Skip to main content

ரவுடிகளையும் கொலைகாரர்களையும் பா.ஜ.க.வில் சேர்த்துட்டாங்க! -போட்டுத் தாக்கும் ராமசுப்பிரமணியம்

Published on 03/07/2021 | Edited on 03/07/2021
ddd


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர பற்றாளரும், பா.ஜ.க. ஆதர வாளருமான ஊடகப் பிரபலம் இராம சுப்பிரமணியம், பா.ஜ.க.வை ஆதரித்துப் பேசுவதோடு... தவறான செயல்பாடு களை விமர்சிக்கவும் தயங்கியதில்லை. அதேபோல எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், சரியான செயல்களைப் பாராட்டவும் செய்வார். அவரிடம், தமிழக பா.ஜ.க.வின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள், புதிதாக அமைந்துள்ள தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.

 

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான நீங்கள், தற்போதுள்ள தமிழக பா.ஜ.க.வின் செயல்பாடுகளையும், இவர்கள்மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுப்பப்படுவதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?

 


நான் பா.ஜ.க.வில் தற்போது இல்லா விட்டாலும்கூட அந்த கட்சி நன்றாக வரவேண்டுமென்று விரும்பக்கூடிய ஆள். பல ஆண்டுகளாக அந்த கட்சியில் பயணித்தவன் நான். எனவே அந்த கட்சி இங்கே வளர்ந்ததென்றால் நான் ரொம்பவே சந்தோசப்படுவேன். தற்போது பா.ஜ.க.வில் உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காக, அவர்களின் பின்புலம் என்னவென்றே தெரியாமல் அனைவரையும் கட்சியில் சேர்ப்பது கட்சிக்கு நல்ல தல்ல. இதுகுறித்து நான் ரொம்ப நாட்களாக சொல்லிக்கொண்டிருக்கிறேன். அதிலும் குறிப்பாக, ரவுடிகளையும், காலிப்பயல்களையும், கொலைகாரர் களையும் அந்த கட்சியில் சேர்த்துட்டாங்க. இது மிகப்பெரிய பிரச்சனையை உருவாக்கும்னு முன்னயே எனக்குத் தெரியும். இதனை பல்வேறு ஊடகங்களில் விவாதங்களின்போது நான் பதிவு செய்திருக்கிறேன்.

 

தற்போது தமிழக பா.ஜ.க. மீதான பாலியல் குற்றச்சாட்டெல்லாம் உண்மையா, பொய்யா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இதெல்லாம் கேட்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. முன்பெல்லாம் பா.ஜ.க.வில் சேருபவர்களின் பின்புலத்தை விசாரித்தபின்னர் தான் சேர்ப்பாங்க. இப்போதெல்லாம் கமலாலயத்தினுள் சேர்ப்பதற்கு இதெல்லாம் விசாரிப்பதேயில்லை. இத்தகைய நடவடிக்கைகள்தான் குற்றச்சாட்டுகள் எழுவதற்கு காரணமாகிறது. இப்படியான நிலை துரதிர்ஷ்டமானது. இதைச் சரிசெய்யாமல் விட்டால் கட்சிக்கு கெட்ட பெயர்தான் வரும்.

 

நடந்துமுடிந்த தேர்தலில் தமிழக பா.ஜ.க.வில் 4 பேர் வெற்றி பெற்றதற்கு கட்சித்தலைவர் முருகனின் செயல்பாடும், அவர் நடத்திய வேல் யாத்திரையும் காரணமாக இருக்குமா?

 

தற்போது 4 பேர் வெற்றி பெற்றிருப்பதற்கு அ.தி.மு.க.வின் ஆதரவு மட்டுமே காரணம். தமிழக பா.ஜ.க.வின் பிரமாதமான வளர்ச்சியால்தான் இந்த வெற்றி என்று அவர்கள் நம்பி னார்கள் என்றால், அது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம். முருகன் நடத்திய வேல் யாத்திரை, பா.ஜ.க.வுக்கு பெயிலியர் யாத்திரை என்று தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டே வருகிறேன். இது மக்கள் மத்தியில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. இதையேதான் உறுதிப் படுத்துவதுபோல, பா.ஜ.க.வின் தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவியும் ஒரு பேட்டியில் "இந்த வேல் யாத்திரை எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை' என்றே கூறியிருந்தார். அந்த கட்சி, மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை கையிலெடுத்து, அதைச் சரிசெய்யப் போராடினால் தான் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அதை விட்டுவிட்டு, குறுக்கு வழியில் நாம பெரியாளாகி விட்டோம் என்று, ஒரு கும்பலைச் சேர்ந்துக்கொண்டு, அந்த கும்பலால் ஜெயித்து விடுவோம் என்று நினைத்தால், ஒரு தோல்விக்குப் பிறகு அனைவருமே காக்கா கூட்டம்போல ஓடி விடுவார்கள். வாஜ்பாய் தலை மையில் 1998-ம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது பலரும் பா.ஜ.க.வில் போட்டிபோட்டுக்கொண்டு இணைந்தார்கள். 2004-ம் ஆண்டு ஆட்சி பறிபோனதும் அனைவரும் அப்படியே விலகிவிட்டார்கள். அதுபோல தேர்தலுக்கு முன்பாக, கட்சிக்கொள்கை என்னவென்றே தெரியாத சினிமாக்காரர்கள் பலரையும் சேர்த்தார்கள். அவர்களெல்லாம் இப்போது என்ன ஆனார்களென்றே யாருக்கும் தெரியவில்லை.

 

ஹெச்.ராஜா மீது, தேர்தலுக்காகக் கொடுத்த கட்சிப்பணத்தில் 4 கோடி ரூபாயை தனது வீடு கட்டுவதற்காகப் பயன்படுத்திக்கொண்டதாக குற்றச்சாட்டு பா.ஜ.க.வினராலேயே வைக்கப்பட்டு, அவரது தொகுதி பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளார்களே?

 

இது குறித்தெல்லாம் எனக்கு சரியாகத் தெரியாது சார். ஆனால் தேர்தலுக்காக கட்சி மேலிடத்திலிருந்து பா.ஜ.க. வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் 13 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.வீ.சேகர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால், ஹெச்.ராஜா மீது சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டைக் கேட்கும்போது வருத்தமாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை அவர்மீதான குற்றச்சாட்டை நம்ப முடியாது. அவரும், அவரது அப்பாவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலேயே பயணித்தவர்கள். பி.ஜே.பி. மீதும் பற்றுக்கொண்டவர். அவருக்கு சொத்து சுகத்துக்கு குறைவேயில்லை. எனவே அவர்கள் இந்த அளவுக்கு கீழ்த்தரமாகவெல்லாம் செய்யமாட்டார்கள் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ddd

தமிழ்நாடு அரசு தற்போது அமைத்துள்ள உயர்மட்ட பொருளாதார ஆலோசனைக்குழு குறித்து உங்களுடைய கருத்து?

 

இப்படியொரு குழு அமைத்திருப்பது, இந்தியா வுக்கே முன்னோடியான செயல். இந்தியாவையே தமிழ்நாட்டை நோக்கித் திரும்பிப்பார்க்கும் விதமாகத் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறார்கள். இந்தக் குழுவின் தலைவரான ரகுராம் ராஜன், நிதியை எப்படிக் கையாளுவது என்பதில் நன்கு அனுபவப்பட்டவர். பொருளாதார ஆலோசகராகவெல்லாம் இருந்திருக் கிறார். வருவாயை எப்படி அதிகப்படுத்துவது, ஒன்றிய அரசிடமிருந்து நமக்கான வருவாயை எந்தெந்த வழிகளிலெல்லாம் அதிகரிக்கலாம் என்பது குறித்தெல்லாம் இவரால் சொல்ல முடியும். அடுத்த உறுப்பினரான அரவிந்த் சுப்பிரமணியமும் இதை யெல்லாம் செய்ய முடியும். அடுத்ததாக, நாராயணன், நிதித்துறையில் இருந்தவர். அவருக்கும் மத்திய மாநில அரசுகள் தொடர்பான அனைத்து நெளிவுசுழிவுகளும் தெரியும். எனவே அவரது நியமனமும் மிகச்சரியானது.

 

அடுத்ததாக எஸ்தர் டப்லோ என்ற பெண்மணி, ஏழ்மை ஒழிப்பு என்பதில் தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து பங்காற்றிவருபவர். பொருளா தாரத்தில் நோபல் பரிசு வென்றவர். அவரும் அவரது கணவர் அபிஜித் பானர்ஜியும் இணைந்து தான், கொரோனா லாக்டௌனால் பாதிக்கப்பட்டவர்களின் கைக்கே பணத்தைச் சென்றடையச் செய்ய வேண்டுமென ஒன்றிய அரசுக்கு ஆலோசனை கூறினார்கள். அது நல்ல யோசனை. வறுமையில் சிக்கியவர்களுக்கு எதையெதையோ கொடுப்பதற்குப் பதில் நேரடி யாகப் பணமாக அளிப்பது பய னுள்ளதாக இருக் கும். இதுபோன்று, அடிமட்ட மக்களுக்காக இறங்கிவந்து குரல் கொடுத்தவர் அவர். ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள ஜீன் த்ரே, கொரோனாவால் நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின்மூலம் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர். காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த மிக நல்ல திட்டம் அது. நம்நாட்டில் மிகப்பெரிய வன்முறை, பிரச்சனைகள் இல்லாமல் இருக்கின்றதென்றால் அதற்கான காரணம், அனைவருக்கும் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் கிடைப்பதாகும். எனவே, இந்த ஐவர் குழு மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளது. இவர்களுக்கு அடுத்ததாக, பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் தலைமையிலும் ஒரு குழு அமைத்திருக்கிறார்கள். அந்த குழுவோடு இவர்கள் எந்த வகையில் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்பது போகப்போகத் தெரியும்.

-தெ.சு.கவுதமன்

 

 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது