Skip to main content

அமைச்சர்களை எச்சரித்த இ.பி.எஸ்.! - எங்களுக்கு கவலை இல்லை! சசிகலா தரப்பு! 

Published on 12/02/2021 | Edited on 12/02/2021

 

ddd

 

பெங்களூருவில் இருந்து சசிகலா புறப்பட்டு வருவதற்கு முன்பாக ஏகப்பட்ட ஆலோசனைக் கூட்டங்கள் அவர் தங்கியிருந்த தேவனஹள்ளி பகுதியில் உள்ள ப்ரஸ்டீஜ் கெஸ்ட் ஹவுசிலும், எடப்பாடி வீடு அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலை பகுதியிலும், அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திலும், நடந்துமுடிந்தது.

 

அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் அடங்கிய கூட்டத்தைக் கூட்டினார் எடப்பாடி. அந்தக் கூட்டத்தில் உணர்ச்சிப் பிழம்பாகப் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "எந்த விலைக் கொடுத்தேனும் எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்றுவோம்" என்றார். அவைத்தலைவர் மதுசூதனன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் "சசிகலாவின் ஆதிக்கத்திற்குள் மறுபடியும் அ.தி.மு.க.ச் சென்றுவிடக்கூடாது' என முழங்கினார்கள். கூட்டத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் வரவில்லை.

 

கூட்டம் முடிந்து அமைச்சர் விஜயபாஸ்கரின் மகளின் நாட்டிய அரங்கேற்றத்திற்கு புறப்பட இருந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒரு போன் வந்தது. அதில், "சசிகலாவை 15 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்று சந்தித்திருக்கிறார்கள். அவர்களில் பலர் பெங்களூருவிலேயே தங்கியிருக்கிறார்கள்' என்கிற போனில் வந்த தகவலைக் கேட்டு, ஓ.பி.எஸ். அதிர்ச்சி அடைந் தார். உடனே, அந்த தகவல் உளவுத் துறைக்கு அனுப்பப்பட்டு எம்.எல்.ஏ.க் களின் செல்போன்கள் எங்கிருக்கிறது என லொகேஷன் ஆராயப்பட்டது.

 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு சென்று வந்ததாக, அவரது செல்போன் காட்டியது. கள்ளக்குறிச்சி பிரபு, கடலூர் மாவட்டச் சார்ந்த ஒரு எம்.எல்.ஏ., திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த ஒரு எம்.எல்.ஏ. ஆகியோரது செல்போன்கள் அணைத்துவைக்கப்பட்டிருந்தன. அதேபோல், ஈரோட்டைச் சார்ந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான ஒருவரின் செல்போனும் பெங்களூருவுக்கு பக்கத்தில் லொகேஷன் காட்டியது. அதேபோல் அமைச்சர்களின் செல்போன்களும் ஆராயப்பட்டன. அதில் திருப்பூரைச் சேர்ந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சர் செங்கோட்டையன், செல்லூர் ராஜு ஆகியோரது செல்போன்களுக்கு சசிகலா நேரடியாகப் பேசியதாக உளவுத் துறை ரிப்போர்ட் கொடுத்தது.

 

ddd

 

"எடப்பாடி பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சட்டமன்றத்தில் ஒன்பது எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன்தான் அவரது ஆட்சி நீடிக்கிறது. இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் சசிகலா பக்கம் செல்வார்களேயானால் அவரால் சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை பாஸ்செய்ய முடியாது' என்கிற நெருக்கடியான சூழ்நிலையால் அ.தி.மு.க. வட்டாரம் டென்ஷன் ஆனது. இப்படி ஒரு சூழ்நிலை உருவாகக்கூடாது என்பதற்காகத்தான் எடப்பாடி சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்களைக் கட்சியில் இருந்து நீக்கினார்.

 

ஆனால், எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவோடு தொடர்புவைத்திருக்கிறார்கள் என்கிற தகவல் எடப்பாடியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "சசிகலாவோடு தொடர்பு வைத்துக்கொண்டால் அல்லது அவரை நேரில் சென்று சந்தித்தால் கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற எச்சரிக்கை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தின் சார்பில் மறைமுக எச்சரிக்கையாகச் சொல்லப்பட்டது' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமைக் கழகம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில், 5-ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையான இளவரசி மதியம் 02:00 மணிக்கு சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதிக்கு வந்து சேர்ந்தார். அவருடன் சிறிதுநேரம் பேசியிருந்துவிட்டு, 8-ஆம் தேதி புறப்படுவதற்கான தயாரிப்பு வேலைகளில் மூழ்கினார் சசிகலா. மொத்தம் 3,000 க்கும் அதிகமான கார்களில் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என சசிகலாவின் சொந்த பந்தங்கள் சசிகலாவிடம் விவாதித்துக் கொண்டு இருந்தார்கள்.

 

சசிகலா வட்டாரத்தில் பேசும்பொழுது மொத்தம் 28 எம்.எல்.ஏ.க்கள் சசிகலா பக்கம் வருவதாக சசிகலாவிடம் உறுதியளித்துள்ளார்கள். மேலும், 22 எம்.எல்.ஏ.க்கள் வருவதாக சசிகலாவின் சொந்த பந்தங்களிடம் உறுதியளித்துள்ளார்கள். இவர்களைத் தவிர 10 அமைச்சர்கள் சசிகலாவிடம் பேசியிருக்கிறார்கள். "அ.தி.மு.க.வை கைப்பற்றுவதற்கு தயாராக எல்லா ஏற்பாடுகளையும் சசிகலா செய்து வருகிறார். எடப்பாடி சசிகலாவை ஏற்க வேண்டும். இல்லையேல் கட்சி உடையும், ஆட்சிக்கும் ஆபத்து அனைத்திற்கும் தயாராக சசிகலா தானாகவே எல்லாம் ஏற்பாடுகளையும் செய்துவருகிறார். இது பற்றி தனது சொந்த பந்தகளிடம் கூட சசிகலா விவாதிப்பதில்லை'' என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.

 

இந்நிலையில் சசிகலாவுக்கு நெருக்கமான அமைச்சர்களைக் கூப்பிட்டு எடப்பாடி திட்டியிருக்கிறார். அவர்களில் உடுமலை ராதாகிருஷ்ணனிடம், "நீங்கள் டிடிவி தினகரனுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள் என இரண்டு வருடங்களுக்கு முன்பே தெரியும். நான் உங்களை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிடுவேன். நான்கு வருட காலம் பதவியை அனுபவித்துவிட்டு, இப்பொழுது சசிகலாவுக்கு விஸ்வாசம் காட்டுகிறீர்கள்'' என எச்சரித்ததோடு, அமைச்சர்கள் சிலரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உத்தர விட்டுள்ளார். அதில் ஓ.எஸ்.மணியன், காமராஜ், கே.சி.கருப்பணன் ஆகியோரும் அடக்கம்.

 

அத்துடன். சசிகலாவுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சொத்துக் குவிப்பு வழக்கில் கையகப்படுத்திய சொத்துகள் குறித்து இதுவரை அக்கறை காட்டாத அ.தி.மு.க அரசு, திடீரென பெங்களூரு நீதிமன்றத்தில் அது குறித்து மனு செய்தது. அதனடிப்படையில், இளவரசி, சுதாகரன் ஆகியோரது சொத்துகள் அரசு சொத்தாக அறிவிக்கப்பட்டது. "இந்த வழக்கில், ஏ1 ஜெ.தான். ஏ3, ஏ4 சொத்துகள் முடக்கப்பட்டால் ஏ1 ஜெ.வின் குற்றத்தை எடப்பாடி அரசே ஏற்றுக்கொள்வதாகத்தான் அர்த்தம் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா'' என்ற அமைச்சர் சி.வி.சண்முகத்திடம், "ஜெ.வும் அப்படித்தானே'' என மீடியாக்கள் கேட்டபோது, பதில் சொல்லாமல் சென்றதும் அதே அர்த்தத்தைக் கொடுப்பதாகத் தெரிவிக்கின்றனர். சசிகலாவின் வருகையை நேரடி ஒளிபரப்பாக சில தனியார் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளனர். அதனைத் தவிர்க்கச் சொன்னதுடன், இல்லையென்றால் அரசுப் பணத்தைக் கொட்டித் தரப்படும், 'வெற்றி நடைபோடும் தமிழகம்' விளம்பரங்கள் இனி வழங்கப்படாது என முதல்வர் அலுவலகம் தொலைக்காட்சி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை செய்தது.

 

சசிகலாவின் வருகை நாளில் எடப்பாடி ஏற்கனவே திட்டமிட்டிருந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டது. இ.பி.எஸ் சசிகலா நேரடி மோதலை மறைமுகமாகக் குறிப்பிட்டு, ஓ.பி.எஸ். 7 ஆம் தேதி வெளிவந்த நாளிதழ் ஒன்றில் விளம்பரம் கொடுத் திருந்தார். "அதிகாரம் ஒருவரது கைக்குச் சென்றால் அதை அவருக்கு கொடுத்தவர் திரும்பிக்கேட்டால் யாரும் தர மாட்டார்கள். அப்படி தன்னிடம் வந்த அதிகாரத்தைக் கொடுத்தவர் திருப்பிக் கேட்டவுடன், தந்தவர் ராமனின் தம்பி பரதன். விசுவாசம் என்பதற்கு பரதனே எடுத்துக்காட்டு. அந்த பரதன் வழியில் மூன்று முறை முதல்வர் பதவியை அதைக் கொடுத்தவர்களுக்கே, விசுவாசத்துடன் திருப்பிக் கொடுத்தவர் ஓ.பி.எஸ்.' என பரதனுடன் ஓ.பி.எஸ்.ஸை ஒப்பிட்டு ஜெயலலிதா பேசிய பேச்சைக் கொடுத்திருக்கிறார் ஓ.பி.எஸ்.

 

"எடப்பாடி எத்தனை சொத்துகளை வேண்டுமானாலும் முடக்கட்டும். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை'' என்கிற சசி உறவினர்கள், "நான்கு வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா முதல் குற்றவாளியாக வருமானத்திற்கு அதிகமான சொத்துச் சேர்ப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டார். அந்த வழக்கில் போயஸ் கார்டன், ஐதராபாத் திராட்சைதோட்டம், சிறுதாவூர் பங்களா, கொடநாடு டீ எஸ்டேட் ஆகியவை இருக்கின்றன. இந்த சொத்துகள் ஜெ. வாங்கியவை. அவற்றை எடப்பாடியால் முடக்க முடியுமா? எத்தனை எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் யாரை வேண்டுமென்றாலும் கண்காணிக்கட்டும். அவர்கள் சசிகலா சென்னை வந்தபிறகு நிச்சயம், சந்திப்பார்கள்'' என சவால் விடுகிறார்கள்.
 

cnc

 

இதற்கிடையே, "சசிகலா தரப்பு தங்களது பலத்தை நிரூபிக்க கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என மத்திய அரசின் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், எங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள். சென்னைக்கு மோடி வரும்போது, சசிகலா வருகைக்குப் பிறகும், அ.தி.மு.க. ஒற்றுமையாகச் செயல்படுகிறது எனக் காட்டவிரும்புகிறார் எடப்பாடி. அதற்குள் அ.தி.மு.க.வில் தனக்கு என்ன செல்வாக்கு இருக்கிறது என சசிகலா நிரூபிக்க முயற்சிக்கிறார்.

 

ஒருவேளை சசிகலாவால் இப்பொழுது அ.தி.மு.க.வை உடைக்க முடியாமல் போகலாம். ஆனால், இறுதிவெற்றி எங்களுக்கே என்கிறார்கள்'' சசிகலாவின் உறவினர்கள்.

 

 

 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.