Skip to main content

5 லட்சம் பேர் பலி! எப்படி சுவாசிக்கிறார்கள்? உச்சநீதிமன்றத்தின் கவலையும், அதிர்ச்சியும்

Published on 15/11/2019 | Edited on 15/11/2019

 

 

d

 

‘’எப்படி சுவாசிக்கிறார்கள்?’என்று கவலையும், அதிர்ச்சியும் கலந்து கேட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

 

உலகம் முழுவதிலும் காற்று மாசுபாடு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில்,   டெல்லியை கடந்த ஒரு மாதமாக அச்சுறுத்தி வருகிறது காற்று மாசு. டெல்லியில் காற்றுமாசு குறியீட்டு எண் 600 ஆக அதிகரித்துவிட்டதை சுட்டிக்காட்டி, காற்று மாசு மிகவும் மோசமாக உள்ள டெல்லியில் மக்கள்  எப்படி சுவாசிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம். மேலும், டெல்லி நகரம் முழுவதும் காற்றை தூய்மைப்படுத்தும் கருவிகளை நிறுவ திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில்,  காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகள் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்ற ஆய்வறிக்கை அதிரவைக்கிறது.   லான்செட்  அமைப்பு வெளியிட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில், 5 லட்சம் பேரில் 97 ஆயிரம் பேர் நிலக்கரி புகையினால் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளது. 

d

 

காற்று மாசுவினால் கடந்த 2017ம் ஆண்டில் உலக அளவில் 6 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தனர் என்றும், இந்தியாவில் ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்றும் உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு அதிர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டது.  உலகில் 93 சதவிகித குழந்தைகள் மாசுள்ள காற்றை சுவாசிக்கின்றனர் என்றும்,  காற்று மாசுக்கு பெரியவர்களை விட குழந்தைகளே அதிகம் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். வளர்ந்த நாடுகளில் 52 சதவிகித குழந்தைகள் காற்று மாசுவினால் பாதிக்கப்படுவதாகவும்,   இந்தியாவில் 98 சதவிகித குழந்தைகள் தூய்மையற்ற காற்றை சுவாசித்து அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  வீடு மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்பட்டும் வரும் காற்று மாசுபாடே உயிரிழப்புகளுக்கு காரணம் என்றும், உலகம் முழுவதிலும்  நச்சுக்காற்றினால் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்தது.  

 

d

 

மேலும், நைட்ரஜன் ஆக்சைடு வாயுவை வெளியிடும் உலகின் மூன்று பகுதிகள் இந்தியாவில் உள்ளது என்றும், இதன் காரணமாக கடந்த 2017ம் ஆண்டில் 1,17,788 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், என்றும் இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்து கிரீன் பீஸ் அமைப்பும் கடந்த ஆண்டு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 உலக அளவில் காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் குர்கான் நகரம் முதலிடத்தில் உள்ளது என்றும், உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட 10 நகரங்களில் 7 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்றும் மேலும் சில ஆய்வறிக்கைகள் அதிரவைக்கின்றன.  

 

Next Story

போகி கொண்டாட்டம்; புகை மண்டலமாக மாறிய சென்னை

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
Chennai turns into a smoke zone due to bhogi celebrations

‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் இன்று போகி கொண்டாடப்படுகிறது. தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது.

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருவிழாவின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது போகி. கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை ஜனவரி 13 அல்லது 14 ஆம் நாளில் கொண்டாடப்படும்.  அந்த வகையில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழ்நாடு முழுவதும் போகி கொண்டாடப்படுகிறது. 

சென்னையில் மக்கள் அதிகாலையிலேயே எழுந்து உற்சாகமாக மேள தாளங்களை முழங்கிக் கொண்டு பழைய பொருட்களைத் தீயிட்டு வருகின்றனர். இதனிடையே டயர், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை எரிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. ஆனால் சில இடங்களில் அது மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டு காற்று மாசு அதிகரித்துள்ளது. மேலும் கடும் புகையினால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Next Story

சென்னையில் அபாய கட்டத்தை எட்டிய காற்று மாசு!

Published on 13/11/2023 | Edited on 13/11/2023

 

Air pollution has reached high levels in Chennai
கோப்புப்படம்

 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டியது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடினர். 

 

இதனிடையே காற்று மாசுபாடு காரணமாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நேரப்படி தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அறிவுறுத்தியிருந்தது. மேலும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காகச் சென்னை மாநகரக் காவல் ஆணையம் தனிப்படையையும் அமைத்திருந்தது. 

 

இந்த நிலையில் மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்ததன் காரணமாகச் சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்ததன் மூலம் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு அபாயகரமான சூழலை எட்டியுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 322 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகியிருக்கிறது. வேளச்சேரி - 308, அரும்பாக்கம் - 256, ஆலந்தூர் - 256, ராயபுரம் - 232 என பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200 ஐ தாண்டியுள்ளது. இதனால் அதிக பாதிப்பு மற்றும் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 141 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.