Skip to main content

ஓட்டுக்காகவும் நோட்டுக்காகவும் பதவி உயர்வு! - உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அதிமுக அரசு!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

Promotion for ballot and note! - AIADMK government does not respect the Supreme Court ruling!

 

"டி.என்.பி.எஸ்.சி, டி.ஆர்.பி., எம்.ஆர்.பி உள்ளிட்ட அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் 'ரொட்டேஷன் ரோஸ்டர்' எனப்படும் இனசுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியை வழங்கக்கூடாது. இடஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில்தான் சீனியாரிட்டி வழங்கப்படவேண்டும்" என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு சமீபத்தில் கண்டனம் தெரிவித்தது உச்சநீதிமன்றம். ஆனாலும், பத்திரப் பதிவுத்துறையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி சீனியாரிட்டியை வழங்காமலேயே இன சுழற்சி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரித்திருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.   

 

தமிழக அரசு கடைப்பிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்றிதான் மதிப்பெண் அடிப்படையில் அனைத்துத் துறை அரசுப் பணிகளுக்கும் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிறகு, அதே இட ஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலைப் பின்பற்றிதான் சீனியாரிட்டி (முதுநிலைப்பட்டியல்) மற்றும் புரமோஷன் (பதவி உயர்வு) வழங்கப்படுகிறது.

 

ஆனால், பத்திரப் பதிவுத்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்று துறைகளில் மட்டுமே இட ஒதுக்கீடு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்தபிறகு அதே இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சீனியாரிட்டியை வழங்காமல், ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி முறையில் சீனியாரிட்டியை வழங்கிய பிறகுதான், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் புரமோஷன் வழங்கப்படுகிறது.

 

இதனால், இட ஒதுக்கீட்டு அடிப்படையிலேயே அதிக மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருப்பவர்கள்கூட பத்திரப் பதிவுத்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்றுதுறைகளில் மட்டும் ரொட்டேஷன் ரோஸ்டரால் சீனியாரிட்டியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறார்கள்.

 

உதாரணத்துக்கு, 2012ஆம் ஆண்டு 320 அரசு காலிப்பணியிடங்களுக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதிய 7 லட்சத்துக்கு மேற்பட்டவர்களில் இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில், முதல் ரேங்கில் பணியில் சேர்ந்த ஒருவர், ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியில் மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு பதவி உயர்வுபெறும் தகுதியை இழக்கிறார்.

 

ஆனால்,  2 லட்சத்துக்குமேற்பட்ட  ரேங்கில் இருந்தவர்  320-வது ரேங்கிற்குள் வந்து பணியில் சேர்ந்து ரொட்டேஷன் ரோஸ்டரால் சீனியாரிட்டிலியிலும் முன்னுக்கு வந்து தற்போது  பதவி உயர்வுக்கும்  தகுதி  பெற்றுவிட்டார். 

 

இதனால், இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்று பத்திரப் பதிவுத்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்றுதுறைகளில்  சீனியாரிட்டி கிடைக்காதவர்கள் ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி முறையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தொடர்ந்தார்கள். இதனை, விசாரித்த உயர்நீதிமன்றம் ரொட்டேஷன் ரோஸ்டர் எனப்படும் இன சுழற்சி பட்டியலின்படி சீனியாரிட்டி வழங்கக்கூடாது என்று 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனை, எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை, விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து ஏற்கனவே உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை 4 வாரத்திற்குள் அமல்படுத்துமாறு உத்தரவிட்டுவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்தாததால்தான் தலைமைச் செயலாளர், டி.என்.பி.எஸ்.சி.  செயலாளர், நிர்வாக சீர்திருத்தத்துறைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது நீதிமன்றம்.

 

இந்நிலையில்தான், பத்திரப்பதிவுத்துறையில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அமல்படுத்தி சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்காமலேயே இனசுழற்சியைப் பின்பற்றி உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக புரமோஷனுக்கான தற்காலிகப் பட்டியல் தயாரிக்கப்பட்டுவருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், புரமோஷனுக்கு தலா 10 லட்ச ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய்வரை பேரம் பேசப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது” என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.

 

Promotion for ballot and note! - AIADMK government does not respect the Supreme Court ruling!
                                                       ஐ.ஜி சங்கர்

 

இதுகுறித்து, பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி. சங்கரை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, “இன சுழற்சியைப் பின்பற்றி சீனியாரிட்டியை வழங்கக்கூடாது என்ற வழிமுறைகளை இன்னும் தமிழக அரசு வழங்கவில்லை. மற்ற துறைகளிலும் ஆலோசித்து வழங்கப்படும் அரசின் வழிமுறைகளுக்காகக் காத்திருக்கிறோம். 20 சதவீத எம்.பி.சி. இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் கொடுத்த உத்தரவின்படி அரசாங்கம் வழிமுறைகளைக் கொடுத்துவிட்டதால், புரமோஷன் பட்டியலை தயாரித்திருக்கிறோம். அதுவும், இது தற்காலிக புரமோஷன் பட்டியல்தான். ஒருவேளை, இன சுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியை தீர்மானிக்காமல் இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டியைப் பின் பற்றவேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசாங்கம் கொடுத்துவிட்டால் தற்காலிக புரமோஷனை திரும்பப் பெற்றுவிடுவோம் என்ற நிபந்தனைகளோடுதான் பட்டியல் தயாரிக்கப்பட்டு புரமோஷன் வழங்கப்பட இருக்கிறது” என்றவரிடம், ‘ஒரே நேரத்தில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகள் வந்துள்ளன. அதுவும், இன சுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியை வழங்கக்கூடாது என்றும் இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டியை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டதோடு, குறிப்பிட்ட காலத்திற்குள் அமல்படுத்தாத தமிழக அரசுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

 

அத்தீர்ப்பின்படி சீனியாரிட்டியைப் பின்பற்றிய பிறகு, உச்சநீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பின்படி 20 சதவீத எம்.பி.சி இட ஒதுக்கீட்டில் நிரந்தரமாகவே புரமோஷன் கொடுத்துவிட்டால் மீண்டும் குழப்பங்கள் வராதே? தற்காலிக புரமோஷன் கொடுத்துவிட்டு பிறகு, அதைப் பிடுங்கிக்கொண்டால் மீண்டும் அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படுமே, மீண்டும் குழப்பங்கள் தொடருமே?' என்று நாம் கேட்டபோது, “நீங்கள் சொல்வதுபோல் செய்வதுதான் நிரந்தரத் தீர்வு. ஆனால், வழிமுறைகள் வரும்வரை காலதாமதம் ஆகிவிடும். நான்கு மாதங்களே உள்ளன. தேர்தலும் வந்துவிடும்” என்றவரிடம், “அப்படியென்றால் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக எம்.பி.சி. மக்களை ஏமாற்றுவதுபோல் அல்லவா இருக்கிறது?” என்றபோது, “அப்படியெல்லாம் இல்லை. நாளையே, இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சீனியாரிட்டியை தீர்மானித்துவிட்டு பதவி உயர்வை வழங்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டால் அதன்படி செய்வோம். அதேபோல், 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி புரமோஷன் வழங்க எங்கள் பெயரை பயன்படுத்தி லஞ்சம் பேரம் நடத்தி வசூலிப்பது தவறு. எங்கள் துறைக்கும் வசூலுக்கு எந்த தொடர்புமில்லை” என்றார் விளக்கமாக.   

 

இன சுழற்சி அடிப்படையில் சீனியாரிட்டியை தீர்மானிக்காமல் இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி மற்றும் புரமோஷன்கள் வழங்கப்படவேண்டும் என்று வழக்கு தொடுத்தவர்களோ, “எம்.பி.சிக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பை பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி அமல்படுத்துவதை யாரும் எதிர்க்கவில்லை. காரணம், அது அவர்கள் பலவருடங்களாகப் போராடி பெற்ற உரிமை. ஆனால், சீனியாரிட்டி பட்டியல் தயாரித்துவிட்டுதான் புரமோஷன் பட்டியல் தயாரிக்கவேண்டும் என்பது விதிமுறை. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இட ஒதுக்கீட்டு மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்துவிட்ட பிறகு, 20 சதவீத இட ஒதுக்கீட்டின்படி பதவி உயர்வை வழங்கவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. ஆனால், உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பைக் கண்டுகொள்ளாமல் பணம் பேரம் நடத்தி மற்றொரு தீர்ப்பை மட்டும் அமல்படுத்தி எம்.பி.சி. மக்களை ஏமாற்றக்கூடாது” என்கிறார்கள். 

 

ஓட்டுக்காகவும் நோட்டுக்காவும் மக்களைக் குழப்பி ஏமாற்றாமல் உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் அமல்படுத்தி நேர்மையான சீனியாரிட்டிகளையும் புரமோஷன்களையும் வழங்கவேண்டும் அதிமுக அரசு.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.