க ஏதேனும் முயற்சியில் ஈடுபட்டாரா? அப்படியான தகவல் இதுவரை உங்களுக்கு தெரிந்து வந்துள்ளதா? எங்கள் நாட்டில் எந்த மதத்தையும் சாராத, எந்த சாதியையும் குறிக்காத ஒரு நீதிநெறி நூல் இருக்கிறது. அதனை நீங்கள் பாடத்திட்டமாக வைத்து பயன்பெறுங்கள் என்று அவர் ஏன் கூறவில்லை. உலகத்தில் இருக்கும் எல்லா நாட்டிற்கும் பிரதமர் சென்றுவிட்டாரே! அவரை யார் அதற்கான முயற்சி எடுக்க வேண்டாம் என்று கூறியது. வெளிநாட்டுக்கு செல்லும் இடங்களில் இரண்டு திருக்குறளை சொல்வதினால் திருக்குறளுக்கு உரிமை கோரலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவ்வாறு தமிழர்களை ஏமாற்ற முடியாது.

திருக்குறள் மீது இவ்வளவு பாசம் இருப்பதாக கூறும் அவர்கள், ஹார்வேடு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு உதவி செய்தார்களா? சமஸ்கிருதத்துக்கு பல இருக்கைகள் இருக்கும் போது, தமிழுக்கு ஒரு இருக்கையாவது வேண்டும் என்று தமிழகம் அதற்கான பணிகளில், நிதி வசூலில் ஈடுபட்ட போது அதற்கு மத்திய அரசு ஆதரவை வழங்கியதா? குறிப்பாக தமிழகம் முழுவதும் அந்த இருக்கைக்காக ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று வசூல் செய்தார்கள். தமிழக அரசு தன் பங்கிற்கு நிதி அளித்தும் அந்த நிதியை பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கு மத்திய அரசு எப்படி எல்லாம் இடையூறு செய்தது என்பது அனைவருக்கும் தெரியும். அமைச்சர் மாஃபா பாண்டியரஜனை கேட்டால் அதுக்குறித்து முழு விவரத்தையும் சொல்வார். ஆனால் இப்போது கூறுவாறா என்று தெரியவில்லை.  ஆனால், திருக்குறளின் பெருமையை யார் வேண்டுமானாலும் பேசலாம் என்கிறார். ஹார்வேடு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைவதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் நிதி அளித்தது. பாஜக அப்போது என்ன சொன்னது தெரியுமா? இப்போது தெலுங்கானா ஆளுநராக இருக்கின்ற தமிழிசை என்ன சொன்னார் தெரியுமா?  அந்த இருக்கை அமைவதற்கு பாஜக நிதி அளிக்காது என்று தெரிவித்தார். அவர்கள் திருக்குறளின் பெருமையை உலகுக்கு எடுத்துக்கூற இதுவரை எந்த ஆக்க பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை. அதனை மறைக்கவே இப்போது அதுக்குறித்து இல்லாத பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.
 

df



இவர்கள் திருவள்ளுவருக்கு என்ன அடையாளம் கொடுக்க முயல்கிறார்கள். வைணவ அடையாளம் கொடுக்க முயல்கிறார்கள். இந்து தத்துவஞானி, இந்துத்துவ கருத்துக்களை திருவள்ளுவர் பேசியதாக அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். இந்து என்பதும், வைணவம் என்பதும் எத்தனை ஆண்டுகாலமாக இந்தியாவில் இருக்கிறது. ஒரு இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் என்று வைத்துக்கொள்வோம். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் எந்த வைணவ மடம் திருக்குறளை ஏற்றுக்கொண்டது. திருவள்ளுவரின் புகழை பரப்பியது. அப்படி ஏதேனும் தகவல் இருக்கிறதா? பகவத் கீதை ஒரு வைணவ நூல். அதை தமிழகம் வரை கொண்டு சேர்க்க அவர்களால் முடிந்துள்ளது என்றால், திருக்குறள் ஏன் வடக்கே செல்லவில்லை. அவர்கள் வட மாநிலங்களில் அதன் புகழை பரப்ப வேண்டியதானே. அவர்களை யாரேனும் தடுத்தார்களா? தலைநகரில் வள்ளுவருக்கு சிலை இருக்கிறதா? அவர்கள் ஆளும் மாநிலங்களிலாவது அவருக்கு சிலை அமைத்துள்ளார்களா? அல்லது அந்த மாநிலங்களில் உள்ள பல்கலை கழகங்களில் உள்ள பாடத்திட்டத்தில் ஆவது திருக்குறள் இருக்கிறதா? அப்படி எந்த தகவலாவது அவர்களிடம் இருந்தால் அதனை வெளியிட வேண்டியதானே?  அவர்கள் இவ்வளவு நாள் என்ன செய்தார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் வயது நூறு. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அதிகாரத்தில் வந்துவிட்டார்கள் தானே? அப்புறம் என்ன, பகவத் கீதை மாதிரி திருக்குறளை வடபுலங்களில் கொண்டு சேர்ந்திருக்க வேண்டியதானே?

திருக்குறள் வைணவ நூலாக அவர்கள் சொல்வது போல இருந்திருந்தால் காஞ்சி சங்கரமடம் அதை ஏற்றுக்கொண்டிருக்குமே? சங்ராச்சாரியார்கள் அதனை ஆதரிப்பார்களா? திருக்குறளை வைணவ நூலாக உரிமை கொண்டாடும் நீங்கள் இதனை ஏன் செய்ய மாட்டேன் என்கிறீர்கள். குமரியில் விவேகானந்தருக்கு சிலை வைக்க ஆர்எஸ்எஸ் உதவி செய்யவில்லையா? திருவள்ளுவருக்கு குமரியில் சிலைவைக்க ஐம்பது ஆண்டுகள் கலைஞர் போராடினார். திராவிட ஆட்சியாளர்கள் வந்தபிறகே திருக்குறளுக்கான அங்கீகாரம் கிடைக்க பெற்றது. ஆகையால் இப்போது இவர்கள் மேற்கொள்ளும் நாடகம் எல்லாம் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது. திருக்குறளை ஆயுதமாக்கி தமிழகத்தில் கால் பதிக்கலாம் என்று அவர்கள் நினைப்பார்களே என்றால் ஏமாறுவது அவர்களாகத்தான் இருக்கும்.

 

 

 

Next Story

திருவள்ளுவர் நாள் விழா‌‌ கொண்டாட்டம்!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Thiruvalluvar day celebration in Sivagangai!

சிவகங்கையில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டம் முதலாம் ஆண்டு திருவள்ளுவர் நாள் விழாவைக் கொண்டாடியது. கருத்தரங்கம், வாழ்த்தரங்கம், கவியரங்கம் என மூன்று அரங்கமாக இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது. நிகழ்வின் தொடக்கமாக உலகத்திருக்குறள் கூட்டமைப்பினர் திருவள்ளுவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.

விழாவிற்கு வந்தோரை மு.சகுபர் நிசா பேகம்  வரவேற்றார், தேசிய நல்லாசிரியர் செ. கண்ணப்பன் தலைமை வகித்தார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சிவகங்கை மாவட்டத் தலைவர் சோ.சுந்தர மாணிக்கம், துணைத் தலைவர் மு.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்குறளை வாழ்வியலாக கொண்டு திருக்குறள் பரப்பும் பெரும் பணியை செய்து வரும் கல்லலைச் சேர்ந்த திருக்குறள் பரப்புநர் சி.முத்தையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மன்னர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் சிவகங்கை தொல்நடைக் குழு தலைவருமான நா. சுந்தரராஜன், சிவகங்கை அரிமா சங்கத் தலைவர் க.முத்துக்குமரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (ஓய்வு) இளங்கோவன், கலைமகள் ஓவியப்பள்ளி ஓவியர் நா.முத்துக்கிருஷ்ணன், சிவகங்கை மூத்த வழக்கறிஞர் மு. இராம் பிரபாகர், நல்லாசிரியர் பா.முத்துக்காமாட்சி, மருத்துவத்துறை கண்காணிப்பாளர் இரமேஷ் கண்ணன், ( jci )உலக இளையோர் கூட்டமைப்பு செயலர் ஹரிஹரசுதன் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். உலகத் திருக்குறள் கூட்டமைப்பு மண்டல பொறுப்பாளர் புலவர் மாமணி ஆறு. மெய்யாண்டவர், க.கீர்த்திவர்சினி, கா.நனி இளங்கதிர், ப.யோகவர்ஷினி, க.முத்துலட்சுமி ஆகியோர் குறளால் பாராட்டு செய்யப்பட்டனர்.

‘வள்ளுவத்தைப் பாடுவோம்’ எனும் பொதுத் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது, இக்கவியரங்கத்திற்கு புலவர் கா.காளிராசா தலைமையேற்று தலைமைக் கவிதை பாடி வழி நடத்தினார். ‘உடுக்கை இழந்தவன் கை போலே’ எனும் தலைப்பில் முனைவர் உஷா, ‘அன்பின் வழியது உயிர்நிலை’ எனும் தலைப்பில் கவிஞர் பீ. பி.எஸ் எட்வின், ‘அறிவு அற்றம் காக்கும் கருவி’ எனும் தலைப்பில் முனைவர் இரா.வனிதா, ‘எண்னென்ப ஏனை எழுத்தென்ப’ எனும்  தலைப்பில் ஆசிரியர் மாலா, ‘உறங்குவது போலும் சாக்காடு’ எனும் தலைப்பில் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ், ‘ஈதல் இசைபட வாழ்தல்’ என்னும் தலைப்பில் கவிஞர் சரண்யா செந்தில், ‘யான் நோக்கும் காலை நிலன்நோக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் அகமது திப்பு சுல்தான், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்ற தலைப்பில் கவிஞர் பிரீத்தி அங்கயற் கண்ணி ஆகியோர்கவிதை பாடினர்.

ஆசிரியர் ந. இந்திரா காந்தி, செல்வி கா.நவ்வி இளங்கொடி  நிகழ்வை தொகுத்து வழங்கினர். அரிமா முத்துப்பாண்டியன், லோபமித்ரா, மகேந்திரன்,அந்தோணி பிரான்சிஸ் ஜெயப்பிரியா ஆகியோர் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டனர். தவழும் மாற்றுத்திறனாளிகள் தாய் இல்ல ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இரமண விகாஸ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், பாரதி இசைக் கல்விக் கழக யுவராஜ், தமிழாசிரியர் அயோத்தி கண்ணன் போன்றோர் நிகழ்வில் கலந்து கொண்டனர், இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை புலவர் கா. காளிராசா செய்திருந்தார்,இந்நிகழ்வின் இறுதியில் ஆசிரியர் வே.மாரியப்பன் நன்றியுரைத்தார்.

Next Story

'மும்மொழி கொள்கையே திணிப்புதான்'-கவிஞர் வைரமுத்து கருத்து

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
'Three-language policy is an imposition'-poet Vairamuthu interviewed

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. இதனிடையே, மாட்டுப் பொங்கல் தினமான இன்று திருவள்ளுவர் தினமும் அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 'இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக் கூடாது' என ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை பெசன்ட் நகர் மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவிஞர் வைரமுத்து, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திருவள்ளுவர் தமிழர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். மும்மொழி கொள்கை என்பதே திணிப்புதான் என தமிழர்கள் கருதுகின்றனர். அதனாலேயே இந்தி மொழி திணிப்பை வேண்டாம் என்று கூறுகிறோம். மும்மொழி கொள்கை என்பது திணிப்பு என்பது தமிழர்களின் தீர்க்கமான எண்ணம். இந்தி மொழி மீது எங்களுக்கு என்ன வெறுப்பா. இல்லை. இந்தி மொழி கூடாது என்று நாங்கள் கொடிபிடிக்கிறோம் என்றால் இந்தி மொழியின் திணிப்பு கூடாது என்று நாங்கள் உறுதிபட சொல்கிறோம். இந்தி மொழியின் திணிப்பு எதிர்ப்பதைத்தான் தமிழர்கள் காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள்'' என்றார்.