Skip to main content

அஜித் திராவிட முன்னேற்ற கழகம் - அ.தி.மு.க.வில் பரபரப்பு 

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர், உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஒற்றுமையாக இருந்து உழைக்க வேண்டும். அடுத்த முறை உங்களை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களாக பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
 

இதையடுத்து பொதுக்குழுவில் கலந்து கொண்ட நிர்வாகிகள், தங்களது பகுதிகளுக்கு சென்று உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

 

ajith



இந்தநிலையில் மதுரை மாநகரில் அதிமுகவைச் சேர்ந்த ரைட் சுரேஷ், பரபரப்பு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளார். அந்தப் போஸ்டரில் தான் மதுரை மாநகர் மேயர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும், தன்னை தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அ.தி.மு.க. (அஜித் திராவிட முன்னேற்ற கழகம்) எனவும், அஜித் மற்றும் எம்.ஜி.ஆர். படங்களையும் போட்டுள்ளார்.


 

 

இதுதொடர்பாக நாம் அவரிடம் பேசினோம். அப்போது அவர், ''ஆமாங்க. அடுத்து தமிழகத்தின் முதல்வர் அஜித்தான். ஏன் அஜித் அரசியலுக்கு வர மாட்டாரா? தல அரசியலுக்கு வந்தால் முன்னோடியாக திகழ மாட்டாரா? திரை உலகின் அதிசய நாயகன் தல அரசியலுக்கு வர கூடாதா? நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்று  எங்கள் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் இராஜேந்திர பாலாஜி சொல்லிருக்காரு கேட்டீங்களா?  இனி அதிமுக என்றாலே அஜித் திமுக தான். பெயர் கூட பொறுத்தமாக இருக்குல. எம்.ஜி.ஆர். போட்டோவையும் போஸ்டரில் வைத்திருக்கிறேன். ஜெயலலிதாவுக்கும் அஜீத்தை பிடிக்கும். அஜீத் பிறந்தநாளுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார். அதிமுகவுக்கும் அஜீத்துக்கும் தொடர்பு ஏற்படும்'' என்று புது பீதியை கிளப்பி உள்ளார்.


 

 

பொதுக்குழுவில் கலந்து கொண்ட மதுரைச் சேர்ந்தவர்களோ, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற உழையுங்கள் என்று கூறினார்கள். மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை முன்னிலைப்படுத்தி தேர்தல் பணிகளை கவனியுங்கள். அப்போதுதான் அவர்களுக்கு மரியாதை கூடும் என்று சொல்லி அனுப்பினார்கள். ஆனால் இவரோ நடிகர் அஜீத் படத்தை போட்டு ஓட்டு கேட்கிறார். இப்படியே விட்டால் அதிமுகவில் உள்ளவர்கள் அவரவர்களுக்கு பிடித்த நடிகரை போட்டு ஓட்டு கேட்பார்கள். இப்படி இருந்தால் குழப்பம்தானே வரும். இதுகுறித்து கட்சி மேலிடத்திற்கு கடிதம் எழுதுவோம் என்றனர். 
 

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.