Skip to main content

அஜித் திராவிட முன்னேற்ற கழகம் - அ.தி.மு.க.வில் பரபரப்பு 

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும். அடுத்த முறை உங்களை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
 

இதையடுத்து பொதுக்குழுவில் கலந்து கொண்ட நிர்வாகிகள், தங்களது பகுதிகளுக்கு சென்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

 

ajith



இந்தநிலையில் மதுரை மாநகரில் அதிமுகவைச் சேர்ந்த ரைட் சுரேஷ், பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அந்தப் போஸ்டரில் தான் மதுரை மாநகர் மேயர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தன்னை தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க. (அஜித் திராவிட முன்னேற்ற கழகம்) எனவும், அஜித் மற்றும் எம்.ஜி.ஆர். படங்களையும் போட்டுள்ளார்.


 

 

இதுதொடர்பாக நாம் அவரிடம் பேசினோம். அப்போது அவர், ''ஆமாங்க. அடுத்து தமிழகத்தின் முதல்வர் அஜித்தான். ஏன் அஜித் அரசியலுக்கு வர மாட்டாரா? தல அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக திகழ மாட்டாரா? திரை உலகின் அதிசய நாயகன் தல அரசியலுக்கு வர கூடாதா? நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று  எங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் இராஜேந்திர பாலாஜி சொல்லிருக்காரு கேட்டீங்களா?  இனி அதிமுக என்றாலே அஜித் திமுக தான். பெயர் கூட பொறுத்தமாக இருக்குல. எம்.ஜி.ஆர். போட்டோவையும் போஸ்டரில் வைத்திருக்கிறேன். ஜெயலலிதாவுக்கும் அஜீத்தை பிடிக்கும். அஜீத் பிறந்தநாளுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அதிமுகவுக்கும் அஜீத்துக்கும் தொடர்பு ஏற்படும்'' என்று புது பீதியை கிளப்பி உள்ளார்.


 

 

பொதுக்குழுவில் கலந்து கொண்ட மதுரைச் சேர்ந்தவர்களோ, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற உழையுங்கள் என்று கூறினார்கள். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை முன்னிலைப்படுத்தி தேர்தல் பணிகளை கவனியுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு மரியாதை கூடும் என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால் இவரோ நடிகர் அஜீத் படத்தை போட்டு ஓட்டு கேட்கிறார். இப்படியே விட்டால் அதிமுகவில் உள்ளவர்கள் அவரவர்களுக்கு பிடித்த நடிகரை போட்டு ஓட்டு கேட்பார்கள். இப்படி இருந்தால் குழப்பம்தானே வரும். இதுகுறித்து கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதுவோம் என்றனர். 
 

 

 

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.