Skip to main content

தெறிக்கவிடும் 30 பேர்! திணறும் எடப்பாடி!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

 

தமிழகத்தில் காலியாகும் ஆறு ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் வரும் மார்ச் 26-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 6ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 13. 

 

ops-eps



பொதுவாக,  தேர்தல் காலக்கட்டங்களில் வேட்பாளர்களை அறிவிப்பதில் அதிமுக முந்திக்கொள்ளும். ஆனால் , ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேட்பாளர்கள் தேர்வில் அதிமுக பின்தங்க, திமுக முந்திக்கொள்கிறது. அந்த வகையில்,  திமுக சார்பில் தேர்வாக இருக்கும் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகிய 3 வேட்பாளர்களின் பெயரை அறிவித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
 

ஆனால்,  அதிமுக சார்பில் தேர்வாகும் எம்பிக்களின் பெயர்கள்  அறிவிப்பில் இழுபறி நீடிக்கிறது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் அதிமுக முகாமில் பலத்த அக்கப்போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
 

 சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 3 எம்பிக்களை அதிமுக எளிதாகப் பெற  முடியும். ஆனால் , அந்த 3 சீட்டுகளுக்காக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்பிக்கள், மாவட்டச் செயலளார்கள், அணித் தலைவர்கள் என 30 பேர் சீட் கேட்டு எடப்பாடியிடம் மல்லுக்கட்டுகிறார்கள்.


 

ஒவ்வொருவரும் ஒவ்வொரு லாபியில் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். சீட்டு கேட்கும் பலருக்கு மாவட்ட எம்எல்ஏக்களின் ஆதரவும் இருக்கிறது. அதனால்,  சீட் கேட்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு லாபியை பயன்படுத்துவதும், எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக நெருக்கடி தருவதும் எடப்பாடியை கடுமையாக பாதித்திருக்கிறது.
 

இப்படிப்பட்ட நெருக்கடிகளால்,  3 வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திணறிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி. இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் உள்பட மூத்த தலைவர்களுடன் இதுவரை இரண்டு கட்ட ஆலோசனை நடத்தியுள்ளார். இரண்டு முறை ஆலோசனை நடத்தியும் இதுவரை எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை. 
 

சீட் கேட்டு நெருக்கடி கொடுக்கும் அதிமுகவினர், ராஜ்யசபா சீட் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் கட்சிக்குள் கலகத்தை உருவாக்குவோம் என்கிற தகவல்களை  கட்சிக்குள்ளேயே பரப்பி வருகிறார்கள். ராஜ்யசபா தேர்தலால்  அதிமுகவில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்தப்படியிருக்கிறது.

 

 

Next Story

இன்ஃபோசிஸ் நிறுவனரின் மனைவிக்கு எம்.பி. பதவி; பிரதமர் மோடி வாழ்த்து

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Greetings Prime Minister Modi for Infosys founder's wife gets MP post

மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்.பி.க்களின் பதவிக்கான சீட்டுகள் உள்ளன. இதில், 238 எம்.பிக்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். மீதமுள்ள 12 எம்.பி.க்கள், மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டோ அல்லது ஜனாதிபதியால் நேரடியாகவோ நியமிக்கப்படுவார்கள். இலக்கியம், கலை, அறிவியல், சமூக சேவை ஆகியவற்றில் சிறப்பாகப் பங்களிப்பு வழங்கியவர்களுக்கு ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்படும். 

அந்த வகையில், தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மாமியாருமான சுதா மூர்த்தியை மாநிலங்களவை எம்.பியாக ஜனாதிபதி திரெளபதி முர்மு நியமனம் செய்துள்ளார். 

இந்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதா மூர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இந்தியக் குடியரசுத் தலைவர், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராகப் பரிந்துரை செய்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.  சமூகப் பணி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுதா மூர்த்தியின் பங்களிப்பு மகத்தானது மற்றும் ஊக்கமளிக்கிறது. மாநிலங்களவையில் அவரது இருப்பு நமது ‘மகளிர் சக்தி’க்கு ஒரு சக்தி வாய்ந்த சான்றாகும். இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்களின் வலிமை மற்றும் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறது. அவரது பாராளுமன்ற பதவிக்காலம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார். 

1950 ஆம் ஆண்டில் கர்நாடகா மாநிலத்தில் பிறந்த சுதா மூர்த்தி, எழுத்தாளர், கல்வியாளர் என பன்முகங்களைக் கொண்டவர். எழுத்துத் துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி கடந்த 2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது. மேலும், கடந்த 2023 ஆம் ஆண்டில், சுதா மூர்த்திக்கு மத்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி கெளரவித்தது. இன்ஃபோசிஸ் அறக்கட்டளையில் முன்னாள் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுதா மூர்த்தி, உலக பணக்காரரான பில்கேட்ஸ் அறக்கட்டளையின் பொது சுகாதாரத்தில் உறுப்பினராக இருந்துள்ளார். சுதா மூர்த்தியின் மகளான அக்‌ஷதா மூர்த்தி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பதவியை ராஜினாமா செய்த ஜே.பி. நட்டா!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
JP nadda resigned from the post

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. இந்த பட்டியலில் நட்சத்திர வேட்பாளராக வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. காந்தி நகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் போட்டியிடவுள்ளார். மலையாள நடிகரும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் போட்டியிடுகிறார்.

மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகிறார். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மீண்டும் போட்டியிடுகிறார். மதுராவில், நடிகையும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவருமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடுகிறார். மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி மீண்டும் போட்டியிடுகிறார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரான சிவ்ராஜ் சிங் சவுகான் விதிஷா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கர் ஏற்றுக்கொண்டுள்ளார். இது குறித்து ராஜ்ய சபா சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜகத் பிரகாஷ் நட்டா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ராஜ்யசபா தலைவர் ஏற்றுக்கொண்டார்” என ராஜ்யசபா பொதுச் செயலாளர் பி.சி. மோடி தெரிவித்துள்ளார்.

அதே சமயம் மீதமுள்ள மக்களவைத் தொகுதிக்கான பா.ஜ.க வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில் ஜே.பி. நட்டா மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா போட்டியின்றி கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.