Skip to main content

மூன்று நிலைப்பாட்டில் இருக்கிறார் ஓ.பி.எஸ்.! - கே.சி.பழனிசாமி பேட்டி!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

 

சசிகலா விடுதலை, மீண்டும் ஆட்சி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசியது உள்ளிட்டவை குறித்து அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி நக்கீரன் இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். 
 

சசிகலா விடுதலையாகும் நாளில் ஜெ.நினைவகம் திறந்துள்ளார். தேர்தலில் வென்று மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்குமா? 
 

சசிகலா விடுதலை பெரிதாக வெளியே தெரியக்கூடாது என்பதற்காக ஜனவரி 27ஆம் தேதி ஜெ.நினைவிடத்தை திறந்துள்ளார். மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால், அவரே அதிமுகவை ஒன்றுபடுத்தத் தவறிவிட்டார். அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வலுப்படுத்தாமல் எப்படி அது சாத்தியமாகும். அதிமுக தொண்டனாக நான் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அதற்கு ஒருங்கிணைந்த அதிமுக வரவேண்டும் என்று நினைக்கிறேன்.

 

ஆனால், ஆட்சி மீண்டும் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. கட்சி தங்களது கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, தங்கமணி ஆகிய மூன்று பேரும் நினைக்கிறார்கள். ஆட்சி இருப்பதால் இவர்களை ஆதரிக்கிறார்கள். ஆட்சி முடிந்தவுடன் இவர்களுடன் ஒருவரும் நிற்கமாட்டார்கள். சிதறடித்துவிடுவார்கள். 

 

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என அழுத்தமாகச் சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் இந்த விஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் அமைதியாகவே இருக்கிறாரே? 

 

ஓ.பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை மூன்று நிலைப்பாட்டில் உள்ளார். அவரது பெரிய மகன் ஓ.ரவீந்திரநாத் மோடி படம் வைத்துள்ளார். இளைய மகன் ஜெயபிரதீப் சசிகலா படம் வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி உடன் உள்ளார். எல்லா இடத்திலேயேயும் துண்டு போட்டு வைத்துள்ளார். எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருக்கிறார் அவ்வளவுதான். 

 

சசிகலாவை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டிய இரண்டு பேரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்களே...

 

எம்.ஜி.ஆரை அடக்கம் செய்யும்போது அருகில் இருந்தேன். அடக்கம் செய்யும்போது ராணுவ வீரர்கள் வானை நோக்கிச் சுடுகிறார்கள். அப்போது அதிமுக தொண்டன் எம்.ஜி.ஆரின் உடலை நோக்கி ஓடி வருகிறான். கடல் அலைபோல ஓடி வருகிறான். அதிமுககாரன் இதற்கெல்லாம் பயப்படமாட்டான். எத்தனை பேரை நீக்குவார்கள். 

 

சசிகலா விடுதலையாகிவிட்டார். அதிமுகவில் மாற்றம் வருமா?

 

நான் சசிகலா பலமானவரா, எடப்பாடி பழனிசாமி பலமானவரா எனப் பார்க்கவில்லை. எல்லோரும் ஒன்றுதான். என்னைப்போல், எம்ஜிஆர் காலத்தில் இருந்து கட்சியில் இருந்தவர்கள் அனைவரும் நினைப்பது ஒன்றுபட்ட அதிமுக தேவை என்பதுதான். ஒரு அதிமுக தொண்டனை கூட இழந்துவிடக் கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நினைத்தார்கள். அதிமுகவை ஒன்றுபடுத்த தவறினால் தேர்தலில் கடினமான சூழலைச் சந்திக்க வேண்டிவரும். 

 

cnc

 

ஆட்சியில் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி சொல்வதைக் கேட்கிறார்கள். ஆட்சியில் இல்லாதபோது, 4 ஆண்டு கால ஆட்சியில் நடந்தவை பற்றி வழக்குகள் தொடர்கிறபோது, எடப்பாடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் தனித்துவிடப்படுவார்கள். தேர்தலுக்குப் பிறகு ஒன்றுபட்ட அதிமுக உருவாகும். இவ்வாறு கூறினார். 


 

 

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.