Skip to main content

2 வருடங்கள் ஆகப்போகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை... சொன்னதும்.. நடந்ததும்..

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நேரம் 8மணி. இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறி நடப்பில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை தடைசெய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை ஒரு தரப்பினர் ஆதரித்தனர், ஒரு தரப்பினர் எதிர்த்தனர். ஆனால் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட சில நாட்களில் அதை ஆதரித்த மக்களில் சிலரே தீவிரமாக எதிர்க்க தொடங்கினர். இதற்கு காரணம் திட்டம் அமலுக்கு வந்த விதம் தான்.

 

nn

 

பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களின் மீது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகப்போகின்றன. அதன் தாக்கமோ இன்னும் அடங்கியபாடில்லை. அந்த திட்டத்திற்கு கூறப்பட்ட இலக்குகள் மற்றும் பொதுவாக பொருளாதாரம் மீதான அதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை மதிப்பிடுவது அவசியமான ஒன்று.

 

கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியை பா.ஜ.க. கருப்பு பண எதிர்ப்பு நாளாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரலாற்றின் கருப்பு நாளாகவும் அனுசரித்தன. வழக்கம்போல அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. சற்று ஆராய்ந்து பார்த்தால் இந்த திட்டம் ஒரு வகையில் நன்மையையும், மற்றொரு வகையில் மிகப்பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கருப்பு பண ஒழிப்பு, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரித்தல், ஊழலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கை, பயங்கரவாத கும்பலிடம் நடமாடும் கள்ளப்பணத்தை தடுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என பல மிகபெரிய நோக்கங்களுடன் அமலுக்கு வந்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. குறிப்பிட்ட அனைத்து நோக்கங்களும் முழுமையாக வெற்றிபெறவில்லை. இருப்பினும் அரசாங்க அறிக்கைகளின்படி, வரி கட்டாமல் பணத்தை பதுக்கி வைத்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைக்கப்பட்டுள்ளதாகவும். வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வருடாந்திர அதிகரிப்பை விட 80% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பொருளாதார மந்தநிலைக்கு பணமதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி.யும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. 2017-ல் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 5.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்த நிலையில், பொருளாதார மந்த நிலை உண்மையில் புறக்கணிக்கப்படவில்லை. 2017-18ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7% ஆக குறைந்துள்ளது. 

 

nn

 

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கல் பணமதிப்பிழப்பின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. அந்த முயற்சி ஓரளவு வெற்றி கண்டுள்ளது. பல அத்தியாவசிய பொருட்களை வாங்கும் இடங்களில் டிஜிட்டல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. பெரும்பாலானோர் வேறுவழியின்றி டிஜிட்டல் பரிமாற்றங்களை நோக்கி திரும்பினர். ஆனால் டிஜிட்டல் பரிமாற்றங்களில் பல முறைகேடுகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது போல இது பல இடங்களில் சட்டபூர்வ கொள்ளைக்கு வழிவகுத்துள்ளது. 

 


இன்று முறைப்படுத்தப்படாத நிறுவனங்களில் செல்லாகாசு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த நிறுவனங்களில் 90% நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாத நிறுவனங்கள் என்பதும், 10% நிறுவனங்கள் மட்டுமே முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வேலையின்மை, மந்தமான தொழில் என்று சிறு, குறு தொழில் நிறுவனங்களை வெகுவாக பாதித்துள்ளது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. 

 


பெருமளவில் கருப்பு பணம் பிடிபடும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் 99% அளவிலான பணம் மீண்டும் வங்கிக்கு வந்தது. இது அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கள்ள பணம் ஒழியும், ஊழல் அகற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவும் என்று காரணம் சொல்லப்பட்டது. நாளுக்கு நாள் கள்ள நோட்டுகள் பிடிக்கபடுகினறன, ஊழல் குறைந்ததாக எந்த புள்ளிவிவரமும் சொல்ல வில்லை. 

 

பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்பு, நடுத்தர, சிறு மற்றும் நுண் நிறுவனங்கள் ஆகியவற்றில் செல்லாகாசு பெரும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் சாதித்தது சில; ஆனால் சோதித்தது பல. ஒரு திட்டத்தினை அமல்படுத்துவதற்கு முன்னர் அதனுடைய விளைவுகளை அலசி ஆராய்ந்து அமல்படுத்துவது அவசியம் என்பதை இந்த திட்டம் எடுத்துக் காட்டியுள்ளது. மக்களுக்கு நன்மை புரியும் அனைத்து நிகழ்வுகளும் பாராட்டத் தக்கவையே. ஆனால் எந்த மாதிரி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அரசு செயல்படுவதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.

 

 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.