Skip to main content

மோடிக்காக வேலை செய்யும் அதிமுக முக்கியஸ்தர்கள்! 

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
AIADMK leaders working for Modi!

பிரதமர் நரேந்திரமோடி விசிட் பல அரசியல் திருப்பங்களை உருவாக்குமா அல்லது வழக்கம்போல பி.ஜே.பி.யினர் மட்டும் கலந்துகொள்ளும் கலகல கச்சேரி விசிட்டாக சுருங்கிப் போகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தேர்தலை ஒட்டி பா.ஜ.க.வினர் மிகவும் ஆக்டிவாக இருப்பதாக ஒரு இமேஜை தங்களது தேசியத் தலைமைக்கு சொல்லி வருகிறார்கள்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதையே ஒரு நெகட்டிவான விசயமாக தேசியத் தலைமை பார்த்துவிடக் கூடாது என்பதில் தமிழக பா.ஜ.க. உறுதியாக நிற்கிறது. அதற்காக ஏகப்பட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாததால் தமிழக பா.ஜ.க. வளர்கிறது என்பதுதான் பா.ஜ.க. உருவாக்க நினைக்கும் திட்டம். அதற்காகத்தான் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கிடைத்ததாக ஒரு கதையைக் கிளப்பி விட்டார்கள்.

அந்த ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழை வானதிக்கு கொடுத்தது பா.ஜ.க.வின் சமூக வலைத்தள பொறுப்பாளர் ஷாலு குப்தாவின் கம்பெனி. வானதி அலுவலகத்தில் 2023ஆம் ஆண்டு ஒரு நபர் மர்மமாக இறந்தார். வானதியின் உறவினரான ஏ.எம்.கே.மணிவண்ணன் என்பவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாக ஒரு புகார் எழுந்தது. இப்படி மரணம், பாலியல் தொந்தரவு என புகழ்பெற்ற வானதியின் மர்ம அலுவலகத்துக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் எப்படி வழங்கலாம் என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அந்த ஐ.எஸ்.ஓ. சான்றிதழை சபாநாயகரிடமும் பா.ஜ.க. தலைவர்களிடமும் மட்டும் காட்டி போட்டோ எடுத்துக்கொண்டார் வானதி.

AIADMK leaders working for Modi!

வானதியைப் போலவே நயினார் நாகேந்திரனும் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டார். பிரதமரின் 27ஆம் தேதி விசிட் தமிழக பா.ஜ.க.வின் "என் மண் என் மக்கள்'’ யாத்திரையோடு முடிந்துவிடக் கூடாது. தமிழகத்தின் தென் பகுதிக்கும் பிரதமர் வரவேண்டும் என அவரது தொகுதியான திருநெல்வேலிக்கு மோடி வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். நயினாரின் கோரிக்கை ஏற்கப்பட்டது. பிரதமர் 28ஆம் தேதி திருநெல்வேலிக்கு செல்கிறார். பிரதமரை வரவேற்க திருப்பூரில் நடைபெறும் கூட்டத்திற்காக கொங்கு பெல்ட் பகுதிகளில் பொதுமக்களைத் திரட்டுவதற்காக பியூஷ்கோயல் மூலம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணிக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் பொதுமக்களைத் திரட்டும் பொறுப்பு ஓ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படி அ.தி.மு.க. கூட்டணி இல்லை என்று ஆனாலும் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் நரேந்திர மோடிக்காக ஆட்களைக் கொண்டுவரும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுமட்டும் போதாதென்று அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக்கூடிய பிரபலங்களை பா.ஜ.க.வில் கொண்டுவந்து சேர்ப்பதற்கென முன்பு கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பிடித்து பணம், மற்ற பல வசதிகள் செய்து கொடுத்தது போல கோடிக்கணக்கில் பணம் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு பா.ஜ.க.வின் தேசியத் தலைமையில் இருந்தே கொடுக்கப்பட்டுள்ளது. இதை எடுத்துக்கொண்டு தமிழகம் முழுவதும் பா.ஜ.க. நிர்வாகிகள் சுற்றிவருகிறார்கள். யார், யார் எந்தக் கட்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என லிஸ்ட் தயாரிக்கப்பட்டு அந்த முக்கியஸ்தர்களுக்கு ஒரு ரேட் என கோடிக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்பட்டு வருகிறது.

AIADMK leaders working for Modi!

ஏற்கெனவே முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பதினைந்து பேரை பிடித்து வேலுமணி ஆதரவுடன் கொங்கு பெல்ட் பகுதிகளில் திரட்டப்பட்ட அந்த நபர்கள் மிகவும் வயதானவர்கள், அரசியல் செயல்பாட்டில் இல்லாதவர்கள் என கேலியும் கிண்டலும் எழுந்தது. இந்தியா முழுவதும் பா.ஜ.க.விற்கு சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும் வயதானவர்களை சேர்க்கிறார்கள் என நக்கலான விமர்சனம் எழுந்தது. அதனால் பிரதமர் முன்னிலையில் சேரும் நபர்கள் முக்கியத்துவம் வாய்ந்த நபர்களாக இருக்க வேண்டும் என்று கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்காக பிள்ளை பிடிப்பவர்களைப் போல ஒரு டீம் தமிழகம் முழுவதும் அலைந்துகொண்டிருக்கிறது. சிட்டிங் எம்.எல்.ஏ.க்களாக வருபவர்கள் கட்சித் தாவல் தடுப்புச் சட்டப்படி பதவிகளை இழக்க நேரிடும். அப்படி ஒரு நிலை வந்தால் அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பார்களோ அவ்வளவு தொகை நாங்கள் தருகிறோம் என வலை வீசப்படுகிறது. எத்தனை கோடி ஆனாலும் பரவாயில்லை, பிரதமரின் விழாவை வெற்றிகரமாக மாற்றுவோம் என தமிழகத்தில் உள்ள வி.ஐ.பி.க்களைக் குறிவைத்து அவர்களை பிரதமர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைப்போம் என தமிழக பா.ஜ.க. டீம் சூதாட்ட பாணியில் காய் நகர்த்தி வருகிறது.

இந்தத் தேடலில் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஐந்து எம்.எல்.ஏ.க்கள் சிக்கியுள்ளார்கள். அந்த ஐந்து பேரையும் பா.ஜ.க.வில் சேர்த்தால் கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் அவர்கள் மீது பாயாது. அவர்களில் ஒருவர் ஒரு மிகப்பெரிய தலைவர். இன்னொரு முக்கியத் தலைவர். தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மிகப்பெரிய தலைவரை பா.ஜ.க.வின் சட்டமன்றக் கட்சித் தலைவராகவும் அவரது விசுவாசியான தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவரை பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராகவும் கொண்டுவர ஏற்பாடுகள் நடக்கிறது. முக்கியத் தலைவரும் தஞ்சை மாவட்டத் தலைவரும் எடப்பாடிக்கு எதிரானவர்கள். பிரதமர் தனது பேச்சில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளாத எடப்பாடியையும் மறைமுகமாக விமர்சிப்பார் என்கின்றன பா.ஜ.க. வட்டாரங்கள்.

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.